உயிர் வெளியேற ஒன்பது வழி

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.  – (திருமந்திரம் – 175)

விளக்கம்:
அர்த்தம் இல்லாத இந்த உலக வாழ்க்கையின் மீது நமக்கு ஆசை பெருகி விட்டது. இந்த வாழ்க்கை நிலையானது இல்லை என்னும் உண்மையை நாம் உணர்வது இல்லை. நமது உடலையும் உயிரையும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் தறி ஒன்று உள்ளது. அந்தத் தறியின் கட்டு அவிழும்போது உயிர் வெளியேற ஒன்பது வழியிருக்கிறது. நாம் இறந்த பிறகு நம்மை இந்த பூமிக்குக் கொண்டு வந்த தாய் மற்றும் உறவினர்கள் எல்லாம் வணங்கிச் சுடுகாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.