சிவானந்தத் தேனை உணர்வோம்

காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல மும்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே. – (திருமந்திரம் – 326)

விளக்கம்:
காமமும் மதுவும் கீழ்மக்களுக்கே உரியதாகும். மதுவினால் நம்முடைய ஆணவம் அதிகரிக்கும். ஆணவம் மிகுந்தால், நம் சமயத்தில் உள்ளவற்றை உணர முடியாத அளவுக்கு அறிவு மயக்கம் உண்டாகும். நாளடைவில் அறிவு அழிந்தே போகும். புனிதனான அந்தச் சிவபெருமானின் திருவடியில் பிரணவமயமான ஆனந்தத் தேன் ஊறல் உண்டு. நாம் உணர்ந்து பருக வேண்டிய மது அதுவே ஆகும்.


உண்மையான இன்பம் தரும் மது

சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே. – (திருமந்திரம் – 325)

விளக்கம்:
மனம் உருக அந்தச் சிவபெருமானை நினைத்து சமாதி நிலையில் இருக்கும் போது, சிவானந்தம் என்னும் மது தொடர்ந்து ஊறும். அதுவே உண்மையான இன்பம் தரும் சுத்தமான மதுவாகும். நம் உள்ளே ஊறும் அந்த சிவானந்த மதுவை நாம் விட்டு விடக்கூடாது. வெளியே கிடைக்கும் மற்ற மதுக்கள் எல்லாம் கீழானவை ஆகும். அவை நம்மை செயலற்றவராய் கிடக்கச் செய்து விடும்.


மது விலக்கு

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே. – (திருமந்திரம் – 324)

விளக்கம்:
அரிசி வடித்த நீரான கழுநீரை விரும்பிக் குடிக்கும் பசுக்கள், குளங்களைத் தேடிச் சென்று நல்ல நீரைப் பருகாது. நல்ல நீரைப் பருகாமல் கழுநீரை மட்டுமே பருகுவதால், அந்தப் பசுக்கள் தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கின்றன. சில மனிதர்களும் அது போலத்தான். மதுவில் தனக்கு தேவையான எல்லாமே இருப்பதாக நினைத்துப் பருகுகிறார்கள். அப்படி மது அருந்துபவர்கள் தங்கள் ஒழுக்கத்தில் இருந்து விலகுகிறார்கள். அவர்கள் உயர்வு தரும், உண்மையான இன்பம் மிகுந்த சிவானந்தத் தேனை அறியாதவர்கள்.


தோன்றிய துயரெல்லாம் துடைப்பான்

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. – (திருமந்திரம் – 323)

விளக்கம்:
நம் மனத்தில் தோன்றும் மாயைகளை எல்லாம் துடைப்பவன் சிவபெருமானே அன்றி வேறு யார்? அந்த ஈசனின் திருவடியை எந்நாளும் ஏற்று நிற்போம். முதல்வனான அவன் திருநாமத்தை இடைவிடாமல் பற்றி நிற்க முயற்சி செய்வோம். அப்படிப் பற்றி நின்றால் நடுநிலையாகிய யோகநிலையில் நின்றவர் ஆவோம்.

ஏன்று – ஏற்று,  மூன்று – முயன்று என்பதன் திரிபு, நான்று – பற்றி


நடுவுநிலையில் நின்று சிவன் ஆவோம்

நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.  – (திருமந்திரம் – 322)

விளக்கம்:
நடுவு நிலையில் நிற்பவர்களில் சிலர் சிவஞானி ஆவார்கள். சிலர் சிவலோகத்தில் தேவர் ஆவார்கள். சிலர் சிவத்தன்மை அடைந்து சிவனாகவே ஆவார்கள்.

“அப்படிப்பட்ட நடுவு நிலை நிற்கும் அடியார்களில் ஒருவனாக நானும் நடுவு நிலையில் நின்றேனே” என்கிறார் திருமூலர்.


சிவத்தன்மை பெறலாம்

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.  – (திருமந்திரம் – 321)

விளக்கம்:
கரிய நிறம் கொண்ட அந்தத் திருமாலும் நடுவு நிலையில் நிற்கிறான். நான்கு வேதங்களை ஓதும் அந்த பிரமனும் நடுவு நிலையில் நிற்கிறான். நடுவு நிலையில் நிற்பவர்களில் சிலர் சிவஞானிகள் ஆவர். நாமும் நடுவு நிலையில் நின்றால், சிவத்தன்மை பெறலாம்.