தனஞ்சயன் என்னும் வாயு

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே.  – (திருமந்திரம் – 456)

விளக்கம்:
பூவின் மீது தவழும் காற்று, அதன் மணத்தை தான் போகும் இடமெல்லாம் சென்று பரப்புகிறது. அது போல ஆண் பெண் கூடலின் போது, ஒரு குறிப்பிட்ட காலத்தில்,  தனஞ்சயன் என்ற வாயு ஆணின் விந்தோடு சென்று பெண்ணின் கருப்பையில் அவிழ்கிறது. இதுவே கரு உருவாகக் காரணமாக அமைகிறது.

தனஞ்சயன் என்னும் வாயு தச வாயுக்களில் ஒன்றாகும். தச வாயுக்கள் என்பன – பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் ஆகியவை ஆகும்.