தானம் செய்தால் நரகம் தவிர்க்கலாம்

ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்
காமாதி விட்டோ ர்க்குந் தரல்தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.  –  (திருமந்திரம் – 507)

விளக்கம்:
நல்லவர்க்குத் தானம் செய்வதன் பயனை அறியாதவர் பஞ்ச மாபாதகர் ஆவார்.  குற்றம் இல்லாத சிவனடியார்களுக்கும் , சிவஞானம் அளிக்கும் குருக்களுக்கும், காமம் முதலிய குற்றங்களை விட்ட சிவயோகியர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தானம் செய்வதைப் பற்றிச் சொல்லித்தர வேண்டும்.  அப்படித் தானம் செய்து பிறருக்கும் கற்பிப்பவர்கள் ஞானம் பெறுவார்கள். தானம் அறியாத பாதகர்கள் செல்லும் நரகத்திற்கு அவர்கள் செல்ல மாட்டார்கள்.