திருமந்திரத்தை ரீமேக் செய்த ஔவையார்

முப்பதாம் வயது எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லும் ஒரு திருமந்திரப் பாடலை பிற்காலத்தில் ஔவையார் ரீமேக் செய்துள்ளார்.

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.

என்பது திருமூலரின் பாடல்.

நாட்களையும் மாதங்களையும் நாம் கணக்கிடுவது, இந்த உலகத்துக்குள்ளேயே இருக்கும் குளிர்ந்த சந்திரனையும் வெப்பமான சூரியனையும் கொண்டுதான். அது போல நம் உடலில் சந்திரகலை, சூரியகலை ஆகியவை உள்நின்று நமது ஆயுளை அளக்கின்றன. ஒருவர் தன்னுடைய முப்பதாவது வயதில் ஆன்மிகத்தில் விருப்பத்துடன் ஈடுபட ஆரம்பித்தால், அவர் தன் வாழ்நாள் முடிந்த பிறகு விண்ணுலகத்தை அடையும் பேறு பெறுவார். மற்றவர்களெல்லாம் மறுபிறவி என்னும் சுழற்சியிலேயே சிக்குவார்கள்.

இதே விஷயத்தை ஔவையார் நல்வழியில்

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.

என்று பாடியிருக்கிறார். “ ஒரு பெண்ணிற்கு முப்பது வயதில் இருக்கும் மார்பின் அளவுதான் அவளது முதுமையிலும் இருப்பதைப் போல, முப்பது வயதில் கற்கும் கலைகள் தான் முதுமை வரை வரும். அதனால் நாம் முப்பது வயதில் மூவாசைகளையும் ஒழித்து பரம்பொருளை நாடி தனக்குள் பெற வேண்டும்.” என்று சொல்கிறார்.

இதற்கு அடுத்த பாடலிலேயே திருமூலரைப் புகழ்ந்தும் பாடியுள்ளார். “திருக்குறள், நான்கு வேதங்கள், தேவாரம், திருவாசகம் – ஆகிய இவை யாவும் திருமூலரின் ஒரு வாசகத்திற்குச் சமம்.” என்கிறார்.


பழைய பாடலை நீங்களே DTSக்கு மாற்றலாம்

அரட்டைக்கு அடுத்தபடியா பாட்டு கேட்குறதுன்னா நமக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை. பாட்டு கேட்கும் முறையிலும் தனித்தனி ரசனை உண்டு. முப்பது வருஷத்துக்கு முன்னால, பரமசிவத்தோட அண்ணன் ஸ்பீக்கருக்கு மேல மண்பானைய கவுத்திப் போட்டு பாடலின் தாளத்தை ரசிப்பார். பக்கத்து வீட்டு ஆசாரி அண்ணன் 10 band equalizer உள்ள டேப் ரிக்கார்டர் வைத்திருந்தார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு விதமா equalizerயை அட்ஜஸ்ட் பண்ணுவார். ரமாக்கா வீட்ல சோனி வாக்மேன். அதில் தென்பாண்டி சீம ஓரமா பாட்டு கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கு. மத்தபடி நிறைய வீட்டுல ரேடியோ தான். இப்போ நெலமையே வேற மாதிரி இருக்கு. ஃபோன் பேசுற கருவியில பாட்டு கேட்கிற ஐடியா எந்தப் படுபாவிக்கு வந்ததுன்னு தெரியல. ரயில்ல நடு ராத்திரி மூணு மணிக்கு சோதனை மேல் சோதனை, போதுமடா சாமின்னு அலற விடுறாங்க. சினிமா தியேட்டர வீட்டுக்குள்ள கொண்டு வந்துட்டோம். ஹோம் தியேட்டர்ங்கிற ஆறு ஸ்பீக்கர் செட்ட ஹால்ல மாட்டி,  ப்ளுரே டிஸ்க்ல படத்த ஓட விட்டு LED TVல படம் பார்ப்போம்னு 20 வருஷத்துக்கு முன்னால நாம யாருமே நெனச்சுக் கூட பார்த்திருக்க மாட்டோம். சரவுண்ட் சவுண்ட்ல படம் பார்க்கிறவர்களுக்கு பழைய பாடல்களை இன்னும் ஸ்டீரியோவில தான் கேட்க வேண்டியிருக்கேன்னு ஒரு வருத்தம் இருக்கு.

ஸ்டீரியோவில் உள்ள ஒரு mp3 பாடலை நீங்களே 5.1 DTS க்கு மாற்றிக் கொள்ளலாம். Goldwave என்றொரு software உள்ளது. இதை பயன்படுத்தி பாடலில் உள்ள இரண்டு சேனல்களை ஆறு சேனல்களாக ஹோம் தியேட்டரக்கு ஏற்றவாறு பிரிக்கலாம். இது பற்றி விவரமாகச் சொல்லித்தரும் ஒரு வலைப்பக்கத்தின் இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன். பிரித்து வைத்த ஆறு சேனல்களை SurCode DTS encoder  பயன்படுத்தி 5.1 DTS பாடலாக மாற்றிக் கொள்ளலாம். Mp3ல் நாலரை mb இருக்கும் பாடல் dts பாடலாக 53 mb வருகிறது. கணினியில் windows media player பாடாது. VLC media playerல் கேட்கலாம்.

பழைய பாடல்களை DTS முறையில் கேட்பது நல்ல அனுபவமாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் சில விஷயங்களை அதற்கு முன் தெரிந்து கொள்ளுங்கள்.

  • பாடல் ரெக்கார்ட் செய்யும் போது ஆறு ட்ராக்காக பதிவது தான் உண்மையான DTS அனுபவத்தை தரும். software கொண்டு ட்ராக் பிரிப்பதை மேம்படுத்துதல் (enhancement) என்று வேண்டுமானால் சொல்லலாம். (சில பாடல்கள் வேறு விதமாகவும் ஆகலாம்.)
  • எந்த சாஃப்ட்வேராலும் ஒரு இசைக் கருவியின் சத்தத்தை மட்டும் தனியாக பிரித்து எடுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட frequency rangeஐ தனியாகப் பிரித்து எடுக்கிறது. அவ்வளவு தான்.
  • இந்த DTS பாடலை ஸ்டீரியோ ஸ்பீக்கரிலோ, ஹெட்ஃபோனிலோ கேட்டால் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது.
  • 5.1 ஹெட்ஃபோன் என்றொன்று விற்கிறது. இது அடிப்படையிலேயே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சரவுண்ட் சவுண்ட் என்பது ஒரு பெரிய அறையில், தியேட்டர் எஃபக்ட்டில் படம் பார்ப்பதற்கானது. ரொம்பப் பெரிய அறையாக இருந்தால் 7.1 தேவைப்படும்.
  • 5.1 ஹோம் தியேட்டரையே நாம் இன்னும் முறைப்படி உபயோக்கவில்லை. ஒவ்வொரு ஸ்பீக்கருக்கும் இடையே உள்ள தூரத்தை அளந்து DVD ப்ளேயரில் இன்புட் செய்து calibrate செய்ய வேண்டும். ஆனால் இந்த வசதி நிறைய ப்ளேயர்களில் கிடையாது. இருந்தாலும் நிறைய பேருக்கு இது பற்றித் தெரியாது.
  • அப்புறம் இன்னொரு விஷயம். இந்த  DTS ஆக மாற்றப்பட்ட பாடலை நீங்கள் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்ளலாம். இதை நீங்கள் விற்க முடியாது. அதற்கான உரிமை உங்களுக்குக் கிடையாது. உரிமை கோருவதும் அர்த்தமில்லாதது.

ஸ்டீரியோ பாடலை DTS முறைக்கு மாற்றுவது பற்றி விவரமாக இங்கே – http://originaltrilogy.com/forum/topic.cfm/You-can-convert-your-stereo-audio-to-51-channel-DTS-audio/topic/15177/


கிராஃபிக் டிசைனிங் – சில உதவிக்குறிப்புகள் பாகம்-02

ஒரு முழுமையான அழகுடைய பெண்ணைப் பார்த்தால், கண் நல்லாயிருக்கு, மூக்கு நல்லாயிருக்கு என்று பிரித்துச் சொல்லத் தோன்றாது. அது மாதிரி தான், நம்முடைய டிசைன், பார்ப்பவரை முழுமையான அளவில் ஈர்க்க வேண்டும், அப்படி இருந்தால் நாம் சரியாக செய்திருக்கிறோம் என்று அர்த்தம். பார்ப்பவருக்கு பேக் கிரவுண்ட், படம், டைப் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்துப் பார்க்கத் தோன்றக்கூடாது.  நாம் தான் நமது டிசைனின் முதல் பார்வையாளர், மனதளவில் தள்ளி நின்று, வேறு யாரோ செய்த டிசைனைப் பார்ப்பது போல பார்க்கும் மனோபாவத்தை பழகிக் கொள்வது நல்லது.

முதல் பாகத்தில் சொன்னது போல, டிசைனிங் ஆரம்பிக்கும் முன், சைஸ் தெரிந்து கொள்வது நல்லது. நம்முடைய முதல் ஸ்டெப், டாக்குமெண்ட் சைஸில் மேட்டரின் மொத்த அளவை இன்புட் செய்வதாக இருக்க வேண்டும். வெட்டுதல், மடித்தல் போன்றவை வரும் இடங்களில் Guide Lines போட்டுக் கொள்வது நல்லது. இப்படி ஆரம்பித்து வேலை செய்வது, நல்ல சாலையில் வண்டி ஒட்டுவது போல எளிதாக இருக்கும். குத்து மதிப்பாக ஒரு A4 documentல் ஆரம்பித்து மனக்கணக்கிலேயே வேலை செய்வது, ரோடு இல்லாத இடத்தில் வண்டி ஓட்டுவது போன்றதாகும், பாதியில் வழி தவறிப் போகும் வாய்ப்புண்டு. இதை over confidence என்றும் சொல்லலாம். இதைப் பற்றி இன்னும் விளக்கமாக இங்கே http://www.dayfold.com/Artwork/TabId/311/ArtMID/1018/ArticleID/17/Artwork-document-size-when-using-Cutter-Guides.aspx

புதிதாக வேலை பழகுபவர்களுக்கு, இரண்டு விதமான வழிமுறைகள் உண்டு. போட்டோஷாப்பிலும் கோரல்ட்ராவிலும் தெரிந்த toolsகளைக் கொண்டு, அந்த வட்டத்துக்குள் டிசைனை முடிப்பது. பெரும்பாலனவர்களுக்கு இதுதான் சாத்தியம், சுலபமான வழியும் கூட. இன்னொரு வழிமுறை, மனத்தில் தோன்றும் சில சித்திரங்களை எப்படி கணினியில் செயல்படுத்துவது என்று யோசித்து அந்த வழிமுறையை பழகிக் கொள்வது. கூகுளில் தேடினால், நமக்குத் தேவையான tutorials கிடைக்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு இடத்தில் உள்ள தலைப்பிற்கு fire effect இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும், ஆனால் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியாது. http://10steps.sg/tutorials/photoshop/text-on-fire-effect/ என்ற முகவரிக்குப் போனால எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இது போல தொடர்ந்து பல புது விஷயங்களை தெரிந்து கொள்வது க்ரியேட்டிவிட்டிக்கு உதவும்.

இன்னொரு முக்கிய விஷயம், சில நல்ல க்ரியேட்டிவிட்டி உள்ளவர்கள் கூட டிசைனை எங்கே முடிப்பது என்று தெரியாமல் திணறுவார்கள். நிறைய அலங்கார வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினால் finishing அழகாக இருக்கும். ஆனால் அதைத் தாண்டி இன்னும் மெருகேற்றலாம் என்று நினைப்பார்கள். ‘When your work speaks for itself, don’t interrupt’ என்றொரு பாடம் உண்டு. இந்த மனப்பயிற்சி முக்கியமான  விஷயம். சில சமயம், ஆரம்பித்து பத்து நிமிஷங்களில், நாம் எதிர்பார்ப்பதை விட நல்ல டிசைன் அமைந்து விடுவது உண்டு, அதோடு அந்த டிசைனை முடித்து விடுவது நல்லது. இன்னும் ஏதாவது செய்து பார்ப்போமே என்று நினைப்புத் தோன்றுவது வாடிக்கை, அந்த நினைப்பை அலட்சியப்படுத்துங்கள்.

அடுத்த பாகத்தில் Color Management பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

கிராஃபிக் டிசைனிங் – சில உதவிக்குறிப்புகள் பாகம்-01 இங்கே.


ரேகை இல்லாத உதடுகள்

ஆதி கால மனிதனுக்கும் மனிதிக்கும் உதடுகளில் ரேகை இல்லாமல் இருந்தது. இந்த மனிதிங்கிற வார்த்தை தான் மருவி இப்போ மதினின்னு ஆயிடுச்சு. ரேகை இல்லாத உதடுங்க எல்லாம் ஒரு வித மினுமினுப்போட ஈரத்தோட இருந்தது. இதனால ஆண் பெண் இடையே உள்ள அந்த தூண்டுதல் அப்போ கொஞ்சம் அதிகம். இதுல ப்ரச்சனை எங்கே ஆரம்பிச்சதுன்னா, தூண்டுதலின் வேகம் அதிகமா இருந்ததாலயும், உதடுங்க க்ரிப் இல்லாம வழுக்கலா இருந்ததாலயும் அடிபட்டு நிறைய பேருக்கு மூக்கு ஒடைஞ்சு போச்சு. இப்போ கூட பழைய கோவில்கள்ல பாருங்க, நிறைய சிலைகளுக்கு மூக்கு உடைஞ்சிருக்கும். பிறகு பரிணாம வளர்ச்சியில மனுஷனுக்கு உதட்டுல ரேகை வர ஆரம்பிச்சது, ஒரு க்ரிப்பும் கிடச்சது. அதனால தான் இப்போ நம்ம மூக்கு எல்லாம் முழுசா இருக்கு.

அப்ப எல்லாம் பசங்க யாருக்காவது மூக்கு ஒடஞ்சதுன்னா ஃப்ரண்ட்ஸ்ஸுக்கு பார்ட்டி வைக்கணும். மூக்கு சரியாகிற வரைக்கும் வீட்டு பக்கம் தலை காட்ட முடியாது. பொண்ணுங்க பாடு தான் கொஞ்சம் கஷ்டமா இருந்ததாம். ஆனாலும் இதெல்லாம் வயசுக் கோளாருன்னு கண்டுக்காம இருக்கிற மனப்பான்மையும் பெருசுங்ககிட்ட கொஞ்சம் இருந்திருக்கு. இந்த மாதிரி விஷயத்துக்குன்னே ஸ்பெசலிஸ்ட் வைத்தியர்களெல்லாம் இருந்திருக்காங்க. அந்த வைத்தியம் பத்தி அகத்தியர் எழுதின சில சுவடிங்க என்கிட்ட இருக்கு.

நம்ம நாட்டுல சத்தமில்லாம ரகசியமா ஒரு ஆராய்ச்சி நடந்துகிட்டு இருக்கு. செவ்வாய் கிரகத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஆளுங்கள கூட்டிட்டு போய் பாதி வழில கழட்டி விட்டா என்னங்கிறது தான் அந்த ஆராய்ச்சி. அங்கே வேலை பார்க்கிற ஒரு பெண் என் கூட படிச்சவ. அவள் சொன்ன தகவல் இது. முன்னெல்லாம் அங்கே உள்ள செக்யூரிட்டி சிஸ்டம் ரெட்டினா ஸ்கேன் பண்ணி தான் ஆளுங்கள உள்ளே விடுமாம். இப்போ ஆதார் அட்டைக்கே ரெட்டினா ஸ்கேன் உபயோகிக்கிறதுனால சிஸ்டத்த மாத்திட்டாங்களாம். டான் ப்ரௌன் கூட இந்த ரெட்டினா ஸ்கேன் பத்தி என்னமோ பெரிய டெக்னாலஜி மாதிரி எழுதி சாகடிச்சிருப்பார். இப்பெல்லாம் செக்யூரிட்டி சிஸ்டம் வேற மாதிரி. வேலைக்கு வர்றவங்க மூடியிருக்கிற கதவை கிஸ் பண்ணனும், சரியான ஆளா இருந்தா கதவு திறக்கும். இல்லேன்னா ஷாக் அடிச்சு அங்கயே சாக வேண்டியது தான். அங்கே உள்ள எல்லாருடைய உதட்டு ரேகைகளும் டேட்டா பேஸ்ல வச்சிருக்காங்க.

இது பத்தி டெக்னிக்கலா இன்னொரு சமயம் எழுதுறேன்.


கிராஃபிக் டிசைனிங் – சில உதவிக்குறிப்புகள் பாகம்-01

கிராஃபிக் டிசைனிங்கில் ஆர்வம் உடையவர்களுக்கு எனக்குத் தெரிந்த சில உதவிக் குறிப்புகளை (tips) இங்கே பகிரலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். இதில் ஃபோட்டோ ஷாப்பிலோ அல்லது கோரல் ட்ராவிலோ உள்ள கருவிகளின் உபயோகம் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. நாம் வேலை செய்யும் டிசைனின் தோற்றத்தை மேம்படுத்துவது பற்றி மட்டுமே எழுதுவதாக உள்ளேன். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் – டிப்ஸ் தரும் அளவுக்கு இவன் யார்? இவனுக்கு என்ன தெரியும்? என்று. அதைப் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன்.

நடிகர் சுருளிராஜன் ஒரு வில்லுப்பாட்டில் சொல்லுவார் ‘தெரியாதது எதுவோ, அதில தான் நாம முன்னுக்கு வர முடியும்’ன்னு. என் கதை அப்படித்தான். பதினஞ்சு வருஷமா இன்னும் எனக்கு புரிபடாத இந்த கிராஃபிக் டிசைனிங் தான் உண்ண உணவும், வசிக்க இடமும் தந்திருக்கிறது. இப்போதும் வாடிக்கையாளரை பக்கத்தில் வைத்துக் கொண்டு டிசைன் செய்வதை தவிர்த்து விடுகிறேன். அதற்கு காரணம், ஒரு டிசைனின் அடிப்படைத் தோற்றம் உருவாக நான் படும் பாட்டை பார்த்தால், எனக்கு டிசைனிங் தெரியாது என்னும் உண்மை வெளியே தெரிந்து விடும் என்பதால். சில சமயம் டிசைன் நன்றாக அமைந்து விடுவது உண்டு, அதற்கு காரணம் வாடிக்கையாளரின் ஜாதக விஷேசமே ஆகும். ஒவ்வொரு டிசைனுக்கும் அதிக நேரமும், முயற்சியும் எடுத்துக் கொள்வதால், அந்த அனுபவங்களில் இருந்து பகிர்ந்து கொள்ள சில விஷயங்கள் இருப்பதாக நம்புகிறேன்.

மிகவும் அடிப்படையான விஷயமாக நான் நினைப்பது, வாடிக்கையாளர் கொடுக்கும் இன்புட். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது முதலில் தெளிவாகத் தெரிய வேண்டும். டிசைன் செய்யப்பட வேண்டியது லேபிளா, போஸ்டரா, அட்டைப்பெட்டியா, புக் கவரா என்பதுடன் அதன் அளவு கண்டிப்பாக வேண்டும். நிறைய பேர் முதலில் சரியான அளவு தருவதில்லை. “ஒரு டிசைன் போடுங்க, சைஸ் பிறகு மாத்திக்கிடலாம்” என்பார்கள். கடுமையான சொல்லுக்கு மன்னிக்கவும், மிகவும் முட்டாள்தனமான வேலை வாங்கும் முறை இது. சைஸ் மாற்றுவது எளிய வேலை தானே என்பார்கள். அது கஷ்டமா அல்லது எளிதா என்பது ஒரு பிரச்சனை இல்லை. நன்றாக அமைந்த ஒரு டிசைன் பிறகு சைஸ் மாற்றப்படும் போது, அதுவும் அதன் நீள அகல விகிதம் மாறினால், டிசைனின் தோற்றப்பொலிவு குறைந்து போகும். ஒரு டெய்லரிடம் போய் யாரும் குத்து மதிப்பா ஒரு சட்டை தைங்க, அளவு சேரலைன்னா பிறகு ஆல்டர் பண்னிக்கிடலாம்ன்னு சொல்லுவதில்லை. எல்லாம் நம்மிடம் மட்டும்தான். இன்னொரு விஷயம், A4 size என்பார்கள். A4 size என்பது 210 mm x 297 mm, ஆனால் நம் ஊரில் letter size முதல் foolscap size வரை எல்லாமே A4 என்று சொல்வது வழக்கம். சரியான A4 size ப்ரிண்ட் செய்ய 63,5 cm x 86 cm பேப்பர் அவசியம், பொதுவாக நமது ப்ரிண்டர்கள் உபயோகிப்பது 58.5 cm x 91 cm ஆகும். அதனால் அளவு மில்லி மீட்டரில் இருந்தால் நல்லது.

வாடிக்கையாளரிடம் அளவு உட்பட எல்லா விபரங்களும் தயங்காமல் கேட்டு வாங்குவது ஒரு நல்ல டிசைனின் ஆரம்பம். ஒரு உற்பத்திப் பொருளுக்கு பேக்கிங் டிசைன் கேட்டால், அதன் விற்பனை விலை முதல் எல்லா விபரங்களும் நான் வாங்கி விடுவதுண்டு. காரணம், பேக்கிங்கிற்கு ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ அதிகமாக செலவழிக்க வாய்ப்பிருந்தால் அதற்கேற்ற மாதிரி spot color printing, foils அல்லது UV ஏதோவொன்று டிசைனிங்கின் போது திட்டமிட்டுக் கொள்ளலாம் என்பதால். அடுத்து பொருளின் பெயர், அதைத் தயாரிக்கும் கம்பெனியின் பெயர் இவற்றில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்வது. சில பெயர்கள் அர்த்தம் புரியாது, ஆனால் அந்த பெயருக்கு ஏதாவது காரணம் இருக்கும். அதை கேட்டுத் தெரிந்து கொண்டால் பொருத்தமான டிசைன் அமைப்பது சுலபமாக இருக்கும்.

வேலை ஆரம்பிக்கும் போது சரியான document size மற்றும் key line அமைத்து விடுவது அவசியம். இது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இப்போதைய trend
drop shadow, outer glow, outline போன்ற எதுவும் உபயோகிக்காமல்,
ஆனால் text எல்லாம் தெளிவாகத் தெரியும்படி layout செய்வது தான்.


சில பல கிறுக்கல்கள்

[liveblog]காலம் நம்மைக் கடப்பதில்லை. நாமும் காலத்தைக் கடப்பதில்லை. காலத்துடன் ஒருங்கிணைந்த பயணம் நம்முடையது.

மனிதன் வடிவமைத்த கான்செப்ட்களில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று கடவுள், மற்றொன்று பணம்.

மனிதன் கண்டுபிடித்த கடவுளை மறுப்பவர்கள் பணத்தையும் மறுப்பது தான் நியாயம்.

கடவுள், பணம் இரண்டுமே உருவமாகவும், அருவமாகவும் அருள் பாலிப்பவை.

முட்டைகள் தங்கள் இனத்தை பெருக்கிக் கொள்வதற்காக கோழிகளை இடுகின்றன.


ரஜினிகாந்த், ஓஷோ, டார்வின் மற்றும் திருமூலர்

ஃபேஸ்புக்கில் பார்த்த ஒரு வீடியோ நிறைய விஷயங்களை மனத்தில் அலசச் செய்தது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி தான் கேட்ட ஒரு சொற்பொழிவை மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார். அவர் சொன்னது இது தான் – “where there is a creation, there must be a creator. அந்த creator தான் கடவுள்”. இதை கேட்ட போது ஓஷோ நினைவில் வந்தார். அவர் ஏற்கனவே இதற்கு பதில் சொல்லியிருக்கிறார்.

அந்த ஓஷோவின் சொற்பொழிவில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி “கடவுள் இல்லை என்று நிஜமாகவே நம்புகிறீர்களா?” ஓஷோவின் நிதானமான பதில் இது “கடவுள் என்பவர் இல்லை, எனக்கு இது உறுதியாகத் தெரியும். அப்படி ஒருவர் இல்லை என்பதற்காக அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். கடவுள் என்னும் ஒருவரின் இருப்பு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும்”. மேலும் இது விஷயமாகப் பேசும் போது அவர் சார்லஸ் டார்வினின் சித்தாந்தத்தை கையில் எடுத்து ஒரு அருமையான விளையாட்டு ஆடியிருப்பார்.

“படைப்பு என்பது, ஒரு படைப்பாளியால் செய்து முடிக்கப்பட்ட  வேலையாகும். அவர் அந்த வேலையை முடித்து விட்டு வேறு வேலையை பார்க்கப் போய் விடுவார். அந்த படைப்பு தன்னளவில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த உலகம் அப்படிப்பட்ட ஒரு படைப்பு கிடையாது, டார்வினின் தத்துவப்படி இந்த உலகம் தன்னளவில் பரிணாம வளர்ச்சி (evolution) அடைந்து கொண்டே இருக்கிறது, இனியும் அப்படித்தான் இருக்கும். இந்த பரிணாம வளர்ச்சி ஒரு பரிபூரண நிலையை, தன்னுடைய இலக்காக நோக்கி பயணம் செய்கிறது. அந்த பரிபூரண நிலை ஒரு நாளும் கிட்டப்போவதில்லை, இந்த வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதனால் இந்த உலகத்தை creator, creativity என்று தொடர்புபடுத்திப் பேசுவது பொருத்தமில்லாதது” இது ஓஷோவின் வாதம்.

ஓஷோவின் இந்த வாதத்துக்கு பதில் கிடைக்குமா என்று தேடினால், அந்த பதில் திருமூலரிடம் இருக்கிறது.

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரியயற் காமே.

டார்வின் விஞ்ஞான பூர்வமாகச் சொன்ன விஷயத்தை திருமூலர் எப்படிச் சொல்கிறார் என்று பாருங்கள். “ இந்த உலகம் தன்னளவில் எப்போதுமே இளமையாகவும், அழகோடும், ஒரு எல்லைக்குள்ளேயும் இருக்கிறது. Evolution என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்! உலகம் தோன்றி கோடிக்கணக்கான வருடம் ஆன பிறகும், நாம் யாரும் இன்னும் இது பழைய உலகம், இந்த உலகத்திற்கு வயசாகி விட்டது என்று சொல்வதில்லை. டார்வினின் வார்த்தையில் இது evolution, திருமூலர் சொல்வது எப்போதும் இளமை. அது மட்டுமில்லை, இந்த உலகத்தின் அழகு (அந்தம்) எப்போதுமே குறையாமல் இருக்கிறது. இதன் வளர்ச்சியில் எல்லாம் ஒரு ஒழுங்கு இருக்கிறது, அதைத்தான் எல்லை (ஈறு) என்கிறார். இது பற்றி கீதையிலும் வியந்து பேசப்படுகிறது. இன்னொரு விஷயம் திருமூலர் இந்தப் பாடலில் சொல்வது ‘அளவியல் காலம்’. இந்த உலகம் இது வரை இருந்த காலம், இனி இருக்கப் போகும் காலம் – இதெல்லாம கணக்கிட முடியாதது, எல்லையில்லாதது ஆகும்.

இதையெல்லாம் சொல்லி விட்டு திருமுலர் வைக்கும் பன்ச் இது தான் “இந்த விஷயங்களை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள். அந்த சங்கரன் எவ்வளவு சோர்வில்லாதவன் என்பது உங்களுக்குப் புரியும்”. Got it?

ஓஷோ மாதிரி யாராவது வந்து குழப்புவாங்கன்னு தெரிஞ்சு தான், நம்மாளுங்க எப்பவுமே படைப்பு என்பதை படைத்தல், காத்தல், அழித்தல் – இந்த மூணையும் சேர்த்தே சொல்வாங்க.


பொருள் கொடுத்து இருள் வாங்கலாமா?

பழமொழி நானூறு பற்றிய என்னுடைய பதிவுகளின் நோக்கம் பழம்பெருமை பேசுவதல்ல, இலக்கியம் பற்றி பேசுவதும் அல்ல. நான் இந்த நூலை சுய முன்னேற்றப் புத்தக வரிசையில், ஒரு சிறந்த நூலாகப் பார்க்கிறேன். நிறைய சுய முன்னேற்ற நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன, எவ்வளவு சிறப்பான நூலாக இருந்தாலும் அவற்றில் ஒரு அன்னியத் தன்மையை உணர முடியும். ஆனால் இவை நமது மொழியிலேயே எழுதப்பட்டவை, ஆயிரக்கணக்கான வருடங்களாக நமது மக்களின் பேச்சு வழக்கில் இருந்த பழமொழிகள் இவை.

பழமொழி நானூற்றில் உள்ள பொருட் செறிவைப் பற்றி ஆராயும் பொறுப்பை உங்களிடமே விடுகிறேன். பாடலுக்கு நான் எழுதியிருக்கும் விளக்கங்கள் ஒரு சின்ன வழிகாட்டி, அவ்வளவு தான். விளக்கத்தைப் படித்த பின் மறுபடியும் பாடலைப் படித்துப் பாருங்கள், உங்கள் வாழ்க்கை அனுபவத்திற்கு ஏற்ப இன்னும் பல நுணுக்கமான பொருள்கள் விளங்கும். இந்த நூலில் உள்ள நானூறு செய்யுள்களும், நம் முன்னோர்களின் பல ஆயிரம் வருட வாழ்க்கை அனுபவங்களின் சாரம், அதனால் இதன் பொருள் புரியும் போது பாடல்கள் எல்லாம் மனதிற்கு நெருக்கமாகி விடும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும், அவ்வளவு தான். பலாப்பழத்தை வெட்டி சுளை எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் சுளையின் ருசி?

இந்தக் கட்டுரையில், பழமொழி நானூற்றில் கல்வி என்னும் தலைப்பில் உள்ள பத்து பாடல்களைப் பற்றி பார்க்கிறோம். ‘Empty your cup’ என்று ஒரு ஜென் மொழி உண்டு. கிட்டத்தட்ட அதே பொருளில் ஒரு பழமொழியும் உண்டு – ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’. கற்றலின் போது ஏன் அப்படி தமக்கு எல்லாம் தெரியும் என்கிற மனநிலையை விலக்க வேண்டும் என்பதற்கும் பாடலில் விளக்கம் உண்டு. பாடல்களைப் பார்ப்போம் இப்போது.

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

1. ‘சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை.’ 2. ‘மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை.’ – இவை இந்தப் பாட்டில் வந்த பழமொழிகள். இளமையில் கல்வி கல்லாதவன் முதுமையில் கற்பது கடினம்! சுங்கச் சாவடியில் வரும் வண்டிகளை போக விட்ட பிறகு வரி வசூல் செய்ய முடியுமா? ஆற்றைக் கடக்க உதவும் ஓடக்காரன், ஆற்றைக் கடந்த பின் பயணிகளிடம் காசு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் காசு வந்து சேருமா? இளமை இருக்கும் போதே முடிந்த அளவு கல்வி கற்று விட வேண்டும்.

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.

கற்றறிந்த ஆசிரியர் முன்பு, கல்வி கற்கும் மாணவர்கள் நமக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையை தவிர்க்க வேண்டும். தன்னுடைய பாடத்தில் கவனத்தைக் குவித்துப் பொருள் அறிந்து கற்க வேண்டும். ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’ என்பது பழமொழி. நிறைய விஷயங்கள் தெரிந்த மாதிரி பெரியவர்களிடம் நாம் பேசினால், அவர்களும் நம்மிடம் அது பற்றி விரிவாக பேசுவார்கள். அப்போது எங்கே ஏதாவது ஏடாகூடமாக பதில் சொல்லி மாட்டிக் கொள்வோமோ என்ற பயமே நமக்கு சோர்வைக் கொடுக்கும். அந்த மனநிலையை தவிர்த்தால் பாடத்தில் கவனமும் குவியும்.

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளா ரிருள்.

விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை விலை கொடுத்து வாங்குவது, அந்த விளக்கு இருள் நீக்கி தெளிவான காட்சி காட்ட வேண்டும் என்பதற்காக. நாம் கற்கும் கல்வி, அறிவு வெளிச்சத்தைத் தருவதாக இருக்க வேண்டும். ‘பொருள் கொடுத்து கொள்ளார் இருள்’ என்பது பழமொழி.  கற்கும் கல்வி நேர்மையான நல்ல விஷயத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். யாராவது காசு கொடுத்து இருட்டை வாங்குவார்களா? எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், சாஃப்ட்வேர் எழுதுபவர்கள் புரோகிராமும் எழுதலாம், வைரஸும் எழுதலாம். படித்த படிப்பெல்லாம் வைரஸ் எழுதத்தானா?

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.

நன்கு கற்ற அறிவுடையவர்கள், உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அவர்களின் கல்வி அறிவுக்கு அங்கு நல்ல வரவேற்பிருக்கும். அவர்களுக்கு அங்கு உணவு பற்றிய கவலை தேவையில்லை. கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. ‘ஆற்று உணா வேண்டுவது இல்’ என்பது பழமொழி. நிறைந்த கல்வி கற்றவர்கள் பல நாடுகளுக்குச் சென்று வருவார்கள், அவர்களுக்கு அது வேறு நாடு என்ற தயக்கமெல்லாம் இருக்காது. தம் திறமையினால் நிறைய சம்பாதிக்கவும் செய்வார்கள், அதனால் அவர்களுக்கு உணவு பற்றிய கவலையெல்லாம் கிடையாது.

உணற்கினிய இன்னீர் பிறிதுழிஇல் லென்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா தினிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.

கிணற்றில் வாழும் தேரை, இந்தக் கிணறு தவிர வேறு எங்கும் நல்ல நீர் கிடைக்காது என்று நினைக்கும். கல்வி கற்கும் மாணவர்கள், அது போல் இல்லாது, தாம் கற்கும் நூல்களைத் தவிர பிற நூல்களைப் பற்றியும் கேட்டு அறிவதே நல்லது. ‘கற்றலிற் கேட்டலே நன்று’ என்பது பழமொழி. புத்தகங்களை  படிப்பதோடு நின்று விடாமல், விஷயம் தெரிந்தவர்களுடன் உரையாடுவதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது.

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

‘சிறுவனான இவனுக்கு வழக்கு முடிவு சொல்லத் தெரியாது’ என நினைத்தவர்களுக்கு மத்தியில் நரைமுடியுடன் வயதான வேடத்தில் வந்து வழக்கு தீர்த்தவன் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன். ‘குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்பது பழமொழி. ஒருவன் கற்கும் கல்வி, தன் குடும்பத்தினரின் தொழில் சம்பந்தப்பட்டதாக இருந்தால் அந்தக் கல்வி மிகவும் எளிதாக இருக்கும்.

புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புன லூர பொதுமக்கட் காகாதே.
பாம்பறியும் பாம்பின கால்.

சிறந்த கல்வி அறிவுடையவரின் திறனை, பிற அறிஞர்கள் எளிதாக  அடையாளம் கண்டு உணர்வார்கள். ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பது பழமொழி. கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கற்றவர்களுடைய அறிவின் தன்மை விளங்காது.

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற் றென்றும்
அயிலாலே போழ்ப அயில்.

ஒரு இரும்பை இன்னொரு கூர்மையான இரும்பைக் கொண்டுதான் பிளக்க முடியும். அது போல நன்கு கற்ற ஒருவரின் கண்ணோட்டத்தை, அவரை விட நன்கு கற்றவராலேயே உணர முடியும்.  ‘அயிலாலே போழ்ப அயில்’ என்பது பழமொழி. நல்லார் என்பதற்கு கற்றார் என்பது இங்கே பொருள். நலம் என்பதற்கு கண்ணோட்டம் என்றும் பொருள் உண்டு.

கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.

முழுமையான கல்வி கற்றவர்கள், தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ள மாட்டார்கள், அடக்கமாக இருப்பார்கள். முழுமையாகக் கற்காதவர்கள் தான் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள். ‘நிறைகுடம் நீர் தளும்பல் இல்’ என்பது பழமொழி. கற்றவவர்களின் அடக்கத்தின் பின்னால் இருக்கும் திறமைகள், அரைகுறைகளுக்குப் புரியாது.

விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு.

தரம் குறைந்த நூல்களை நாடாமல், நல்ல நெறிகளைப் படித்து உணர்ந்து அதன்படி நடப்பவர்கள் அதிகாரத்துடன் வாழ்வார்கள். அவர்கள் கொஞ்சம் கீழ்த்தரமாக நடந்தால் கூட நிலாவில் உள்ள கறை போலப் பெரிதாகத் தெரியும். ‘மதிப்புறத்துப் பட்ட மறு’ என்பது பழமொழி.


சத்தாதி நான்கிலும் இளையராஜா

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே. – (திருமந்திரம் – 1593)

விளக்கம்:
குண்டலினி சிரசினில் பொருந்தியிருக்கும் நிலை சமாதியாகும். அதுவே திருவடிப் பேறுமாகும். நாம் அந்நிலை அனுபவிக்கும் போது பேச்சு அற்று போகும், உணர்வு அழிந்து நான் என்ற நிலை மறந்து போகும். அலையில்லாத தெளிந்த நீரைப் போன்ற சிவத்தன்மை அனுபவமாகும். நான்கு வகை ஓசைகளான செவியோசை, மிடற்றோசை, நினைவோசை, நுண்ணோசை ஆகியவற்றைக் கடந்து விடலாம். அந்த சிவபெருமான் நம்மை நம்முடைய உண்மையான சொரூபத்தில் இருத்தினான், அதனால் பேச்சற்றுப் போனோமே.

சமாதி நிலையில் சிரசினில் இறைவன் திருவடியை மட்டுமே உணர்ந்திருப்போம். மற்ற எல்லா உணர்வுகளும் அற்றுப் போகும்.

சத்தாதி என்பது நான்கு வகை ஓசைகளைக் குறிக்கும். இது பற்றி எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இளையராஜா ரசிகர்களை வைத்து உதாரணம் சொல்லலாம். முதலில் செவியோசை, நம் காதில் விழும் சுற்றுப்புற ஒசை. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு ராஜாவின் இசை தவிர மற்ற இசை கேட்டால் காது சிவந்து ஒவ்வாமை ஏற்படுகிறது. அடுத்து மிடற்றோசை, நம் தொண்டையிலிருந்து வந்து நமக்கே கேட்கும் ஓசை. ராஜாவின் பாடல்களைக் கேட்டு ஹம் செய்வோமே, அதேதான். மூன்றாவது நினைவோசை, அந்த தென்றல் வந்து பாட்டு மண்டைக்குள்ளயே சுத்திகிட்டு இருக்குன்னு சொல்வாங்களே, அதேதான். ஒரு முறை கேட்ட பாட்டு திரும்பத் திரும்ப நினைவில் சுற்றி வரும் ஓசை அது. கடைசியாக நுண்ணோசை, இது அவ்வளவு எளிதாகக் கேட்க முடியாதது. நம் உடலினுள் ரத்தம் பாய்வது, மூச்சு உள்ளே சென்று வருவது போன்ற கேட்க முடியாத நிறைய ஓசைகள் உண்டாம். ஒரு பூ மலர்ந்து விரியும் போது அங்கே ஒரு நுண்ணோசை நிகழுமாம். ராஜா ரசிகர்களைக் கேட்டுப் பாருங்கள், மனம் நெகிழும் ஓசையை நிறைய முறை கேட்டிருப்பதாகச் சொல்வார்கள்.

In the state of Samadhi, we'll be speechless,
There will be no other feelings. Our egotism will be dissolved.
We'll be unite with Lord Siva. We'll not hear any sound surround us.
The Lord will keep us in our natural state .

கடவுள் ஸார்!

ஸார்! கடவுள் ஸார்! நாம் கூப்பிடுறது கேட்கலையா ஸார்?

“கேக்குது சேதனன் ஸார். சொல்லுங்க ஸார். என்ன வேணும்?”

“ஸார், ஒரு வரம் வேணும் ஸார்”

“தயங்காம கேளுங்க ஸார்”

“ஒரு ஞாயிறு சாயங்காலம் என்னோட இருக்கணும்”

“என்ன புரோகிராம் சேதனன் ஸார்?”

“நான் எழுதின சில கதைகள நீங்க வாசிக்கணும் கடவுள் ஸார்”

“வாசிச்சா?”

“ஒரு வடையும் டீயும் வாங்கித் தருவேன் ஸார்”

“நல்ல மசாலா டீயா இருக்கட்டும் சேதனன் ஸார்”

“ஆனா ஒரு கண்டிஷன் ஸார். படிக்கும் போது கொஞ்சமும் முகம் சுளிக்கக் கூடாது. சுளிச்சா வடைய பிடுங்கிருவேன்”

“ம்ம். அடுத்த புரோகிராம் என்ன ஸார்?”

“ஒரு சினிமாவுக்கு போறோம் கடவுள் ஸார்”

“என்ன படம் ஸார்?”

“பரதேசி ஸார்”

“ஓ! விகடன் கூட நிறைய மார்க் போட்டிருக்கு. போலாம் ஸார்”

“ஒரு சின்ன விண்ணப்பம் கடவுள் ஸார்”

“சொல்லுங்க ஸார்”

“படம் பார்த்துட்டு ஒரு விமர்சனம் எழுதித் தரணும் ஸார். அதுல யாருமே யோசிக்காத கோணமெல்லாம் இருக்கணும் ஸார்”

“ஓண்ணும் ப்ரச்சனை இல்ல ஸார், சத்யம் சினிமாஸ்ல என்னோட ஆத்துக்காரிக்கும் சேர்த்து டிக்கட் புக் பண்ணிருங்க. போக வர என் டி எல் டாக்ஸிக்கு சொல்லிருங்க”

“ஸார்…”

“ஏன் சேதனன் ஸார் தலைய சொறியுறீங்க?”

“கடவுள் ஸார்! இதுக்கெல்லம் நீங்க காசு கொடுப்பீங்களா? என்கிட்ட வடையும் டீயும் வாங்கத்தான் காசு இருக்கு. நீங்க தான் நெறைய காசு வச்சுருப்பீங்களே ஸார்”

“சேதனன் ஸார்! காசில்லாதவனுக்கு எதுக்கு ஸார் பரதேசியும் விமர்சனமும்? போய் பொழப்பப் பாருங்க ஸார்”

________________________________________________________________________________________________________________________

Note to self – நாளைலருந்து ஒழுங்கா பொழப்பப் பாக்கணும்.