கன்மயோகத்தினால் அட்டமாசித்தி பெறலாம்

இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாமந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகுந் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே.  –  (திருமந்திரம் – 644)

விளக்கம்:
கன்ம யோகத்தில் இருபதினாயிரத்து எண்ணூறு வகை உண்டு. கன்ம யோகம் உடல் உழைப்பைத் தருவதோடு கிடைப்பதற்கு அரிதான அட்டமாசித்தியை அளிக்க வல்லது!

மெய்ப்பொருளை உணர்வோம்!

காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.  –  (திருமந்திரம் – 643)

விளக்கம்:
வானம் முதலான ஐந்து பூதங்கள், அவற்றைப் பற்றிய கல்வி, காலம், இவற்றால் ஏற்படும் மாயை ஆகியவற்றில் சிக்காமல் அகன்ற அறிவு ஒன்றை நாடுவோம். புற உலகைப் பற்றிய விஷயங்களைத் தேடாமல் மெய்ப்பொருளை நாடுவோம். மெய்ப்பொருளை நாடும் அகன்ற அறிவுடன், தொடக்கமில்லாத அனாதியான  ஓய்வேயில்லாத சிவபெருமானின் தன்மையை உணர்வோம். மெய்ப்பொருளை உணர்ந்தால் அழிவில்லாத பரவெளியை அடையலாம்.

வசித்துவம் – எட்டாம் சித்தி

குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.  –  (திருமந்திரம் – 642)

விளக்கம்:
யோககுருவின் வழிகாட்டுதலின் படி நாம் தியானம் செய்வோம். அத்தியானத்தினால் மூலாதாரத்தில் உள்ள சக்தி சகஸ்ரதளத்தில் இருக்கும் சிவனைச் சேரும். அந்தச் சரியான சமயத்தில் தெளிவு தரும் சாம்பவி, கேசரி ஆகிய யோகங்களைச் செய்பவர்களுக்கு எட்டாம் சித்தியான வசித்துவம் வாய்க்கும். இதை விடச் சிறந்த சிவகதி ஏது?

குரவன் – குரு, பரை – பராசக்தி, சங்கட்டம் – நல்ல சமயம்

அட்டமாசித்தியை விட உயர்ந்த பரிசு ஏது?

பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.  –  (திருமந்திரம் – 641)

விளக்கம்:
அவரவர் பக்குவத்திற்கு ஏற்றபடி அருள் தரும் பண்பு உடையவன் நம் சிவபெருமான். அவனுடைய திருவடியே கதி என நாடி, மனத்தில் எந்தவித சந்தேகமும் இல்லாமல் சரண் அடைந்தேன். அங்கே தூய்மையான பரவெளியைக் கண்டேன். இனி இந்த உலகில் நான் ஆசைப்படக்கூடிய அரிய பொருள் என்று எதுவும் இல்லை. ஏனென்றால் மிக அரிய பரிசான அட்டமாசித்தியை எனக்கு அளித்து என் பிறப்பறுத்தான் என் சிவபெருமான்.

சிவபெருமானை அணிந்து கொள்வேன்!

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.  –  (திருமந்திரம் – 640)

விளக்கம்:
அட்டமாசித்தி எனப்படும் எட்டு விதமான மாபெரும் சக்திகளைப் பெற நாம் எட்டுத் திசைகளிலும் சிவபெருமானைத் தேடிச் சென்று முழு நம்பிக்கையுடன் அவனை வணங்க வேண்டும். அன்பு மிகுதியால் சிவபெருமானை நாம் அணிந்து கொள்ள வேண்டும். உலக விஷயங்களின் மேல் உள்ள ஆசைகள் எல்லாம் தணிந்து சிவபெருமானைத் தொழுது இருந்தால் அட்டமாசித்திகளைப் பெற்று அச்சக்திகளை நிலை நிறுத்தலாம்.

பிறவிச் சுழலில் நீந்த உதவுவான்!

அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.  –  (திருமந்திரம் – 548)

விளக்கம்:
யாரையும் விட  வல்லவன் சிவபெருமான். அவன் நாம் பெறும் ஞானத்தினுள் தோன்றி அருள்வான். அளவில்லாத பெருமை கொண்ட நம் பெருமான் நாம் பிறவிச்சுழலை நீந்திக் கடக்க உதவி செய்வான். நம்மிடம் மட்டில்லாத உரிமை கொண்டுள்ள அவன் நம்முடைய தேடலை உணர்ந்து நெடுங்காலம் நமக்குத் துணையாக இருப்பான். இவையெல்லாம் பெறுவதற்கு முதலில் நாம் ஞானம் பெற வேண்டும். அந்த ஞானம் பெற நாம் சிறந்த சிவனடியார்களின் துணையைப் பெற வேண்டும்.

சிவபுரத்தில் சிறப்பான வரவேற்பு உண்டு!

உடையான் அடியார் அடியா ருடன்போய்
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலம் என் றாரே. –  (திருமந்திரம் – 547)

விளக்கம்:
எல்லாம் உடையவனான சிவபெருமானின் அடியார்களைத் தேடிச் சென்று நாமும் சிவனடியாராய் ஆவோம். அப்பெரியவர்களின் துணையோடு நாம் தழல் போன்ற மேனியன் ஆன சிவபெருமான் தனது படைகளுடன் வசிக்கும் சிவபுரத்தை அடையலாம். சிவபுர வாயிலை நாம் அடையும் போது நாம் அங்கே வரும் செய்தியை சிவபெருமானிடம் அறிவிக்க, பெருமானும் நம்மை வருக என வரவேற்பார். நாமும் மகிழ்ச்சி தாங்காமல் ஓலமிட்டு அழுவோம்.

சிவனை உறவினராய் நினைப்பவர்!

தாழ்சடை யான்தன் தமராய் உலகினில்
போர் புகழால் எந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளம் தேர்வார்க்கு அருள்செய்யும்
கோவடைந்து அந்நெறி கூடலு மாமே. –  (திருமந்திரம் – 546)

விளக்கம்:
நீண்ட சடை கொண்ட சிவபெருமானை தம் உறவினனாய் பாவித்து வாழும் பெரியவர்கள் நிறைந்த புகழைப் பெறுவார்கள். அவர்கள் இறுதியில் தாம் விரும்பிய சிவனடியை அடைவார்கள். நாம் அந்தப் பெரியவர்களைத் தேடிச் சென்று அவர்களுடன் பழகி நம் உள்ளம் தெளியப் பெற வேண்டும். தெளிவடையும் உள்ளத்தை சிவபெருமான் வந்தடைவான். அதனால் நாம் பெரியவர்களின் துணையைப் பெற்று அவர்கள் காட்டும் நன்னெறியில் நடப்போம்.

போர் புகழால் – போர்த்த புகழால்

நன்னெறி தான் அருள் தரும்!

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே. –  (திருமந்திரம் – 545)

விளக்கம்:
விஷயம் தெரிந்தவர்கள் தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானை நாடிச் சென்று அவனுடன் நெருக்கமாக இருப்பார்கள். நன்னெறி தான் அருள் பெறுவதற்கு சிறந்த வழியாகும். அப்படி நன்னெறியில் நின்று சிவபெருமானை நாடி நிற்பவர்கள் பரமான்மா பற்றிய உண்மையை உணர்வார்கள். அப்படிப்பட்ட பெரியவர்களை நாம் தேடிச்சென்று அவர்கள் காட்டும் வழியில் நடப்போம். அதுவே பேரின்பமாகும்.

திருமூலர் சென்ற இடத்துக்கு நாமும் செல்லலாம்!

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத்து அங்குஅன்பு வைத்த திலையாகும்
நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே
போமிடத் து என்னொடும் போதுகண் டாயே. –  (திருமந்திரம் – 544)

விளக்கம்:
தளிர் போன்ற நம்முடைய மனம் உலக விஷயங்களில் சிக்கி இடர்ப்பட்டு வாடிவிடுகிறது. நமது இடர்களுக்குக் காரணம் உலக விஷயங்களில் நாட்டம் கொள்வது தான் என்பதைப் புரிந்து கொண்டு, இறைவனிடம் அன்பு வைத்ததில்லை.

“ஏன் இப்படி உங்கள் மனத்தை இடர்பாட்டிலேயே வைத்திருக்கிறீர்கள்? ஞானம் பெற்ற பெரியவர்களின் துணை கொண்டு உங்கள் மனத்தை இறை வழியில் திருப்புங்கள். அப்படிச் செய்தால் நீங்களும் நான் போகும் இடத்துக்கு வருவீர்கள்” எனத் திருமூலர் சொல்கிறார்.