சேர்ந்த வினைகளைச் சுட்டுப் பொசுக்குவோம்!

தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே.   – (திருமந்திரம் – 430)

விளக்கம்:
நினைத்த பொழுது எல்லாவற்றையும் மொத்தமாக அழித்து விடக்கூடிய வலிமையான கடவுள் ஒன்றுண்டு. அது நம் சிவபெருமானாகும். நாம் நம்முடைய வினைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கி விட்டு நம் பெருமானைச் சார்ந்திருப்போம். நமக்கெல்லாம் உடலைக் கொடுத்த சிவபெருமான், எங்கும் கலந்திருக்கும் தன்னை நினைத்திருக்கும் வழியையும் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். நாம் தான் அதை உணர்ந்து அந்த வழியில் செல்ல வேண்டும்.


எல்லாம் வெற்றிடத்தில் இருந்து தோன்றியவை!

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.   – (திருமந்திரம் – 429)

விளக்கம்:
முதலில் ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடத்தில் இருந்து உலகம் தோன்றி பலவாறாய் வளர்ந்தது. பேரழிவின் போது இந்த உலகம் அழிந்து போனாலும், அந்தப் பழைய வெற்றிடம் அழியாது. உலகம் தோன்றுவதற்கும் அழிவதற்கும் இடையே உள்ள காலம் மட்டும் தான் பிரமன், திருமால் ஆகியோருக்குத் தொழில் இருக்கிறது. உலகம் அழியும் போது அவர்களது தொழிலும் அழிந்து விடும்.

பாழ் – வெற்றிடம், அழிதல்
செய்தி – தொழில்


வீடுபேறு – நான்காவது நிலை

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமும் நாலா மதிக்கிலே.   – (திருமந்திரம் – 428)

விளக்கம்:
நித்திய சங்காரம், நமக்கு அன்றையப் பொழுதின் களைப்பிலிருந்து உடலுக்கு இளைப்பாறுதல் தருகிறது. ஆயுட் சங்காரம், உடலுடன் மனம் முதலியவற்றிற்கும் இளைப்பாறுதல் தருகிறது. சருவ சங்காரமே நம்மை உய்விக்கும் சங்காரமாகும். ஏனென்றால் சருவ சங்காரத்தில், பிறத்தல், வாழ்தல், இறத்தல் ஆகிய நிலைகளைத் தாண்டி வீடுபேறு எனும் நான்காவது நிலையை அடைகிறோம்.


இடர் நீக்கும் சங்காரம்!

நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.   – (திருமந்திரம் – 427)

விளக்கம்:
நித்திய சங்காரம், கருவினால் உருவான நமது உடலின் துயரங்களை நீக்கும். ஆயுட் சங்காரத்தில் உடல், உயிர் ஆகியவற்றின் துயர் நீங்கும். சருவ சங்காரம் இவற்றை எல்லாம் கடந்து சூக்கும உடலின் துயரையும் அழிக்கிறது. துயரங்கள் நீங்கி நாம் உய்யும் பொருட்டே சங்காரம் நடைபெறுகிறது. சங்காரம் என்பது அவனது அருளே ஆகும்.


சூக்கும உடலும் அழிய வேண்டும்

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே.   – (திருமந்திரம் – 426)

விளக்கம்:
மூன்று வகையான சங்காரங்களை வேறு விதமாகச் சொல்வதென்றால், நித்திய சங்காரத்தில் தூல உடலும் சூக்கும உடலும் தற்காலிக ஓய்வு பெறும் (தூக்கம்). ஆயுட் சங்காரம் என்பது தூல உடல் மட்டும் அழிவது (மரணம்). சருவ சங்காரம் என்னும் சுத்த சங்காரத்தில் தூல உடலும் அழிந்து, சூக்கும உடலும் அழியும். நமது ஆணவம் அழியப் பெற்றால் சிவனருளைப் பெற்று உய்வடையலாம்.

நமது மரணத்தின் போது, சூக்கும உடலும் அழிய வேண்டும். அதுவே நாம் உய்வடையும் வழி. அதற்கு வேண்டிய சிவனருளை வாழும் போதே பெற வேண்டும்.


மூவகைச் சங்காரங்கள்!

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே.   – (திருமந்திரம் – 425)

விளக்கம்:
சிவபெருமான் மூன்று வகையான சங்காரங்கள் செய்வது உண்டு. அவை நித்திய சங்காரம், ஆயுட் சங்காரம், சருவ சங்காரம் ஆகியனவாகும். நித்திய சங்காரம் என்பது நம்முடைய அன்றாடத் தூக்கம் போன்றது. ஆயுட் சங்காரம் என்பது நமது ஆயுள் முடிந்தவுடன் நமது உடல் மட்டும் அழிவதாகும். சருவ சங்காரம் என்பது உடலுடன் நமது ஆன்மாவும் தனது தொழிலை விட்டுச் செயலற்று இருப்பது.

ஆணவம் அழியப் பெறுவதே நம்மை உய்வடையச் செய்யும் சங்காரமாகும். நாம் அந்தச் சங்காரத்தைச் செய்தால் சிவனருள் கிடைப்பது உறுதி.


அழிவு நிச்சயம்!

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி
ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.   – (திருமந்திரம் – 424)

விளக்கம்:
மலைகளின் மேலே உள்ள மேகங்களில் இருந்து மழையாக இறங்கி வரும் குலமகள், நீர்நிலைகளிலும், கடலிலும் தங்கி நமக்கெல்லாம் வாழ்வளிக்கிறாள். அதே நேரத்தில், நம் சிவபெருமான் தான் பக்குவம் செய்த இந்த மொத்த உலகத்தின் மீது நெருப்பை திரட்டி வைக்கிறான். அதனால் இந்த உலகிற்கு அழிவு என்பது உண்டு என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.


சிவபெருமானின் வல்லமை

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்
விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே.   – (திருமந்திரம் – 423)

விளக்கம்:
பல வகையான உயிர்கள் வாழ இடம் தரும் நிலப் பகுதி, உச்சியில் பனி படர்ந்திருக்கும் மலைகள், நீர் நிறைந்த ஏழு கடல்களின் பரப்பு, இவை அனைத்தையும் சிவபெருமான்  அக்கினியால் அழித்து வெட்டவெளி ஆக்கி விடுவான். இதைச் செய்ய அவனுக்குத் தும்மல் போடும் நேரம் போதும். அவனது வல்லமையை உணர்ந்தவர்க்கு இதில் வியப்பு அடைய எதுவுமில்லை.

பதம் – இடம், உத(க)ம் – தண்ணீர், குதம் – தும்மல், ஓதம் – கடல் அலை


கற்ப சங்காரம்

இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே.   – (திருமந்திரம் – 422)

விளக்கம்:
மூன்று வகையான சங்காரங்களில் கற்ப சங்காரம் என்பதும் ஒன்று. அச்சங்காரத்தின் போது இந்த மொத்தப் படைப்பும் அழிக்கப்படும். அந்நிகழ்வை கற்பனை செய்து பார்த்தால், கற்ப சங்காரத்தின் போது இந்த உலகம் உலையில் கொதிக்கும் மெல்லிய அரிசி போல் உழன்று தவிக்கும். அப்போது மலைகள் நிரம்பிய பெரிய நிலப்பகுதிகளும் கூட எரிந்து அழியும்.

சங்காரம் – அழித்தல்


நெருப்பு – சிவபெருமானின் கை அம்பு!

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது
அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே.   – (திருமந்திரம் – 421)

விளக்கம்:
சிவபெருமான் உலகை அழிப்பது நெருப்பினாலே. கடல் நீர் மிகாதவாறு தடுப்பதும் நெருப்பினாலே. அசுரர்களை அழித்ததும் நெருப்பினாலே. நெருப்பு சிவபெருமானின் கை அம்பாக விளங்குகிறது.