Eyes Wide Shut – ஒரு ரசனைப் பார்வை

Eyes-wide-shut_2

கணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்கள்  உலகமயமானவை. உடைகள் மாறினாலும், பழக்க வழக்கங்கள் மாறினாலும், எல்லா நாட்டிலும் திருமண உறவு, அடிப்படையில், ஒரே மாதிரியே இயங்குகிறது. Eyes Wide Shut படம் பார்த்தால் இதை இன்னும் புரிந்து கொள்ளலாம். பிரபல மருத்துவர் பில் ஹார்ஃபோர்ட், அவரது மனைவி அலிஸ். இவர்களது தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் மனச்சிக்கல்களை தெளிவாக அலசும் படம் இது. ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மிகுதியான அன்பு அவ்வப்போது சலிப்பை ஏற்படுத்துகிறது, அதனால் நிகழும் சில தடுமாற்றங்கள், அவை ஏற்படுத்தும் வலிகள் ஆகியவற்றை சுவாரசியாமான சம்பவங்களாக தொகுத்திருக்கிறார்கள்.

பில்லும் அலிஸும் ஒரு மது விருந்துக்குக் கிளம்புவதில் கதை ஆரம்பிக்கிறது. விருந்தில் கிடைத்த அனுபவங்களை இருவரும் மறுநாள் தங்கள் படுக்கையறையில் போதையின் துணையுடன் பகிர்ந்து கொள்ளும் போது மன உரசல்கள் ஏற்படுகின்றன. தான் ஒருமுறை வழியில் பார்த்த கப்பல்படை அதிகாரியிடம் தன் மனத்தை பறிகொடுத்ததாக அலிஸ் சொல்கிறாள். “ஒரு வேளை அந்த அதிகாரி என்னைக் கூப்பிட்டிருந்தால் என்னுடைய கணவனாகிய நீ, நம் குழந்தை, எதிர்கால வாழ்க்கை ஆகிய எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனுடன் போயிருப்பேன். நல்ல வேளை! அதற்கப்புறம் அவனைப் பார்க்கவில்லை” பில்லின் பெருந்தன்மை அலிஸை வெளிப்படையாக பேச வைக்கிறது. ஆனால் பில் உள்ளுக்குள் குமைய ஆரம்பிக்கிறான்.

குடும்ப நண்பர் ஒருவரின் மரணச்செய்தி கேட்டு, அந்த இரவு நேரத்தில் பில் துக்க வீட்டுக்கு போக வேண்டியதாகிறது. அந்த ஒரு இரவில் பில்லுக்கு பல விதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. இறந்து போன குடும்ப நண்பரின் மகள் பில்லிடம் தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாள். அவளை சமாதானப்படுத்தி விட்டு ஒரு வழியாக வெளியே வருகிறான். சாலையில் எதிர்ப்படும் ஒரு விபச்சாரம் செய்யும் பெண் பில்லை தன் வீட்டுக்கு அழைக்கிறாள். அவளை நெருங்கும் சமயம் அலிஸிடம் இருந்து வரும் ஃபோன், பில்லை அந்த சூழ்நிலையில் இருந்து விடுவிக்கச் செய்கிறது. பிறகு ஆர்வக் கோளாறினால், உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லாத ஒரு ரகசிய கூட்டத்துக்கு பொய் சொல்லி உள்ளே போகிறான். அங்கே மாட்டிக்கொண்ட அவனை ஒரு பெண் தன் உயிரை பலி கொடுத்துக் காப்பாற்றுகிறாள்.

ஒரே இரவில் ஏற்பட்ட சம்பவங்கள் தந்த கலவையான உணர்வுகளைத் தாங்க முடியாமல், நடந்த எல்லாவற்றையும் அலிஸிடம் சொல்லி அழுகிறான். மறுநாள் மகளுக்காக கிறிஸ்துமஸ் பரிசு வாங்க  கடைக்குச் செல்கிறார்கள். அங்கே பில் அலிஸிடம், நாம இப்போ என்ன செய்வது என்று குற்றவுணர்வோடு கேட்கிறான். அதற்கு அலிஸ் சொல்லும் பதில் தான் படத்தில் முக்கியமான விஷயம். இந்தப் படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டியது இந்த விஷயம் தான். “எப்படியோ இத்தனைச் சூழ்நிலைகளையும் சமாளித்து, அதிலிருந்து தப்பி வாழப் பழகியிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய விஷயம்?” வாழ்க்கை பற்றிய தெளிவான பார்வையுடன் அலிஸ் சொல்லும்  இந்த நிதானமான பதிலைக் கேட்டு பில் ஆச்சரியப்படுகிறான். “அப்போ இனிமேல் எப்பவுமே இப்படி சமாளித்து விடுவோமா” எனக் கேட்க ஆரம்பித்த பில்லை அலிஸ் தடுத்துச் சொல்கிறாள் “அதைப் பற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம். நினைத்தாலே பயமாக இருக்கிறது!”.

ஸ்டான்லி குப்ரிக்கின் இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. படத்தின் இயக்கத்தை செய்நேர்த்தி என்று  நான் சுருக்கமாகச் சொன்னாலும், அவருடைய மேதா விலாசம் சுருக்கமான விஷயம் இல்லை. பில்லாக டாம் க்ரூஸும் அலிஸாக நிக்கோல் கிட்மனும் தங்கள் நடிப்பை  அநாயாசமான கொடுத்திருக்கிறார்கள். சிறு வயதினர்க்கு இது கொஞ்சம் கூட ஏற்ற படம் இல்லை. படத்தின் கதை ஓட்டத்தில் கலந்து விட்ட எனக்கு சில காட்சிகளில் வரும் நிர்வாணங்கள் உறைக்கவில்லை, மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

நேற்று இந்தப் படத்தை எத்தனையாவது முறையாகவோ பார்த்தேன். இன்னும் எத்தனை முறை பார்ப்பேன், இதன் கதையை இன்னும் எத்தனை பேருக்குச் சொல்லி கழுத்தறுப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை.


செல்லையா காவியத்தலைவன் பார்க்கிறான்

‘செல்லாத துட்டோட பயணம் போகலாம், ஆனா செல்லையாவோட படத்துக்குப் போகக்கூடாது’ன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு சொலவட உண்டு. சினிமா பாத்துட்டு விமர்சனம்னு ஒன்னு பேசுவான், அதுக்கு பயந்து யாரும் அவங்கூட படத்துக்கு போறதில்ல. “இங்க நல்லா படம் எடுக்கத் தெரிஞ்சவனுக்கு ரசன இல்ல. ரசன இருக்கிறவனுக்கு அத நல்லா எடுக்கத் தெரில” ங்கிறது அவனோட பொது விமர்சனம். ரஜினி படத்தப் பத்தி மட்டும் கொற சொல்ல மாட்டான். கமல் ரசிகனைப் பாத்தா கூப்பிட்டு வச்சு வம்பிழுப்பான். “ஒங்க ஆளு அழுதா தியேட்டர்ல கை தட்றானுங்க. அதுவாடா நடிப்பு? எங்க ஆளு அழ மாட்டாரு, ஆனா அழ வைப்பாரு”ன்னு ஆரம்பிச்சான்னா ‘சரி செல்லையா, சரி செல்லையா ரஜினி தான் பெஸ்ட்’ன்னு சொல்லித்தான் தப்பிக்கணும்.

அந்த செல்லையா கூடத்தான் நான் காவியத்தலைவன் பாக்க வேண்டியதாப் போச்சு. நான் பயந்த அளவுக்கு ஒன்னும் ஆகல, படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிஷம் சுவாரசியமானவன் பெறகு அப்படியே படத்தோட ஐக்கியமாயிட்டான். ரொம்ப நிம்மதியா இருந்தது எனக்கு. இண்டர்வலுக்குப் பிறகு அப்பப்போ ஏதாவது சொல்ல வந்தான், என்ன நெனச்சானோ திரும்ப படத்துல முங்கிட்டான். செல்லையாவ பாத்த யாரும் எங்க பக்கத்துல வந்து உட்காரல, வேற பக்கம் போயிட்டாங்க. எனக்கு படம் பாக்க ஃப்ரீயா இருந்தது. நான் பொழுது போறதுக்காக சினிமா பாக்குறவன், அந்த வகைல நல்லாவே பொழுது போச்சு.

தியேட்டர்ல அமைதியா இருந்த செல்லையா வெளிய வந்து வறுக்க ஆரம்பிச்சான், நான் வேக ஆரம்பிச்சேன். ஒன்னு புரிஞ்சது எனக்கு,  ‘நடிப்புங்கிறது கைதட்டல் வாங்குறது இல்ல, பாக்குறவங்கள உணர்ச்சி வசப்பட வைக்கிறது’ன்னு சொல்ற விஷயம் அவனுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருக்கு. “இதத்தானடா இத்தன வருஷமா சொல்லிட்டுருக்கேன்!”ன்னு ஃபீல் பண்ணான். ஒவ்வொரு சீனா சொல்லி அத தான் ரசிச்ச விதத்த விவரப்படுத்தி, என்னை ரொம்பவே படுத்தினான். நானும் உன்கூட தானடா படம் பாத்தேன்னு சொல்ல நெனச்சு சொல்லாம விட்டுட்டேன்.

செல்லையாவ நிப்பாட்ட வேற வழி தெரியாம “ஆமா செல்லையா! படம் சூப்பர். அத்தன பேரு நடிப்பும் சூப்பர்”ன்னேன். சொல்லி முடிக்கல “என்ன சூப்பர கண்டுட்ட நீ”ன்னு ரிவர்ஸ் அடிச்சான். “புராண நாடக சீன எல்லாம் ஓரளவுக்கு மெனக்கெட்டவங்க, சுதந்திரப் போராட்ட சீன பூராவும் லோரம் இப்சம் போட்டு நிரப்பியிருக்காங்க. வந்தே மாதரம்ங்கிறது டம்மி வார்த்தையா போச்சு. நடிப்புலயும் பாரு சித்தார்த்தும் ப்ருத்வியியும் நல்லா பண்ணியிருக்காங்க, ஆனா நாசர் அவங்களுக்கு ஏத்த மாதிரி தன்ன ட்யூன் பண்ணிக்கல.” “ம்யூசிக்”ன்னு ஆரம்பிச்சேன், “எடே! தமிழ்நாட்டுல ம்யூசிக் பத்தி பேசக்கூடாதுன்னு ஒன்கிட்ட யாரும் சொல்லலியா?”ன்னு கேட்டான்.

நடந்துகிட்டே பேசிட்டிருந்த எங்க பின்னால “ஏண்டா டேய்!”ன்னு ஒரு சத்தம் ஆல்கஹால் வாசனையோட வந்தது. கொரல் குடுத்த ஆசாமி நாங்க பேசிக்கிட்டு இருந்தத கேட்டுகிட்டே வந்திருப்பார் போல. “வெரல் விட்டு எண்ணுனா ஒரு நாலு பேரு தான் பாக்குற மாதிரி படம் எடுக்குறான். இப்பிடி நொட்ட பேச்சு பேசி பேசியே அவங்களையும் மொடக்கிப் போடுங்க. சரியாடே!”ன்னு சொல்லிட்டு வேகமா நடந்து போயிட்டார்.


அது ஒரு காலம்

அது ஒரு காலம் –
மனிதன் அன்புடன் இருந்தான்.

அது ஒரு காலம் –
அவன் குரலிலே தன்மை இருந்தது.

அது ஒரு காலம் –
உலகில் நிபந்தனையற்ற அன்பு இருந்தது.

அது ஒரு காலம் –
வாழ்க்கை ஒரு இனிய பாடலாய் ஒலித்தது.

அது ஒரு காலம் –
அந்த பாடல் உணர்வு மிக்கதாய் இருந்தது.

பிறகொரு நாள் –
எல்லாம் மாறிற்று.

கனவு கண்டேன் ஒரு நாள் –
கனவினுள் கனவு வந்தது.

கனவு கண்டேன் ஒரு நாள் –
அது பயமறியாத இள வயது.

கனவு கண்டேன் ஒரு நாள் –
அப்போது வாழ்வதில் அர்த்தம் இருந்தது.

கனவு கண்டேன் ஒரு நாள் –
அன்பு ஒரு நாளும் சாகாதெனெ.

கனவு கண்டேன் ஒரு நாள் –
கடவுளை கருணை உள்ளவராக.

பிறகொரு நாள் –
கனவெல்லாம் செலவழிந்த நிலை.
வாழ்வு கனவைக் கொன்றது.

Inspired by the movie – Les Misérables 2012


தமிழனின் பெருமை சொல்லும் சினிமாக் கதை

அன்றைய விடியற் பொழுது அந்த கிராமத்துக்கு அவ்வளவு சிறப்பானதாய் இல்லை. காலையில் அந்த ஊர் மாரியம்மன் கோவிலுக்குப் போன பூசாரியால் பூட்டை திறக்க முடியவில்லை. அது திருவிழா நடந்து கொண்டிருந்த சமயங்கிறதுனால என்னவோ ஏதோன்னு கூட்டம் கூட ஆரம்பிச்சிருச்சு. ‘பூசாரிக்கு கைல வலு இல்லை போல’ன்னு கேலி பண்ணி ஆளாளுக்கு வந்து திறக்க முயற்சி பண்ணினாங்க. எப்படி எப்படியோ சாவியை திருகி பார்த்தாங்க, எதுக்கும் பூட்டு அசைஞ்சு கொடுக்கலை.

ரொம்ப நேர முயற்சி பண்ணினதுக்கு அப்புறம் பூட்டு ரிப்பேர் செய்யுற காதர் பாயை கூப்பிட முடிவாச்சு. முப்பது வருஷத்துக்கு மேலாக அதே தொழிலாக உள்ள பாய் வந்தவுடன் இதோ பூட்டு திறந்தாச்சுன்னு தான் எல்லாரும் நெனச்சாங்க. கால் மணி நேரம் அரை மணியாச்சு, ஒரு மணி நேரம் ஆச்சு, ஒண்ணும் முடியல. பாய் “பூட்டுல ஒண்ணும் பழுதில்ல. சாவியும் சரியாதான் பிடிக்குது. என்னன்னே புரியலை” ன்னார். கூட்டத்தில கொஞ்சம் பரபரப்பும் நிறைய கிசுகிசுப்பும் பரவ ஆரம்பிச்சுது. ஏதோ சாமி குத்தம்ன்னு ஒரு பரவலான அபிப்பிராயம் உருவாயிற்று.

“பூட்ட ஒடைக்கிறத தவிர வேற வழியில்ல” பாய் சலிப்பாய் சொன்னார்.

“நீங்க ஒடைக்க வேணாம் பாய். ஒரு முஸ்லிம் இந்து கோயில ஒடச்சான்னு சொல்வாங்க” பெரிசு ஒண்ணு தன் கடமையை நினைவு படுத்திக் கொண்டது.

பிறகு லேத் வேலை செய்யும் மாரியப்பனை கூப்பிட்டு கோவில் பூட்டை உடைக்கச் சொன்னார்கள். வெட்டிரும்பும் சுத்தியலுமாய் வந்த மாரியப்பன் கோவில் வாசல் பக்கம் வந்ததும் கொஞ்சம் தயங்கினான்.

“ஏலேய் ஒண்ணும் தப்பில்லேல! திருலா நேரம் இப்படி கோவில பூட்டி வைக்கக் கூடாது. சாமி காரியம்னு நெனச்சு ஒட” இது இன்னொரு பெருசு. அவருக்கென்ன?

பயபக்தியுடன் மாரியம்மனை கும்பிட்டு விட்டு வெட்டிரும்பை பூட்டின் மேல் வைத்து சுத்தியலால் தட்ட ஆரம்பித்தான். நங் நங் ன்னு சத்தம் வந்துச்சே ஒழிய பூட்டு அசைஞ்சு கொடுக்கலை. கூட்டத்தில் இருந்த வயசுப் பொண்ணுங்க பக்கம் இருந்து வந்த கேலிச் சிரிப்பு காதில் விழவும் ரோஷத்தில் கொஞ்சம் வேகத்தை கூட்டினான். முழு பலத்தையும் பிரயோகித்ததில் அந்த வெட்டிரும்பு சில்லு சில்லாய் உடைந்து தெறித்தது. மாரியப்பன் உசிரு கொஞ்ச நேரம் நின்னு போச்சு. இப்போ அந்த பூட்டை பார்க்கவே எல்லோருக்கும் பயமாய் இருந்தது.

கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியண்ணா கூட ‘ஆத்தா உன்ன ஏதாது பேசிருந்தேன்னா மன்னிச்சிருத்தா’ன்னு மனசுக்குள்ள வேண்ட ஆரம்பிச்சுட்டார். அந்த ஊர் ஹிஸ்ட்ரி வாத்தியார் மட்டும் பயமில்லாமல் ஒரு ஆர்வத்தோட கோவில் வாசலுக்கு வந்து யோசனையோட பார்த்தார். உடைந்த இரும்பு துண்டுகள் கால்களை குத்துவதாய் இருந்தது. மாரியப்பன் ஒரு ஓரமாக அரை நினைவில் தன் மனைவியின் மடியில் படுத்திருந்தான். வாத்தியார் பூட்டை திறக்கவெல்லாம் முயற்சி பண்ணலை. அந்த பூட்டை ஆராய்வதில் தான் ஆர்வமாயிருந்தார். கையிலிருக்கும் டார்ச்சை உபயோகித்து நுணுக்கமாய் பார்த்தார். அந்த பூட்டப்படும் பகுதியை உற்றுப் பார்த்தவருக்கு வேர்க்க ஆரம்பித்தது. நாக்கு, தொண்டையெல்லாம் உலர்ந்தது.

அவசரமாய் சட்டைப்பையில் இருந்த லென்ஸை எடுத்து அதன் வழியாக பார்த்தவர் “அணுகுண்டு வச்சாக் கூட இந்த பூட்ட தெறக்க முடியது”ன்னு சொல்லிட்டு அப்படியே மயங்கி விழுந்திட்டார். அவரை மடியில் தாங்க அவருக்கு சொந்தமாய் மனைவி கிடையாது.

கண் விழிச்சு பார்த்த ஹிஸ்ட்ரி வாத்தியார் அந்த ஊர் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தார். அந்த சிறிய ஊரில் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியாளர்களும் கூடியிருந்தார்கள். வாத்தியார் கண் விழிப்பது தெரிந்ததும் அவரை சுற்றிக் குழுமினார்கள்.

“ஸார் என்ன நடந்தது?”

“மயக்கமடைகிற அளவுக்கு நீங்க என்ன பாத்தீங்க?”

“ஸார் நீங்க என்ன சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம். அதான் பேட்டி எடுக்க வந்திருக்கோம். மக்களுக்கு உண்மைய கொண்டு போகணும் அதான் எங்களுக்கு முக்கியம்.”

“ஒலகம் அழியப் போதுன்றாங்களே, அதோட அறிகுறியா இது?”

ஆளாளுக்கு கேள்வி கேட்க தயாரான நேரம் மின்சாரம் தடைபட்டு இருளானது. அந்த இருட்டில் வாத்தியாரின் குரல் கேட்டது.

“மின்சாரத்தை கண்டு பிடித்த தமிழன் இன்று இருளில் இருக்கிறான்”. கொஞ்சம் நிறுத்தி விட்டு சொன்னார்.

“நான் சொல்வது உங்களுக்கு நம்ப முடியாததாய் இருக்கலாம். தமிழன் ஐந்தாம் நூற்றாண்டிலேயே மின்சாரத்தை கண்டுபிடித்து பயன்படுத்தி விட்டான். அதுவும் அணுவிலிருந்து. அதற்கான ஆதாரமெல்லாம் என்னிடம் உள்ளது”.

வந்த பத்திரிக்கையாளரில் ஒருவர் மட்டும் தெளிவாய் இருந்தார். “அதெல்லாம் இருக்கட்டுங்க. இப்போ கோவில் கதவ ஏன் தெறக்க முடியல. அத சொல்லுங்க”.

“நான் சொன்ன மின்சார விஷயத்திற்கும் அதுக்கும் சம்மந்தம் இருக்கு. தமிழனிடம் ஒரு அபூர்வ கலை இருந்தது. அது அழிந்து ஆயிரத்து ஐநூறு வருஷம் ஆயிருச்சு. அந்தக் கலையில் வல்லவனால் தனது தலை முடி ஒன்றினால் எப்படிப்பட்ட பூட்டையும் கட்டிப் போட முடியும். இந்த கோயில் பூட்டும் அப்படித்தான் ஒரு தலை முடியால் கட்டப்பட்டிருக்கு”. இதை கேட்கவும் ஊரே திகைச்சுப் போய் நின்னது.

“நான் தான் கட்டினேன்” அந்த இருட்டில் ஒரு தீக்குசியை உரசி அந்த வெளிச்சத்தில் தன் முகம் காட்டியபடி வந்தான் அந்த தமிழு என்று அழைக்கப்படும் தமிழன்பன்.

“ஏன் தமிழு இப்படி செஞ்சே?” பாசத்தோடு ஒரு பாட்டி கேட்டது.

“நேத்து கோயில் பூசாரி சாமி கும்பிடப் போன என் தங்கச்சிக்கு குங்குமப் ப்ரசாதம் குடுக்கல. அதான் மொத்தமா கோயிலுக்கு ஒரு பூட்ட போட்டேன்.” சொல்லி விட்டு அவனும் அவன் தங்கையும் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போட்டார்கள்.

(முதல் பாகம் இத்தோடு முடிவுற்றது)