திருமந்திரம் – கடவுள் வாழ்த்து

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.  –  (திருமந்திரம் – 1)

ஒன்று அவன் தானே
இரண்டு அவன் இன்னருள்
மூன்றினுள் நின்றான்
நான்கு உணர்ந்தான்
ஐந்து வென்றான்
ஆறில் விரிந்தான்
ஏழு உம்பர்ச் சென்றான்
எட்டில் உணர்ந்திருந்தான்.

விளக்கம்:
இந்த உலகம் முழுவதையும் ஒரு மொத்த பொருளாகப் பார்த்தால் அது சிவபெருமானே! அவன் சிவன், சக்தி என இருவராய் நின்று அருள் புரிகிறான். நாம் அவன், அவள், அது என எவையெல்லாம் குறிப்பிடுகிறோமோ அவை அனைத்திலும் உயிராய் நிற்பவன். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் உணர்ந்தவன், நமக்கு உணர்த்துபவன். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் வெல்ல உதவுபவன். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களிலும் விரிந்திருப்பவன். எழாவது இடமான சகசிரதளத்தில் விளங்குபவன். நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களிலும் கலந்திருப்பவன். அந்த சிவபெருமானை நான் வணங்குகிறேன்.

He is the whole! Two is His sweet Grace.
He stands in three, witness of all the four.
He conquers the five senses. He fill in the six Aadharas and stand in the
Seventh place, Sahasrara. He pervades in all the eight elements.