தெளிவு!

அது ஒரு நண்பகல். ஊரெங்கும் ஒரே இருட்டு. வீட்டில் இருந்த மூன்றாவது மாடியில் நான் மட்டும் தனியாக திருமணமாகாத என் மனைவியுடன் இருந்தேன். எங்கள் வீட்டில் இரண்டே தளங்கள், மூன்றாவது மற்றும் ஐந்தாவது. இரவு நீண்ட நேரம் தூங்கிய களைப்பில் என் மனைவி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது மூச்சு இனிமையான இசையாக வெளி வந்தது. வியப்புடன் எப்படி என்பது போல் அவளை பார்த்தேன்.

“மூங்கில் மூச்சு” என்றாள்.

எனக்கு மூக்கில் மூச்சு மட்டும் தான் தெரியும். பசி எடுத்தது . ஏதாவது இருக்கிறதா என்று தேடிய போது அவள் சாப்பிட்ட மீதம் கொஞ்சம் இருந்தது. அதை எடுத்து முகர்ந்து பார்த்து பசியாறினேன். அப்போது தான் ஐந்தாவது மாடியில் இருந்து அழைப்பு மணி ஒலித்தது. கீழே இறங்கிப் போய் அங்கிருந்த மெழுகுவர்த்தி ஒன்றை ஊதினேன். வெளிச்சம் பரவியது. வீட்டின் நடுவிலிருந்த ஃப்ரிட்ஜை திறக்க முயன்று, முடியாது என்பதை உணர்ந்தேன்.

“மன்னிக்கவும். எனது கைகளை மாட்டிக் கொள்ள மறந்து விட்டேன். நீங்களாக கதவை திறந்து வாருங்கள்” என்றேன்.

உள்ளே வந்த அந்த பெண்ணுக்கு பதினெட்டு வயது இருக்கும். யோசித்ததில் அவள் எனது முன்னால் காதலி என்பது நினைவில் வந்தது.

அது ஒரு இனிமையான காலம். நாங்கள் இருவரும் ஒரே காகிதத்தில் தேர்வு எழுதினோம், ஒரே ஃபோனில் இருவரும் பேசிக்கொள்வோம், ஒரே பயணச்சீட்டில் பிரயாணம் செய்வோம். ம்ஹூம், இப்போது எதுக்கு அந்த இருபது வருஷத்துக்கு முந்திய கதையெல்லாம்!

“எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டேன்.

“உன் நினைவுகளை சுமந்து கர்ப்பமாகி விட்டேன்” என்றாள்.

அவள் வயிற்றுக்குள் இருந்து ஒரு சிறுவன் எட்டிப் பார்த்து ‘ஆமாம் அப்பா’ என்றான்.

“ரொம்ப சந்தோஷம்” சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். மறந்து விட்டிருந்த கைகளை எடுத்து வந்திருந்தாள் என் மனைவி.

நிமிர்ந்து பார்க்கவே கூசிற்று எனக்கு.

“இப்போது நாம் என்ன செய்வது ?” முணுமுணுப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். அங்கிருந்த என் மனைவியை காணவில்லை.

அங்கே சிரித்தபடி இளையராஜா ‘நான் தேடும் செவ்வந்தி பூ இது” பாடிக் கொண்டிருந்தார்.

5 thoughts on “தெளிவு!

Comments are closed.