சிவயோகம்!

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதி போக
நவயோகம் நந்தி நமக்களித் தானே. – (திருமந்திரம் – 122)

விளக்கம்:
சிவயோகத்தை விரும்புவோர் இறைவன் அறிவுப் பொருள் என்பதையும், இந்த உலகம் அறிவற்ற பொருள் என்பதையும் விவேகத்தால் புரிந்து கொள்ள வேண்டும்.  தீமை அளிக்கும் யோக வழிகளில் செல்லாமல், தவயோகம் செய்து வந்தால் சிவ ஒளியை உள்ளே உணரலாம். அந்த நந்தி பெருமான், தன்னுடைய வீட்டை நாம் அடையும்படியாக, புதுமையான யோகத்தை நமக்கு அளித்தான். அந்த யோக வழியில் சென்று நாம் வீடு பேறு அடையலாம்.

(சித்து – அறிவுப் பொருள் (இறைவன்),  அசித்து – அறிவற்ற பொருள் (உலகம்), பதி – வீடு, நவ யோகம் – புதுமையான யோகம்)