அத்திப்பழமும் அறைக்கீரை விதையும்

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.  – (திருமந்திரம் –160)

விளக்கம்:
இந்தப் பாடலில் நம் உடலை அத்திப்பழத்துடனும், நம் உயிரை அறைக்கீரை விதையுடனும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் திருமூலர்.

அத்திப்பழமாகிய உடலையும், அறைக்கீரை விதையான உயிரையும் அந்த இறைவன் சமைத்து, நம்மை இந்த உலகில் பிறக்கச் செய்தான். நாம் உயிர் விடும்போது,  நம்முடைய உடல் தன்னுடைய வினைப்பயனை எல்லாம் உயிரிடம் கொடுத்து விடுகிறது. (இதைத்தான் அத்திப்பழத்தை அறைக்கீரை வித்து உண்டது என்கிறார்.) பிறகு இறந்த உடலை அழுகை ஒலியுடன் உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்.

இறப்பு நம் உடலுக்குத் தான்.  நம்முடைய பாவ, புண்ணியங்கள் நம்மை விட்டு விலகாது.