அதிக செல்வம் ஆபத்தானது

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. – (திருமந்திரம் – 171)

விளக்கம்:
தேன் இருக்கும் மலரை அதன் வாசனையைக் கொண்டு அறிந்து கொள்ளும் வண்டு. அப்படி வாசனை பிடித்து மலர்களில் உள்ள தேனைக் கொண்டு வந்து மரக்கிளையில் சேர்த்து வைக்கும். அந்தத் தேனின் அளவு மிகும்போது அது வலிமையுடைய வேடர்களின் கவனத்தை ஈர்க்கும். அவர்கள் தேனை எடுத்துச் செல்ல முயலும் போது, வண்டுகள் வேறு வழியில்லாமல் விட்டுக்கொடுத்து தான் ஆக வேண்டியுள்ளது. நாம் தேடி வைக்கும் செல்வத்தின் நிலையும் அதுதான். ஒருவனிடம் அதிகமான செல்வம் இருந்தால், பகைவர்கள் தங்கள் சூழ்ச்சியாலும், வலிமையாலும் அதை அபகரிக்க நினைப்பார்கள்.

இரதம் – இரசம், தேன்         கொம்பு – மரக்கிளை