இளமையில் கரும்பு, முதுமையில் எட்டிக்காய்

விரும்புவர் முன்என்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே. – (திருமந்திரம் – 180)

விளக்கம்:
அது ஒரு காலம். அப்போது நான் இளமையாக இருந்தேன். மெல்லிய இயல்பு கொண்ட பெண்கள் என்னை இனிதாக விரும்புவார்கள். எந்த அளவு இனிமையாக என்றால், கரும்பைப் பிழிந்து அதன் கடைசிச் சாறையும் பிழிந்து எடுத்தால் எவ்வளவு இனிமை இருக்குமோ அவ்வளவு இனிமை. மெல்லிய அரும்பு போன்ற முலைகளைக் கொண்ட அந்தப் பெண்களுக்கு அப்போது கரும்பாக இனித்தேன். இப்போது என் இளமை போன பிறகு அவர்களுக்கு நான் எட்டிக்காயாக கசக்கிறேன்.