பிராணாயாமம் – கும்பகத்தின் அளவு

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோ மத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.   – (திருமந்திரம் – 573)

விளக்கம்:
இடைகலை வழியாக பதினாறு மாத்திரை கால அளவு பூரகம் செய்வோம். பிறகு  முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு பிங்கலை வழியாக இரேசகம் செய்வோம். இவ்விரண்டு வேள்விகளுக்கும் இடையே அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவு கும்பகம் செய்து வந்தால், அது உண்மையான பிராணாயாமம் ஆகும்.

உபதேசிக்கப்பட்டுள்ள கால அளவுகளின்படி பிராணாயாமத்தை விருப்பத்துடன்  செய்வோம்.

வாமம் – இடப்பக்கம்,   ஏமுற்ற –  பாதுகாப்போடு,   காமுற்ற – விரும்பத்தக்க,    ஓமம் – வேள்வி