பிரத்தியாகாரத்தின் பெருமை

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.    – (திருமந்திரம் – 585)

விளக்கம்:
புருவ மத்தியில் தியானம் செய்யும் போது எற்படும் மாயையான உணர்வுகளைப் பிரித்துணர்ந்து, அம்மாயைகளில் சிக்காமல் கடந்து சென்று மேலும் உள்நோக்கு சிந்தையில் மனம் கரைந்து போக வேண்டும். அப்படி பயிற்சி செய்தால் உண்மையான பேரொளியை உணரலாம். பிரத்தியாகாரத்தின் பெருமை இதுவே!

தியானப் பயிற்சியின் போது மாயமான பல காட்சிகள் தோன்றும். அவற்றில் மனம் மயங்கினால் உண்மையான மெய்ப்பொருளை அடைய முடியாது. தோன்றும் காட்சிகளில் உள்ள மாயத்தன்மையை உணர்ந்து, உண்மையான பேரொளியைத் தேடி மேலும் உள்நோக்கு முகமாய்த் தியானம் செய்வோம்.

உபாதி – மாயையினால் உண்டாகும் தோற்றம்