மனமெனும் குரங்கை மூட்டையாக கட்டி விடலாம்

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கொட்டை பொதியலு மாமே.    –  (திருமந்திரம் – 595)

விளக்கம்:
நாம் மூச்சு விடும் போது உடம்பின் உள்ளே நிறையும் காற்றுக்கள் பத்து. அவை  1. உயிர்க்காற்று, 2. மலக்காற்று, 3. தொழிற்காற்று, 4. ஒலிக்காற்று, 5. நிரவுகாற்று, 6. தும்மற்காற்று, 7. விழிக்காற்று, 8. கொட்டாவிக்காற்று, 9. இமைக்காற்று, 10. வீங்கற்காற்று. இந்த பத்தில் உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று என்னும் ஐந்தும் ஐயுயிர்ப்பு என சொல்லப்படுகிறது. பிராணாயாமப் பயிற்சி இல்லாமல் இந்த ஐந்து காற்றுக்களும் வீணாகப் போனால், பரிதாப வாழ்வைத் தவிர வேறு என்ன கிடைக்கும்? மூச்சுக் காற்றை தனது எல்லைக்குள் செலுத்தி தியானம் செய்ய வல்லவர்க்கு, உடலுக்குள் குறும்பு செய்யும்  மனம் என்னும் குரங்கை மூட்டையாகக் கட்டி விட முடியும்.

பிராணாயாமப் பயிற்சி செய்து மனம் என்னும் குரங்கை கட்டி வைத்து விடலாம்.

கோலி – தியானம் செய்து,   கொட்டு – உடம்பு,   பொதியல் – மூட்டையாகக் கட்டுதல்