தியானத்தில் கடல் போன்ற ஆன்மாவை உணரலாம்

நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.  –  (திருமந்திரம் – 616)

விளக்கம்:
நடுவில் உள்ள கொப்பூழுக்கு நான்கு விரல் அளவு மேலேயும், குரல் தோன்றும் இடமான தொண்டைக்கு இரண்டு விரல் அளவு கீழேயும் உள்ளது அநாகதச் சக்கரம். அங்கே கடல் பொங்கும் ஒலியை உணர்ந்து தியானிக்க வல்லவர்கள், இந்த உடலுக்கு தலைவனான ஆன்மாவை அறிந்தவர் ஆவார்கள்.

அநாகதச் சக்கரமாகிய இருதயப் பகுதியில் மனத்தை நிறுத்தி தியானம் செய்தால், உள்ளே கடல் போன்ற ஆன்மாவின் இயல்பை உணரலாம்.

மடலித்த – இதழ் பொருந்திய,  வாணி – குரல் தோன்றும் இடம்,  கடலித்து – கடலின் தன்மையாய்,   சடலம் – உடல்