சிரசில் உணர்வு பெற்றால் மனம் அடங்கும்

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.  –  (திருமந்திரம் – 621)

விளக்கம்:
தியானத்தின் போது நம்முடைய மனம் சிரசின் மேல் நிலைத்திருந்தால், அங்கே ஆகாய நீர் ஊற்றெடுப்பதை உணரலாம். மேலும் அங்கே விந்தமலையைக் கண்டு களிக்கலாம். சிரசில் தோன்றும் அந்த மலைப்பிரதேசத்தில் மனமெனும் குதிரையைப் பழக்கிச் செல்லக் கூடிய வீதி ஒன்றைக் காணலாம். அந்த வீதியில் நம்முடைய மனம் பயணம் செய்தால், அந்த மனம் கடிவாளம் இடப்பட்ட குதிரை போல் அடங்கி நிற்கும்.

கடப்பதற்கு மிகவும் கடினமான விந்தமலையை அகத்தியர் கடந்ததாக ஒரு செய்தி உண்டு. சிரசின் மேல் மனம் செலுத்தி தியானம் செய்தால் ஆன்மிகத்தில் அது போன்ற கடினப்பாதையைக் கடந்து செல்லலாம். மேலும் மனம் கடிவாளம் இடப்பட்ட குதிரை போல அடங்கி நிற்கும்.

விண்டு – ஆகாயம்,   கூபம் – நீர் ஊற்று,   விஞ்சத்தடவி – விந்தமலை,   செண்டு – குதிரையை பழக்கும் வீதி,  செழுங்கிரி – செழுமையான மலை,  குசை – கடிவாளம்