நம்முள்ளே சுடர் விடும் சோதி

ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வறி யாரே. –  (திருமந்திரம் – 319)

விளக்கம்:
ஆதிக் கடவுளான நம் சிவபெருமான் தேவர்களுக்கு எல்லாம் மேலான ஒளியாகத் திகழ்பவன். அந்த சோதியே, அடியார்களாகிய நாம் தொடர வேண்டிய பெருந்தெய்வம் ஆகும். அந்த சோதியை நாம் வெளியே எங்கேயும் தேட வேண்டியதில்லை. நமக்குள்ளேயே அந்த சோதி சுடர் விட்டு விளங்குகின்றது. தம் உள்ளே இருக்கும் அந்த சோதியை வழிபட்டு உணரக்கூடிய கல்வி இல்லாதவர்கள், தமக்கும் அந்த மேலான சோதிக்கும் உள்ள தொடர்பை அறியாதவர்கள்.