திருக்கண்டியூர்

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே. – (திருமந்திரம் – 341)

விளக்கம்:
இந்தப் பெரிய உலகத்தைத் தாங்கி நிற்கும் நம்முடைய சிவபெருமான், எங்கும் எல்லாவற்றிலும் பரவி இருக்கிறான். அவனுடைய திருவடியின் பெருமையை உணர்ந்த தேவர்கள், தியானத்தில் தங்கள் கவனத்தை சிரசிலேயே தங்கச் செய்தார்கள். பிரமனின் இடமான மூலாதாரத்தில் இருந்தும், திருமாலின் இடமாகிய மணிப்பூரகத்தில் இருந்தும் நம்முடைய கவனத்தை நீக்கி, நம் கவனத்தை சிரசிலேயே நிலைக்கச் செய்கிறான் சிவபெருமான்.

பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து, அந்த தலை ஓட்டில் திருமாலின் உதிரத்தையும் வாங்கிய செயல் நடந்த இடம் திருக்கண்டியூர். இந்தத் திருச்செயலின் தத்துவம், தியான நிலையில் நம்முடைய கவனம் சிவபெருமானின் இடமாகிய தலையுச்சியில் இருக்க வேண்டும் என்பதாகும்.