கதை இல்லாத மனிதன்

“நான் நல்லவளா? இல்லையா? அதச் சொல்லு மொதல்ல”.

இருவருக்கும் சகலமும் பிசிபிசுத்துப் போயிருந்த நேரம் அது. இந்தக் கேள்வியால் என் காதும் பிசுபிசுத்தது.

“ஒனக்கு என்ன பதில் வேணும்னு சொல்லு!”

“என்ன நீ நல்லவன்னு சொல்லு. ஒனக்காக நான் என்ன வேணாலும் செய்றேன்”.

“நீ செஞ்சது போதும்! தெம்பில்லடி எனக்கு”.

அடுத்து என்ன பேசினோம் என்பதில் எனக்கு நாட்டமில்லை. அவள் சொன்ன “என்ன வேணாலும் செய்றேன்” திரும்பத் திரும்ப தலைக்குள் சுத்திக் கொண்டிருந்தது.

“எனக்காக ஒன்னு செய்யேன்! நீதான் ரொம்ப நல்லவளாச்சே?” கேட்டு விட்டு சசியின் முகத்தை உற்றுப் பார்த்தேன்.

“என்னடா செய்யணும் உனக்கு? கொலை எதுவும் பண்ணனுமா?” அவ்வளவு நெருக்கமாக முகத்தைக் கொண்டு வந்து கேட்ட போது மூச்சடைத்தது. எப்படிக் கண்டுபிடித்தாள் இவள்? “திருட்டு முழி முழிக்காத. இதெல்லாம் ஊர் ஒலகத்துல நடக்குறது தான்”. கேலி செய்கிறாளோ?

அவள் கேலி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொண்டேன். நன்றாகக் குளித்தோம், சுத்தமான உடை அணிந்தோம். நல்ல ஃபில்டர் காபி தயாரித்தோம், ஆளுக்கொரு கோப்பையை நிரப்பி எதிரெதிரே அமர்ந்தோம். முக்கிய முடிவெடுக்கும் போது எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் இல்லையா?

இவள் மிகத் தெளிவானவள். இவள் காபி குடிக்கும் விதமே அதைச் சொல்லியது. “சொல்லு இப்ப” அதில் ஆர்வம் எதுவும் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தேன். விடை தெரியவில்லை.

“என்ன சொல்ல?”

மிகப் புனித உறுப்பின் பெயர் ஒன்றை வசையாக உச்சரித்தாள். “யார? எங்க? எப்பிடி?”

“யாருங்கிறத கடைசியா சொல்றேன். எப்படிங்கிறத சொல்றேன், அது தான் முக்கியம்”.

சொல்லு என்பது போலப் பார்த்தாள்.

”கூர்மையான இரும்புத் துண்டு ஒன்னு தருவேன். அதை வச்சுத் தொடைல ஆரம்பிக்கணும். அப்படியே ஒனக்குப் பிடிச்ச லைன் ட்ராயிங் ஒன்னு வரையணும். யோசிக்க வேணாம்! அவன் உன் கைக்கு சுலபமா சிக்கக் கூடியவன் தான்”.

“கட்டி வைக்கணுமோ?”

“தேவையில்லை. உன் அழகே அவனைக் கட்டிப் போடும்”. இதைச் சொன்னதற்கு ஒரு புதுவிதமான வசை கிடைத்தது. “இந்தக் காபிய எவ்வளவு ரசிச்சுக் குடிக்கிற! அப்படி ரசிச்சுச் செய்யணும் அத”.

“இதெல்லாம் செஞ்சா நீ என்ன நல்லவன்னு சொல்லுவியா?”

“நான் சொல்ல வேண்டியதில்ல. நீ நல்லவளாவே ஆயிடுவே!”

“அப்படி யாருப்பா அது? ஒனக்கு வேண்டாதவன்?”

“அவன் யாருக்குமே வேண்டாதவன்”.

“கொழப்பாத ரொம்ப. யாருன்னு சொல்லு”.

“நான் தான் அது. என்னத் தான் நீ அப்படி அனுபவிக்கணும்”.

நான் சீரியஸாகத் தான் சொல்றேன் என்பதைப் புரிய வைக்க இன்னும் நான்கைந்து வசைகளை அவளிடம் இருந்து கேட்க வேண்டியிருந்தது. “ஒனக்கு என்ன ப்ரச்சனை? அதச் சொல்லு மொதல்ல”

“என்னத்தச் சொல்ல? யாரப் பத்திப் பேசினாலும், அவங்களப் பத்தி ஒன்னு ரெண்டு விஷயமாச்சும் இருக்கும். என்னப் பத்திச் சொல்ல என்ன இருக்கு? சொல்லு. எனக்குன்னு ஒரு கத இல்ல இந்த ஒலகத்துல. நான் ஏன் இருக்கணும் இங்க? நீ முடிச்சிரு”.

One thought on “கதை இல்லாத மனிதன்

Comments are closed.