நீரில் கலந்த பால் போல் நம்மில் கலந்திருக்கிறான்!

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.  – (திருமந்திரம் – 450)

விளக்கம்:
இந்த உலகின் மொத்த வடிவமே சிவபெருமானின் திருவுருவமாகும். அதனால் அவன் உருவத்தை யாராலும் காண முடியாது. பூமி முதலான ஐந்து பூதங்களால் ஆன இந்த உடலில் சிவபெருமான் நீரில் கலந்த பால் போல, பிரிக்க முடியாதவாறு கலந்திருக்கிறான். அவனது அந்த அருள் தரும் தன்மையை நாம் மனச்சோர்வினால் மறக்கக்கூடாது. சிவபெருமான் நம் உடலிலும் உயிரிலும் கலந்திருக்கிறான் என்பதை நாம் எப்போதும் உணர்ந்திருந்தால், இடையறாத இன்பம் பெறலாம்.