கருவிலேயே சிவன் நம்முடன் கலந்து விடுகிறான்!

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.  – (திருமந்திரம் – 472)

விளக்கம்:
பூவைப் போன்ற யோனியுடன் மொட்டுப் போன்ற ஆண்குறி பொருந்தும் போது, அங்கே யோனி மலர்கின்றது. மலர்ந்த பின், அங்கே வயிற்றில் சுமக்கக்கூடிய கரு ஒன்று ஒளிமிகுந்த சிவ அணுக்களுடன் பிறக்கிறது. அந்தக் கருவின் பருவுடலோடு, நீரில் கலந்திருக்கும் குமிழியின் நிழல் போலே, நுண்ணுடலின் கருவிகள் எட்டும் பரவி நின்று அக்கருவைக் காத்திடும்.