உருவமில்லாத உயிர்!

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே.  – (திருமந்திரம் – 485)

விளக்கம்:
தாயின் வயிற்றில் உருவான கரு, பத்து மாதங்களில் முழு உருவம் பெறுகிறது. முழு உருவம் பெற்ற சரியான பருவத்தில் அக்குழந்தை இம்மண்ணில் வந்து பிறக்கிறது. மாயையில் சிக்கி வளரும் உடலைப் பற்றி மட்டும் தான் நாம் அறிவோம். நம் உடலைத் தாங்கியிருக்கும் உருவமில்லாத உயிரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.