எந்தச் சூழ்நிலையையும் எளிதாகக் கடக்கலாம்

பன்னிரண் டானைக்குப் பகலஇர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே.   – (திருமந்திரம் – 577)

விளக்கம்:
பன்னிரண்டு அங்குல நீளத்தில் ஓடும் நம்முடைய மூச்சுக்காற்று, இரவும் பகலுமாக மாறும் நமது வாழ்க்கையின் சூழல்களில் சிக்கித் தவிக்கிறது. அந்தப் பிராணனை கட்டுப்படுத்தும் முறையை பாகனாகிய நாம் அறிந்து கொள்ளவில்லை. பிராணனை கட்டுப்படுத்தும் பிராணாயாமப் பயிற்சியை நாம் அறிந்து கொண்டால், நமது மூச்சுக்காற்றின் நீளம் சூழல்களில் சிக்கிக் குறையாது. எந்தச் சூழ்நிலையையும் நாம் எளிதாகக் கடக்கலாம்.

இப்பாடலில் நம் மூச்சுக்காற்று யானையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.  யானையை பாகன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் நாம் நம் மூச்சுக்காற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம்.