இரு வரிக் கதை – 14

“ஏம்மா! நீயே அவன கொன்னுட்டு இங்க வந்து எப்படியாவது அவன காப்பாத்துங்கன்னு சொன்னா என்னம்மா செய்றது?”

“இன்னும் என் ஆத்திரம் தீரல டாக்டர்”.


தத்துவமசி

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்களே  – (திருமந்திரம் – 225)

விளக்கம்:
அந்தணர் என்பவர்கள் வேதத்தின் நிறைவுப் பகுதியாகிய உபநிடத்தின் உண்மைப் பொருளை அறியும் விருப்பத்துடன் இருப்பார்கள். தத்துவமசி என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவின் எல்லையில் நின்று பிரணவத்தில் பொருந்தி நிற்பார்கள். நாதம், வேதம், அறிவு ஆகிய அனைத்தின் முடிவிலும் இருப்பது சிவபெருமானே என்பதைப் புரிந்து கொள்வார்கள். தமது ஆன்மிகப் பாதையில் இதுதான் முடிவு என்று எதையும் எண்ணாமல், தொடர்ந்து பயணம் செய்து இன்புறுவார்கள்.

தத்துவமசி – தத் + த்வம் + அசி. இதன் பொருள் நீ அதுவாகிறாய், அதாவது சீவனும் பரமனும் வேறு வேறானவை இல்லை. இதைப் புரிந்து கொள்வதே அறிவின் எல்லையாகும்.


அந்தணரின் கடமைகள்

அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.  – (திருமந்திரம் – 224)

விளக்கம்:
அந்தணர் என்போர் ஆறு தொழில்களைக் கடமையாகக் கொண்டவர் ஆவார். அந்த ஆறு தொழில்கள் ஓதல், ஓதுவித்தல், தவம், வேட்டல், ஈட்டல், ஈதல் ஆகியவை ஆகும். அவர்கள் நியமத்தில் நின்று, மூன்று பொழுதும் அக்னிக் காரியங்களைச் செய்கிறார்கள். இந்த வேள்விகளைக் கடமையாக இல்லாமல், ஒரு தவம் போலக் கருத்துடன் செய்கிறார்கள். மேலும் அவர்கள்  மாலை நேரத்திலும் வேதங்கள் ஓதித் தங்கள் கடமைகளைத் தவறாது செய்கிறார்கள்.


வேள்விகளால் உலகில் துன்பங்கள் நீங்கும்

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்
தங்கி இருக்கும் வகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே.  – (திருமந்திரம் – 223)

விளக்கம்:
வேள்விகளைத் தவறாது செய்து வரும் அந்தணர்கள், இந்த உலகில் வேதங்கள் நிலைத்து நிற்க வகை செய்தவர் ஆவார்கள். அவர்கள் பெருந்தவம் செய்தவர்கள். உலகெங்கும் அவர்கள் வேள்வித்தீயை நிலை நிறுத்துவதால், துன்பங்கள் எல்லாம் சோர்ந்து தொலைந்து போகும். இதனால் வேதங்களின் புகழ் உலகில் என்றும் நிலைத்து நிற்கும்.


சுடுகாட்டுத்தீயில் நின்று நம் ஆன்மாவைத் தாங்கிப் பிடிக்கிறான்

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.  – (திருமந்திரம் – 222)

விளக்கம்:
நாம் செய்யும் வேள்விகளின் தீயின் உள்ளே நம் இறைவனாம் சிவபெருமான் வசிக்கிறான். அவன் சுடுகாட்டுத் தீயிலும் உள்நின்று ஆடி, நமது சாரமான ஆன்மாவைத் தாங்கிப் பிடிக்கிறான். வேள்வித்தீயும் சுடுகாட்டுத்தீயும் தவிர மற்ற அக்னிகள் எல்லாம் வினைகளைத் தரக்கூடியவை. அந்த வினைகளின் அளவு பெரிய மத்தால் கடையப்படுவது போல் ஒலி எழுப்பும் கடலின் அளவு ஆகும்.


குளிர்ச்சியான ஒளி!

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.  – (திருமந்திரம் – 221)

விளக்கம்:
நாம் செய்யும் வேள்விகளின் தலைவன் யார் தெரியுமா? அவன் எல்லா ஒளிகளுக்கும் மேலான ஒளியாக இருப்பவன், இறப்பு என்பதே இல்லாதவன். நம் உள்ளத்திலும் அவன் மூன்று கண்களுடன் ஒளி வீசி வசிக்கிறான். ஏழு உலகங்களிலும் பரவி இருக்கின்ற அவனுடைய ஒளி குளிர்ச்சியானது, அருள் நிறைந்தது. நாம் செய்யும் வேள்விகள் அந்த சிவபெருமானை நினைந்து இருக்க வேண்டும்.


வேள்விகளால் அருஞ்செல்வம் கிடைக்கும்

பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றீரே.  – (திருமந்திரம் – 220)

விளக்கம்:
நாம் தேடும் பொன்னும் பொருளும் துன்பத்தைத் தரக்கூடியவை என்பதால் தான், நம் தலைவனாம் சிவபெருமான் அருமையான ஞானச்செல்வங்களை முன்பே நமக்குத் தந்துள்ளான். அந்த சிவபெருமானை நினைத்து நாம் செய்யும் வேள்விகளால் கிடைக்கக் கூடிய உண்மையான இன்பத்தை நினைத்துப் பார்ப்போம். அந்த இன்பத்தைப் பெற சிறந்த வேள்விகளைச் செய்வோம்.


வேள்வித்தீ வினைகளைப் பொசுக்கும்

பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே.  – (திருமந்திரம் – 219)

விளக்கம்:
ஆழ்ந்த அகலில் நின்று எரியும் திரி, விளக்கில் உள்ள எண்ணெய் எல்லாவற்றையும் காலி செய்கிறது. அது போல நாம் செய்யும் வேள்விகளின் தீ நமது ஊழ்வினைகளை அகற்றும். நமது வினைகளால் ஏற்பட்ட நோய்களும், துன்பங்களும் தீரும். இறைவனைப் போற்றி நாம் செய்யும் வேள்விகள் வினைகளைச் சுட்டுப் பொசுக்கும்.


புருவ மத்தியின் சுடர்

நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே.  – (திருமந்திரம் – 218)

விளக்கம்:
நெய் நின்று எரியும் வேள்வித்தீயை வளர்ப்பதுடன், புருவ மத்தியில் விளங்கும் சுடரின் இயல்பையும் அறிந்து கொள்வோம். புருவ மத்தியின் சுடரை நாம் உணரும் நாள், நம்முடைய பாவங்கள் எல்லாம் நீங்கும் நல்ல நாளாகும். தொடர்ந்து புருவ மத்தியின் சுடரை நின்று எரியச் செய்வதே இன்பம் தரும் சிறந்த வேள்வியாகும்.

தீயதுவாமே – தீ (வேள்வி) + அதுவாமே


ஆகமங்களை விரும்பிக் கற்போம்

போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.  – (திருமந்திரம் – 217)

விளக்கம்:
ஆணும் பெண்ணும் இரு வேறு மலர்களின் வண்டுகளைப் போன்றவர்கள். அவர்களுடைய விருப்பங்களும் வேறு வேறாகவே இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபடுகிறார்கள். வேதங்களையும் சிவாகமத்தையும் புரிந்து கொண்டுக் கற்கிறார்கள். இதனால் அவர்களிடம் குண்டலினி சக்தியும் ஞான சக்தியும் மேம்பட்டு விளங்குகிறது.