தத்துவங்கள் புரிந்து உண்மையாக வழிபட வேண்டும்!

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.   – (திருமந்திரம் – 522)

விளக்கம்:
உண்மையான தத்துவங்களைப் புரிந்து கொள்ளாமல், பொய்யான புகழுரைகளால் போற்றி வணங்குபவர்களைப் பற்றி அவனுக்குத் தெரியாதா? செழுமையான கடலையும் அவற்றால் சூழப்பட்டுள்ள இந்த நிலத்தையும் படைத்தவன் நம் சிவபெருமான் அல்லவா? உண்மையான தத்துவங்களைப் புரிந்து உணர்வோடு வழிபடுவர்களை விண்ணில் உள்ள தேவர்களும் வணங்குவார்கள். கறுத்த கழுத்தினைக் கொண்ட சிவபெருமான் இவ்வாறு நமக்கு அருள்வான்.


கண்டம் கறுத்த கருத்து அறிவாரில்லை!

அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.   – (திருமந்திரம் – 521)

விளக்கம்:
சிவபெருமானின் ஆறாவது முகம் அதோமுகமாகும். அதோமுகம் கீழ் நோக்கியதாக இருக்கும். இந்த உலகத்தையும் சுற்றி உள்ள எட்டுத்திசைகளையும் சிவபெருமானின் அதோமுகமே தாங்கி நிற்கிறது. சிவபெருமானின் கழுத்து கறுத்திருப்பதில் உள்ள கருத்தை யாரும் இங்கே தெரிந்து கொள்ளவில்லை. விஷம் குடித்தார், அதனால் கழுத்து கறுத்தது என மேம்போக்காக புரிந்து கொள்பவர் உணர்வில்லாதவர். கறுத்த அக்கழுத்தில் வெண்மையான மாலையாக இறந்தவர்களின் கபாலங்கள் விளங்குகின்றன.