சோதிக்கும் கடவுள்

சோதித்த பேரொளி மூன்றுஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. – (திருமந்திரம் – 110)

விளக்கம்:
பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மூவராகவும், பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவராகவும் விளங்குவது ஆதிக்கடவுளான சிவபெருமானே ஆகும். அவன் ஒளி வீசும் பேரொளிச் சுடராக உள்ளான். மூடர்கள் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரை வெவ்வேறானவராக எண்ணி பேதித்துப் பிதற்றுகிறார்கள்.

(சோதித்த – ஒளி விடுகின்ற,  ஆதர்கள் – மூடர்கள்)

இந்தப் பாடலில் சோதித்த என்னும் சொல் ஒளி விடுகின்ற என்னும் பொருளில் வருகிறது.  கடவுள் சோதிக்கிறார் என்றால் கடவுள் ஒளி விடுகிறார் என்று அர்த்தம். கடவுள் நம்மைத் தொடர்ந்து சோதிக்கட்டும்.


கிராஃபிக் டிசைனிங் – சில உதவிக்குறிப்புகள் பாகம்-01

கிராஃபிக் டிசைனிங்கில் ஆர்வம் உடையவர்களுக்கு எனக்குத் தெரிந்த சில உதவிக் குறிப்புகளை (tips) இங்கே பகிரலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். இதில் ஃபோட்டோ ஷாப்பிலோ அல்லது கோரல் ட்ராவிலோ உள்ள கருவிகளின் உபயோகம் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. நாம் வேலை செய்யும் டிசைனின் தோற்றத்தை மேம்படுத்துவது பற்றி மட்டுமே எழுதுவதாக உள்ளேன். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் – டிப்ஸ் தரும் அளவுக்கு இவன் யார்? இவனுக்கு என்ன தெரியும்? என்று. அதைப் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன்.

நடிகர் சுருளிராஜன் ஒரு வில்லுப்பாட்டில் சொல்லுவார் ‘தெரியாதது எதுவோ, அதில தான் நாம முன்னுக்கு வர முடியும்’ன்னு. என் கதை அப்படித்தான். பதினஞ்சு வருஷமா இன்னும் எனக்கு புரிபடாத இந்த கிராஃபிக் டிசைனிங் தான் உண்ண உணவும், வசிக்க இடமும் தந்திருக்கிறது. இப்போதும் வாடிக்கையாளரை பக்கத்தில் வைத்துக் கொண்டு டிசைன் செய்வதை தவிர்த்து விடுகிறேன். அதற்கு காரணம், ஒரு டிசைனின் அடிப்படைத் தோற்றம் உருவாக நான் படும் பாட்டை பார்த்தால், எனக்கு டிசைனிங் தெரியாது என்னும் உண்மை வெளியே தெரிந்து விடும் என்பதால். சில சமயம் டிசைன் நன்றாக அமைந்து விடுவது உண்டு, அதற்கு காரணம் வாடிக்கையாளரின் ஜாதக விஷேசமே ஆகும். ஒவ்வொரு டிசைனுக்கும் அதிக நேரமும், முயற்சியும் எடுத்துக் கொள்வதால், அந்த அனுபவங்களில் இருந்து பகிர்ந்து கொள்ள சில விஷயங்கள் இருப்பதாக நம்புகிறேன்.

மிகவும் அடிப்படையான விஷயமாக நான் நினைப்பது, வாடிக்கையாளர் கொடுக்கும் இன்புட். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது முதலில் தெளிவாகத் தெரிய வேண்டும். டிசைன் செய்யப்பட வேண்டியது லேபிளா, போஸ்டரா, அட்டைப்பெட்டியா, புக் கவரா என்பதுடன் அதன் அளவு கண்டிப்பாக வேண்டும். நிறைய பேர் முதலில் சரியான அளவு தருவதில்லை. “ஒரு டிசைன் போடுங்க, சைஸ் பிறகு மாத்திக்கிடலாம்” என்பார்கள். கடுமையான சொல்லுக்கு மன்னிக்கவும், மிகவும் முட்டாள்தனமான வேலை வாங்கும் முறை இது. சைஸ் மாற்றுவது எளிய வேலை தானே என்பார்கள். அது கஷ்டமா அல்லது எளிதா என்பது ஒரு பிரச்சனை இல்லை. நன்றாக அமைந்த ஒரு டிசைன் பிறகு சைஸ் மாற்றப்படும் போது, அதுவும் அதன் நீள அகல விகிதம் மாறினால், டிசைனின் தோற்றப்பொலிவு குறைந்து போகும். ஒரு டெய்லரிடம் போய் யாரும் குத்து மதிப்பா ஒரு சட்டை தைங்க, அளவு சேரலைன்னா பிறகு ஆல்டர் பண்னிக்கிடலாம்ன்னு சொல்லுவதில்லை. எல்லாம் நம்மிடம் மட்டும்தான். இன்னொரு விஷயம், A4 size என்பார்கள். A4 size என்பது 210 mm x 297 mm, ஆனால் நம் ஊரில் letter size முதல் foolscap size வரை எல்லாமே A4 என்று சொல்வது வழக்கம். சரியான A4 size ப்ரிண்ட் செய்ய 63,5 cm x 86 cm பேப்பர் அவசியம், பொதுவாக நமது ப்ரிண்டர்கள் உபயோகிப்பது 58.5 cm x 91 cm ஆகும். அதனால் அளவு மில்லி மீட்டரில் இருந்தால் நல்லது.

வாடிக்கையாளரிடம் அளவு உட்பட எல்லா விபரங்களும் தயங்காமல் கேட்டு வாங்குவது ஒரு நல்ல டிசைனின் ஆரம்பம். ஒரு உற்பத்திப் பொருளுக்கு பேக்கிங் டிசைன் கேட்டால், அதன் விற்பனை விலை முதல் எல்லா விபரங்களும் நான் வாங்கி விடுவதுண்டு. காரணம், பேக்கிங்கிற்கு ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ அதிகமாக செலவழிக்க வாய்ப்பிருந்தால் அதற்கேற்ற மாதிரி spot color printing, foils அல்லது UV ஏதோவொன்று டிசைனிங்கின் போது திட்டமிட்டுக் கொள்ளலாம் என்பதால். அடுத்து பொருளின் பெயர், அதைத் தயாரிக்கும் கம்பெனியின் பெயர் இவற்றில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்வது. சில பெயர்கள் அர்த்தம் புரியாது, ஆனால் அந்த பெயருக்கு ஏதாவது காரணம் இருக்கும். அதை கேட்டுத் தெரிந்து கொண்டால் பொருத்தமான டிசைன் அமைப்பது சுலபமாக இருக்கும்.

வேலை ஆரம்பிக்கும் போது சரியான document size மற்றும் key line அமைத்து விடுவது அவசியம். இது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இப்போதைய trend
drop shadow, outer glow, outline போன்ற எதுவும் உபயோகிக்காமல்,
ஆனால் text எல்லாம் தெளிவாகத் தெரியும்படி layout செய்வது தான்.


வாசம் செய்கிறான்… வாசனை பரப்புகிறான்…

வானவர் என்றும் மனிதர்இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே. – (திருமந்திரம் – 109)

விளக்கம்:
மனிதர்களாகிய நம் அனைவரின் உடலிலும், தேன் நிறைந்த கொன்றை மலர் அணிந்த சிவபெருமான் அமர்ந்திருக்கிறான். வானுலகில் உள்ள தேவர்களின் உடலிலும் அந்த சிவபெருமான் வாசம் செய்கிறார். நம்முடைய பிறவிப் பயன் எதுவென்றால்,  நம் உடலில் மணம் பரப்பி வாசம் செய்யும் அந்த சிவபெருமானை உணர்வது தான்.


சில பல கிறுக்கல்கள்

[liveblog]காலம் நம்மைக் கடப்பதில்லை. நாமும் காலத்தைக் கடப்பதில்லை. காலத்துடன் ஒருங்கிணைந்த பயணம் நம்முடையது.

மனிதன் வடிவமைத்த கான்செப்ட்களில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று கடவுள், மற்றொன்று பணம்.

மனிதன் கண்டுபிடித்த கடவுளை மறுப்பவர்கள் பணத்தையும் மறுப்பது தான் நியாயம்.

கடவுள், பணம் இரண்டுமே உருவமாகவும், அருவமாகவும் அருள் பாலிப்பவை.

முட்டைகள் தங்கள் இனத்தை பெருக்கிக் கொள்வதற்காக கோழிகளை இடுகின்றன.


திருமூலருக்கு சிவபெருமானின் கட்டளை

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே. – (திருமந்திரம் – 108)

விளக்கம்:
அழிவில்லாத தன்மை கொண்ட தேவர்கள் நிறைந்த திருச்சபையில், பால் போன்ற மேனி கொண்ட அந்த சிவபெருமானைப் பணிந்து வணங்கினேன். அந்த சிவபெருமான் “நீ திருமாலுக்கும் பிரமனுக்கும் ஒப்பாவாய்! மண்ணுலகில் உள்ள மக்களுக்கெல்லாம் எம் திருவடியின் சிறப்பை எடுத்துச் சொல்!” என்றான்.

(ஒலக்கம் – திருச்சபை,  உலப்பிலி – அழிவில்லாத,  ஞாலம் – பூமி)


சிவனின் உறவினர்

பயன்அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே. – (திருமந்திரம் – 107)

விளக்கம்:
பக்தர்கள் அடையும் பயனை எண்ணிப் பார்க்கும் போது, பிரமனும் திருமாலும் சிவபெருமானுக்கு வேறானவர்கள் இல்லை. அவர்கள் மூன்று கண்களை உடைய சிவனது உறவினர்களே ஆவர். அதனால் அவர்களையும் வணங்கி நாம் பயன் பெறலாம்.

(நயனம் – கண்,  தமர் – சுற்றத்தார்)


சங்கரன் என்றால் சுகம் தருபவன்

சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே. – (திருமந்திரம் – 106)

விளக்கம்:
சிவன், சதாசிவன், மகேசுரன் என மூன்று பேராகச் சொன்னாலும்,   சதாசிவன், மகேசுரன்,  உருத்திரன், திருமால், பிரமன் என்று ஐந்து பேராகச் சொன்னாலும் எல்லாம் ஒருவரே. சங்கரன் என்னும் ஒரே கடவுள் தான் மூன்றாகவும், ஐந்தாகவும் வகுத்துச் சொல்லப்பட்டு திருச்சிற்றம்பலச் சபையில் விளங்குகிறான். சிவன், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனச் சிவனது நிலைகளை ஒன்பதாகச் சொல்வதும் உண்டு.


தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே

ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
நீசர் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. – (திருமந்திரம் – 105)

விளக்கம்:
ஈசன் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளுக்கு அப்பாற்பட்டவன். தாமரை மொக்கு போன்ற அந்த சிவபெருமான்  உலகின் பெருந்தெய்வம் ஆவான். தெய்வ நினைப்பில்லாத நீசர்கள் அது இது என்று பிதற்றுவார்கள். மனத் தூய்மை உடையவர்கள் இறைவனின் வேர் அறிந்தார்களே!

(தூசு பிடித்தவர் – தூய்மையானவர்)


மூவரும் ஒருவரே!

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.   –  (திருமந்திரம் – 104)

விளக்கம்:
ஆதிப்பிரானான சிவன், அழகிய மணிவண்ணனாகிய திருமால், தாமரை மலரில் எழுந்தருளும் பிரமன் – இவர்கள் மூவரும் அழித்தல், காத்தல், படைத்தல்  ஆகிய தமது தொழில்களினால் வேறுபட்டுத் தோன்றுகிறார்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூவரும் ஒருவரே என்பது புரியும். இந்த உலகத்தார் உண்மை புரியாமல், இவர்கள் வெவ்வேறானவர்கள் என்று நினைத்து தமக்குள் பிணங்கி நிற்கிறார்களே!