அனைத்துக்கும் ஆதாரமானவன்!

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.  – (திருமந்திரம் – 447)

விளக்கம்:
முதன்மையானவன் ஆன சிவபெருமானே இந்த உலகின் ஆதாரமான ஐந்து பூதங்களைப் படைத்தான். அவனே பல யுகங்களைப் படைத்து அருள் செய்தான். எண்ணில்லாத தேவர்களைப் படைத்தவன் நம் சிவபெருமானே! அவன் தான் படைத்த அனைத்தையும் அருள் செய்து காக்கின்றான்.


படைத்தவன் அவனே! ஆள்பவனும் அவனே!

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.  – (திருமந்திரம் – 446)

விளக்கம்:
சிவபெருமான் ஏழு உலகங்களையும் படைத்து அவற்றை எல்லாம் தன்னுடைய உடைமையாகக் கொண்டான். வானுலகில் உள்ள தேவர்களை எல்லாம் படைத்தவன் அவனே! அவர்களை எல்லாம் ஆள்பவனும் அவனே! இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அவனே படைத்து ஆள்கிறான். எல்லாவற்றையும் படைத்தவன் நம் சிவபெருமான் என்பதால், அவனே மேலானவனாகிறான்.


நான் அவன் விருப்பத்திற்கு உரியவன்!

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.  – (திருமந்திரம் – 445)

விளக்கம்:
சிவபெருமான் ஏழு உலகங்களையும் தன்னுடைய விருப்பத்தினால் படைத்தான். பல யுகங்களையும் விரும்பிப் படைத்தான். மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களையும் விரும்பியே படைத்தான். இந்த உடலும் உயிரும்  படைக்கப் பட்டதும் அவன் விருப்பப்படியே !

நாமெல்லாம் சிவபெருமானின் விருப்பத்திற்கு உரியவர்களே.


சிவபெருமானின் எண்குணங்கள்

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்குங்
கொடையுடை யான்குணம் எண்குண மாகுஞ்
சடையுடை யாஞ்சிந்தை சார்ந்துநின் றானே.   – (திருமந்திரம் – 444)

விளக்கம்:
சிவபெருமானை யாருடனும் ஒப்பிட முடியாது. அவனை யாரும் படைக்கவில்லை, அவன் தான் அனைத்தையும் படைக்கிறான். அதனால் தான் அவனை நாம் விகிர்தன் என்று அழைக்கிறோம். அந்த விகிர்தன் காளையை ஊர்தியாகக் கொண்டவன், மிகுந்த பூதப் படைகளைக் கொண்டவன். நமக்கெல்லாம் அவன் கொடுத்தப் பரிசே இந்த உலகம். எட்டு குணங்களைக் கொண்ட நம் சிவபெருமான் நாம் வேண்டியவற்றை எல்லாம் அருளும் கொடைத்தன்மை உடையவன். அவன் நம் சிந்தையில் எப்போதும் இருக்கிறான்.

சிவபெருமானின் எட்டு குணங்கள் –
1. தன் வயத்தன்
2. தூய உடம்பினன்
3. இயற்கை உணர்வினன்
4. முற்றும் உணர்ந்தவன்
5. பாசங்களை விட்டு நீங்கியிருப்பவன்
6. பேரருள் உடையவன்
7. முடிவில்லாத ஆற்றல் உடையவன்
8. வரம்பில்லாத இன்பம் உடையவன்


உயிர்கள் விதவிதமாய் இருந்தாலும் …

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுயிது வாமே.   – (திருமந்திரம் – 443)

விளக்கம்:
குயவன் தான் செய்யும் பாத்திரங்களை எல்லாம் ஒரே மாதிரி செய்வதில்லை. சக்கரத்தில் ஏற்றும் மண்ணைக் குயவன் தன் மனம் போனபடி விதவிதமான வடிவங்களில் பாத்திரமாகச் செய்வான்.  விதவிதமானப் பாத்திரங்களை அவன் செய்தாலும், சக்கரத்தின் இயக்கம் ஒன்று போலவே இருக்கும். அது போலவே, நம் தலைவனான சிவபெருமான் விதவிதமான உயிர்களைப் படைத்தாலும், குயவனின் சக்கரம் போல் இந்த உலகம் இயங்கும் விதம் நிலையானதாக இருக்கும்.


நம் சிந்தையை உச்சியில் நிறுத்துவோம்!

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே.   – (திருமந்திரம் – 442)

விளக்கம்:
நமது உச்சந்தலைக்கு மேல் விளங்கும் ஒளி மிகுந்த நாதத்தை விரும்பித் தியானித்திருந்தால், நமக்கு இறப்பு என்பதே கிடையாது. (அதாவது நம்முடைய இறப்பு மற்றவர்களுடையது போல் துன்பம் மிகுந்ததாக இருக்காது). அனைத்தையும் விஞ்சும் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சுடர்களைத் தைத்து, இந்த உலகில் உயிர்களை எல்லாம் படைக்கிறான், எல்லாம் வல்ல நம் சிவபெருமான்.


உயிரை உடலோடு கட்டுவான், பின்பு அவிழ்ப்பான்

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.   – (திருமந்திரம் – 441)

விளக்கம்:
எட்டுத்திசையும் வீசுகின்ற காற்றோடு, வட்ட வடிவமாய் உள்ள கடல் நீர், அக்னி, நிலம், வானம் ஆகியவற்றைச் சேர்த்து ஐம்பூதங்களால் நம் உயிரையும் உடலையும் ஒன்றாகக் கட்டி வைத்திருப்பவன், நெற்றிக்கண்ணை உடைய நம் சிவபெருமான் ஆவான். கட்டிய உயிரையும் உடலையும் அவிழ்ப்பவனும் அவனே!


இருக்கிறான்! நம்மால் தான் காண முடிவதில்லை

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.   – (திருமந்திரம் – 440)

விளக்கம்:
ஒரே மண்தான் பலவிதமான பாத்திரங்களாக உருவாகின்றன. அது போல் உலகத்து உயிர்களில் எல்லாம் சிவனே இருக்கிறான். நமது கண்கள் பலவிதமான புறப்பொருட்களைக் காண்கின்றன. ஆனால் தன்னைத் தானே காண முடிவதில்லை. அது போல் நம்மால் நம்முள் இருக்கும் சிவனைக் காண முடிவதில்லை.


கங்கைக்கரையில் நின்றால் பாவம் நீங்கும்

ஒருங்கிய பாசத்துள் உத்தமச் சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கற லாமே.   – (திருமந்திரம் – 439)

விளக்கம்:
நாமெல்லாம் உத்தமர்கள் தாம், ஆனால் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றில் மூழ்கியுள்ளோம். அலை மிகுந்த கடலில், கரை அருகிலிருந்தாலும், மூழ்குபவனுக்கு அது தெரிவதில்லை. அது போல் ஆணவம் முதலியவற்றில் மூழ்கியுள்ள நமக்கு கரையேறி சிவன் திருவடியை நாடி இருக்கும் வழி தெரிவதில்லை. நாம் மாயக்கடலில் மூழ்காமல் கங்கைக்கரையில் நிற்பது போல, மாயையில் சிக்காமல் நின்றால் நம் பாவமெல்லாம் நீங்கப் பெறலாம்.


நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்!

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திருந் தானே.   – (திருமந்திரம் – 438)

விளக்கம்:
உருத்திரன், திருமால், வாசனை நிறைந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் ஆகியோர் அங்கும் இங்கும் ஓடியாடி இயங்குகிறார்கள். ஆனால் நம் சிவபெருமான் நின்ற இடத்திலேயே எந்தவித செயலும் இன்றி எல்லாவற்றையும் நிகழ்த்துகிறான்.