தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே. – (திருமந்திரம் – 653)

விளக்கம்:
நமது உடலில் ஒன்பது வாயுக்கள் ஒன்றுகொன்று சேர்ந்திருந்து இயங்குகின்றன. அவை பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன் ஆகியன ஆகும். இந்த ஒன்பது காற்றுக்களோடு தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று சேர்ந்து இயங்கினால் தான் நம்முடைய உடலும் உயிரும் சேர்ந்திருக்கும்.


சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே!

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தின் திருநடத் தோரே. – (திருமந்திரம் – 652)

விளக்கம்:
சிவத்தைப் பற்றியே நினைத்திருந்து சித்தமெல்லாம் சிவமயம் ஆகிய சிவமுத்தர் மௌனமே முத்தி அடையும் வழி என்னும் உண்மையை உணர்ந்தவர்கள். அவர்கள் ஐம்புலன்களின் தொடர்பையும் அறுத்து எறிந்து மனம் சுத்தம் பெற்றவர்கள். சுத்தம் பெற்ற அவர்களின் சித்தமெல்லாம் சிவபெருமானின் திருநடனமே நிறைந்திருக்கும். அந்நடனத்திலேயே அவர்கள் மனம் லயித்திருப்பார்கள்.


தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்

முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வலர்
உந்தியுள் நின்று உதித்தெழு மாறே. – (திருமந்திரம் – 651)

விளக்கம்:
இத்தனை காலமும் தினமும் காலை வானம் வெளிச்சம் பெற்று விடிகிறது. அன்றைய நாழிகைக் கணக்கு ஆரம்பிக்கிறது. ஆனால் நமக்கு அந்நேரம் ஆன்மிகச் சிந்தனை வருவதில்லை. நாம் தினந்தோறும் அதிகாலையில் மண் முதலான பஞ்ச பூதங்களோடு மனம் ஒன்றித் தியானம் செய்ய வேண்டும். அப்படி தினமும் செய்து வந்தால் சுவாதிட்டானம் எனப்படும் கொப்பூழ் பகுதியில் இருந்து குண்டலினி மேலெழுவதை உணரலாம்.