சிங்காதனம் செய்யும் முறை

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.    – (திருமந்திரம் – 562)

விளக்கம்:
முழந்தாளிட்ட நிலையிலே அமர்ந்து  கைகளை முன்னால் நீட்டி, விருப்பத்தோடு வாய் பிளந்த நிலையில், கண்களின் பார்வை மூக்கு நுனியை நோக்கி இருந்தால் அது சிங்காதனம் ஆகும்.

பாணி – கை,    அங்காந்து – வாய் பிளந்த நிலை,   கோதில் – குற்றம் இல்லாத


குக்குட ஆசனம்

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே.   – (திருமந்திரம் – 561)

விளக்கம்:
இரண்டு பாதங்களையும் ஒரு சேர எதிர் தொடைகளின் மேல் வைத்து, முழங்கையை கீழே ஊன்றி, முயற்சி செய்து உடலை மேலே ஏற்றி, உடல் பாரம் கைகளில் தங்கும்படியாக செய்ய வேண்டும். இந்த நிலையில் அசையாமல் இருந்தால் அது குக்குட ஆசனம் ஆகும்.

பத்மாசனத்தில் அமர்ந்து கைகளை தரையில் ஊன்றி உடலை மேலே ஏற்றி அசையாமல் இருப்பது குக்குட ஆசனம்.

ஒக்க – ஒரு சேர,   ஊரு – தொடை,   முக்கி – முயற்சி செய்து,   துளங்காது – அசையாது


பத்திராசனம் செய்யும் முறை

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளி லங்கையை நீட்டி
உருசி யொடுமுடல் செவ்வே யிருத்திப்
பரிசு பெறுமது பத்திரா சனமே.   – (திருமந்திரம் – 560)

விளக்கம்:
சரியான முறையில் வலது பக்க காலை  இடது பக்க தொடையின் மேல் வைத்து, இரு கைகளையும் முழங்காலின் மீது நீட்டி இருக்க வேண்டும். அந்நிலையில் உடல்  நேராக நிமிர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். விருப்பத்துடன் இதைச் செய்தால் இது நன்மை தரும் பத்திராசனம் ஆகும்.

துரிசு – குற்றம்,   அங்கை – உள்ளங்கை,   உருசி – விருப்பம்,   செவ்வே – நேராக


பத்மாசனம் செய்யும் முறை

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.   – (திருமந்திரம் – 559)

விளக்கம்:
சுகாசன நிலையில் அமர்ந்து ஒரு காலை அணைந்தவாறு தொடையின் மேல் ஏற்றி, நன்றாகப் பற்றிக் கொண்டு இடது கால் வலது தொடையிலும், வலது கால் இடது தொடையிலுமாக வைத்து, அழகாக கைகளை மலர்த்தி தொடையின் மேல் வைத்தால், அது உலகம் புகழும் பத்மாசனம் ஆகும்.

ஊரு – தொடை,     சீர் – அழகு,    பார் – உலகம்


சோர்வை நீக்கும் ஆசனம்

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே.   – (திருமந்திரம் – 558)

விளக்கம்:
பத்மாசனம் முதலாக பல ஆசன முறைகள் உள்ளன. அவற்றுள் எட்டு ஆசன முறைகள் முக்கியமானவை ஆகும். சோர்வு நீக்கும் சுவத்திகாசனம் அவற்றில் சிறந்த ஒன்றாகும். இந்த ஆசனத்தில் பொருந்தி இருந்தால் சிறந்தவன் ஆகலாம்.

கால்களைக் குறுக்கிட்டு வைத்துக்கொண்டு உடல் நிமிர அமரும் ஆசனவகை இது. சுவத்திகாசனத்தை சுகாசனம் எனவும் உரைப்பர்.

பங்கயம் – பத்மாசனம்,     சொங்கு – சோர்வு,    சுவத்திகம் – சுவத்திகாசனம்


நியமத்தரின் கடமைகள்

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.  –  (திருமந்திரம் – 557)

விளக்கம்:
தவம், செபம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை,  தானம், விரதம்,  கல்வி, யாகம், சிவபூசை, பேரொளி தரிசனம் ஆகிய பத்து கடமைகளை நாம் செய்து வந்தால் நியமத்தில் நிற்கிறோம் என்று அர்த்தம்.

சந்தோடம் – மகிழ்ச்சி,  சித்தாந்தம் – சிவாகமம்,   கேள்வி – கல்வி,   மகம் – யாகம்


நியமத்தில் நிற்பவரின் குணங்கள்

தூய்மை  அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.  –  (திருமந்திரம் – 556)

விளக்கம்:
தூய்மை, கருணை, சுருங்கிய உணவு, பொறுமை, நேர்மை, உண்மை, உறுதியுடைமை ஆகியவற்றைக் கடைபிடிப்போம். காமம், களவு, கொலை ஆகியவற்றை விலக்குவோம். இவை அனைத்தும் நியமத்தில் நிற்பவர் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களாகும்.

பொறை – பொறுமை, செவ்வை – நேர்மை,  நேமி – சிந்தித்தல்


நியமத்தில் நியமனம் பெறுவோம்

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசக்தி யோடுடன்
நீதி  யுணர்ந்து நியமத்த னாமே.  –  (திருமந்திரம் – 555)

விளக்கம்:
நியமத்தை மேற்கொள்பவர்கள் இந்த உலகின் முதல்வன் சிவபெருமான் என்பதை உணர்வார்கள். நியமத்தில் நின்றால் வேதத்தின் பொருள் சிவன் என்பதையும், அருள் சோதியும் அவனே, அந்த சோதியில் விளங்கும் அக்கினியும் அவனே என்பதையும் உணரலாம். சிவபெருமான் தன்னுடைய பாதியாய் விளங்கும் பராசக்தியுடன் நிலைபெற்றிருக்கும் தன்மையையும் புரிந்து கொள்ளலாம்.

தீயவற்றை விலக்கும் இயமத்தின் அடுத்த நிலை நியமம். நியமம் என்பது நல்லவற்றைச் செய்யும் ஆன்மிகக் கடமை.


இயமத்தில் நிற்பவரின் குணங்கள்

கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே.  –  (திருமந்திரம் – 554)

விளக்கம்:
இயமம் என்பது தீயவற்றைச் செய்யாமல் விடுதல் ஆகும். இது யோக வழியின் முதல் நிலை. இயமத்தை மேற்கொள்பவர் ஓர் உயிரையும் கொல்ல மாட்டார். பொய் சொல்ல மாட்டார். திருட மாட்டார். பிறரை மதிக்கும் நல்ல குணம் உள்ளவர், நல்லவர், அடக்கமுடையவர். நடுவு நிலையில் நிற்க வல்லவர். தன் பொருளை பிறர்க்குப் பகிர்ந்துது தருபவர். குற்றம் இல்லாதவர், கள் காமம் தவிர்த்தவர்.

எண் – மதிப்பு,   மாசிலான் – குற்றம் இல்லாதவன்,  கட்காமம் – கள், காமம்


மழை பெய்தாலும் நியமங்கள் தவறக்கூடாது

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.  –  (திருமந்திரம் – 553)

விளக்கம்:
எட்டுத் திசைகளிலும் மழை சூழ்ந்து பெய்தாலும், மனதிற்கு குளிர்ச்சி தரும் நியமங்களைத் தவறாமல் செய்வோம். நியமங்களில் உறுதியாக இருந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர்க்கும், பவளம் போன்ற குளிர்ந்த சடை கொண்ட சிவபெருமான் அருள் புரிந்தான்.