யோகத்தினால் காமம் குரோதம் அழியும்

ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கேயுந் தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே. – (திருமந்திரம் – 661)

விளக்கம்:
மூலாதாரத்தில் இருந்து தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு ஓடிச்சென்று அங்கே சிவபெருமானை உணர்ந்தவர்கள் தமது நாடியுள் நாதத்தை உணர்வார்கள். சிவயோகிகள் அந்த யோகத்தினால் ஊறும் அமுதத்தை நுகர்ந்து இன்புறுவார்கள். இந்நிலையிலேயே தொடர்ந்து யோகம் பயின்று வந்தால் நமக்குள் இருக்கும் காமம், குரோதம் போன்ற பகைவர்கள் அழிவார்கள்.


சுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே. – (திருமந்திரம் – 660)

விளக்கம்:
வலையில் அகப்பட்ட மான் அங்கும் இங்கும் அசைய முடியாமல் நிற்கும் நிலை போல, சுழுமுனையில் மட்டுமே கவனம் செலுத்தி மூச்சுப்பயிற்சி செய்வோம். அதுவே அட்டமாசித்தியை நோக்கிச் செல்லும் தூய வழியாகும். தொடர்ந்து சுழுமுனையில் நின்று மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் சக்தியாக விளங்கும் குண்டலினி தலைஉச்சியில் இருக்கும் சிவபெருமானை சென்று அடையும். இதனால் கிடைக்கும் பலன்கள் எப்படிப்பட்டது என்றால் உண்பதற்கும் விலைக்கு விற்பதற்கும் சேர்த்து விதை கிடைப்பது போன்றதாகும்.


அருள் வழியில் நிற்கும் வழிமுறை

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே. – (திருமந்திரம் – 659)

விளக்கம்:
சிவபெருமானின் அருள் வழியில் நிற்க விரும்புவர்களுக்கு திருமூலர் சொல்லும் வழிமுறை இதுதான். மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை சுழுமுனை வழியாக தலை உச்சிக்கு கொண்டு செல்வது, பிங்கலை இடைகலை வழியாக மூச்சுப்பயிற்சி செய்வது, இப்பயிற்சியினால் ஏழு உலகங்களையும் தாங்கி நிற்கலாம் என்னும் உண்மையை உணர்வது ஆகியவையாகும்.


உடல் தரும் துன்பம் நீங்க …

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒருங்கவல் லார்களுக்
கொன்பது வாசல் உலைநல மாமே. – (திருமந்திரம் – 658)

விளக்கம்:
ஒன்பது வாசல்களைக் கொண்ட இந்த உடல் கொதிக்கும் உலை போல் துன்பப்படுகிறது. நம் உடலின் ஒன்பது நாடிகள் ஒருங்கே கூடும் சுழுமுனையில் மனம் செலுத்தி தொடர்ந்து தியானம் செய்து வந்தால், துன்பம் தரும் இந்த உடல் இன்பம் தருவதாக அமையும்.


நாடித்துடிப்பு இருக்கும் வரையில் சிவனை நினைப்போம்!

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே. – (திருமந்திரம் – 657)

விளக்கம்:
ஈசன், திருமால், பிரமன் ஆகியோர், என்றும் சுடர் விடும் சோதியான நம் சிவபெருமானை கண நேரமும் விடாமல் தியானம் செய்கிறார்கள். நாமும் நம் கண்ணிலும் இருதயத்திலும் நாடியின் ஓசையை உணர்ந்திருக்கும் வரை அந்தச் சுடர் விடும் சோதியை நம் சிந்தையில் இடையறாது நிறுத்துவோம்.