யோகத்தினால் வல்லவன் ஆகலாம்!

தானே படைத்திட வல்லவ னாயிடுந்
தானே யளித்திட வல்லவ னாயிடுந்
தானே சங்காரத் தலைவனு மாயிடுந்
தானே யிவனெனுந் தன்மைய னாமே. – (திருமந்திரம் – 686)

விளக்கம்:
அட்டமாசித்தியான ஈசத்துவத்தைப் பெறும் போது நமது வாழ்க்கை விதி வழி செல்லாது நாம் நினைத்தபடி அமையும். நாமே நமது வாழ்க்கையில் ஒரு காரியத்தைத் திட்டமிடலாம், வெற்றிகரமாக நடத்தலாம், நல்லபடியாக நிறைவு செய்யலாம். விதியின் குறுக்கீடு இருக்காது. அட்டாங்க யோகத்தில் நின்று அட்டமாசித்தியைப் பெறுபவர்களுக்கே இதெல்லாம் சாத்தியம்.


யோகத்தினால் குளிர்ந்த தன்மை பெறுவோம்!

ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே. – (திருமந்திரம் – 685)

விளக்கம்:
தொடர்ந்த தியானத்தில் சந்திரகலை கைகூடும் போது, மனம் நிலவைப் போன்ற குளிர்ச்சியைப் பெறும். நாமும் சந்திரனைப் போன்ற ஒளி கொண்டவராக இருப்போம். அட்டமாசித்தியான ஈசத்துவத்தைப் பெறும் போது நாமும் சந்திரனைப் போல உலகத்துக்கே குளிர்ந்த நன்மை அளிப்பவராய் ஆவோம்.


ஈசத்துவம்!

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாங்
கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்
பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே. – (திருமந்திரம் – 684)

விளக்கம்:
சதாசிவத்தைத் தேடி உச்சிக்குச் செல்லும் நாயகியான குண்டலினி, நிலைத்து உச்சியிலேயே நிற்கும் போது, ஐம்பூதங்கள் இயங்கும் விதத்தைப் புரிந்து கொள்ளலாம். அதனால் ஏற்பட்ட தெளிவுடன் தொடர்ந்து ஓராண்டு தியானித்து வந்தால் மிகப் பழமையான ஈசனின் தத்துவம் புரிய வரும். அதுவே ஈசத்துவம் என்னும் சித்தியாகும்.