சித்தியை விட முக்தியே சிறந்தது!

தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்
கோங்கி வரமுத்தி முந்திய வாறே. – (திருமந்திரம் – 650)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தில் நிற்கும் யோகி அணுவின் தன்மையான அணிமா எனும் சித்தியையும், உலகத்தின் மொத்த உயிர்களையும் தாங்கி நிற்கும் தன்மையான மகிமா எனும் சித்தியையும்  அடைகிறார். அவற்றைப் பெறுவதில் குறை ஏதும் இல்லை. ஆனால் இந்தச் சித்திகள் வந்து சேர்வதற்கு முன்பே அட்டாங்க யோகத்தின் போது ஓம் என்னும் நாதம் எழுந்து சகசிரதளத்தை அடைந்து முக்தி வந்து சேரும். சித்தி பெறுவதை விட முக்தி பெறுவதே சிறந்ததாகும்.


அட்டமா சித்திகள்!

தானே அணுவுஞ் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகமுந்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே. – (திருமந்திரம் – 649)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தை பயில்வதால் நாம் அடையும் எட்டுச் சித்திகள் இவையாகும்.

1. அணிமா – அணுவைப் போல நுட்பமான உடல் ஆதல்
2. மகிமா – உலகளவு பெரிய உருவம் கொள்ளுதல்
3. கரிமா – அளவிட முடியாத கனம் கொள்ளுதல்
4. இலகிமா – வானத்தைப் போல லேசாக இருத்தல்
5. பிராத்தி – அழியாத உடலைப் பெறுதல்
6. பிராகாமியம் – பிற உடலில் புகுதல்
7. ஈசத்துவம் – மேம்பட்ட நிலையை அடைதல்
8. வசித்துவம் – யாவரையும் தன்வயப் படுத்துதல்