மிஸ். மரணம்

“டக். டக்!”

“யாரது?”

“மிஸ். மரணம் வந்திருக்கிறேன்”

“இன்னொரு நாள் வாம்மா! பொறு மிஸ்ஸுன்னா சொன்ன?”

“ஆமாம். என்னை யாரும் அவ்வளவு எளிதில் புணர்ந்து விட முடியாது”

“அது சரிதான். என்ன விஷயமா வந்திருக்க நீ?”

“உனது வாழ்நாள் எண்ணப்பட்டு விட்டது”

“ஏதும் விசாரணையா இப்ப? அல்லது தீர்ப்பா?”

“இல்லை. நீ உருமாற்றம் ஆகப்போகிறாய்”

“அப்படின்னா? கொஞ்சம் விபரமா சொல்லேன்”

“நடக்கும் போது நீயே தெரிந்து கொள்வாய்”

“அது என்ன எழவாவும் இருந்துட்டுப் போட்டும். இன்னைக்கு வேணாம். இன்னொரு நாள் வச்சுக்குவோம்”

“விளையாடுகிறாயா நீ? நீட்டிப்பத்ற்கு வாழ்நாள் ஒன்றும் உன்னுடைய ….”

“சரி. சரி. நிறுத்தும்மா. நான் ஏற்கனவே கோவத்துல இருக்கேன். கோவமா இருக்கும் போது நான் சாகக்கூடாது”

“நீ சாவதற்கு என்னுடைய கோபம் போதும்”

“நான் சொல்ற்து ஒனக்குப் புரியல. கோவமா இருக்கும் போது செத்தா, என்னால சாவ அனுபவிக்க முடியாது”

“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை”

“இன்னைக்கு நெறையக் கோவம் என் கண்ண மறச்சுக்கிட்டு இருக்குது. இப்ப செத்தா சாவும் போது என்ன நடக்குதுன்னு என்னால கவனிக்க முடியாது.”

“அதைக் கவனித்து என்ன ஆகப் போகிறது உனக்கு?”

“சாவைக் கட்டிப்பிடிச்சு வரவேற்கனும்னு நெனைக்கேன். சாவ அணு அணுவா ரசிக்கணும். அப்போ எனக்கு வேற எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது”

“இப்போது எனக்கு உன்னை உடனே கட்டிப்பிடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது மானிடா!”


கருவிலேயே சிவன் நம்முடன் கலந்து விடுகிறான்!

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.  – (திருமந்திரம் – 472)

விளக்கம்:
பூவைப் போன்ற யோனியுடன் மொட்டுப் போன்ற ஆண்குறி பொருந்தும் போது, அங்கே யோனி மலர்கின்றது. மலர்ந்த பின், அங்கே வயிற்றில் சுமக்கக்கூடிய கரு ஒன்று ஒளிமிகுந்த சிவ அணுக்களுடன் பிறக்கிறது. அந்தக் கருவின் பருவுடலோடு, நீரில் கலந்திருக்கும் குமிழியின் நிழல் போலே, நுண்ணுடலின் கருவிகள் எட்டும் பரவி நின்று அக்கருவைக் காத்திடும்.


கருவுக்கு உரு கொடுத்தவன்!

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே.  – (திருமந்திரம் – 471)

விளக்கம்:
அனைத்து வேதங்களிலும் இருந்து நான் கேட்டுத் தெரிந்து கொண்டது என்னவென்றால், இந்த உலகத்தைப் படைத்தவன் நம் சிவபெருமான் என்பதையே! அழிவில்லாத பெரும் சுடராகிய அவன், இந்த உலகின் முதல் படைப்பாளி ஆவான். ஆண் பெண் கூட்டுறவின் போது சேரும் விந்து மற்றும் சுரோணிதத்திலிருந்து கருவை உருவாக்குபவன் அவனே! உருவான கருவுக்கு உருவம் கொடுத்து நல்லதொரு உடலை உருவாக்குபவனும் அவனே!


உடலும் உயிரும் மட்டுமில்லை! இன்னொன்று இருக்கிறது!

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.  – (திருமந்திரம் – 470)

விளக்கம்:
நமக்கு உடல் அமைத்துக் கொடுத்தது போலவே, அதில் உயிர் வைத்தது போலவே, உடல் சரியாக இயங்க ஒன்பது வாசல்களை வைத்தது போலவே, உறுதி கொண்ட நமது சிரசின் மேலே ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரையின் உச்சியில் குண்டலினி என்னும் அக்னியை வைத்திருக்கிறான் ஈசன். சகசிரதளமான நமது சிரசின் உச்சியில் இருக்கும் அந்த ஈசனை, தியானத்தினால் கண்டடைந்து அவனுடன் கலந்திருந்தேனே!

நாம் உடலும் உயிருமாய் மட்டும் ஆனவர்கள் இல்லை. நமக்குள்ளே ஒரு அக்னி இருக்கிறது. அதை உணர்ந்தால், நாம் ஈசனை உணரலாம்.


நாம் சந்திக்கும் ஆறு விதமான துன்பங்கள்!

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே.  – (திருமந்திரம் – 469)

விளக்கம்:
நம்முடைய உடல் ஆறு விதமான துன்பங்களை எதிர்கொள்கிறது என்பதை நாம் அறிவதில்லை. நம்முள்ளே பெருகும் தாமச, ராசத, சாத்துவீக குணங்களை விட்டு நாம் பிரிவதில்லை. நமக்குக் கிடைத்துள்ள எட்டு சித்திகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதில்லை, அவற்றில் நமது மனத்தை செலுத்துவதும் இல்லை. பத்து மாதங்கள் கருவில் இருந்து தோன்றிய பிண்டங்களாகிய நாம் இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆறு துன்பங்கள் – பேறு, இழவு, துன்பம், பிணி, மூப்பு, சாக்காடு.  எட்டு சித்திகள் – அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்வம், வசித்வம்.


இந்த உடல் என்னும் மண்பானை!

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.  – (திருமந்திரம் – 468)

விளக்கம்:
ஆணும் பெண்ணும் இன்பமாகக் கூடும்போது, துன்பம் மிகுந்த பிறவியைத் துவக்கும் ஒரு உயிரை அங்கே உருவாக்குகிறான் நம் சிவபெருமான். தண்ணீரை இறைக்கும் கலங்களான ஒன்பது வாசல்களையும், அவற்றை செயல்படுத்தும் பதினெட்டு உறுப்புக்களையும் கொண்டு இந்த உடல் என்னும் மண்பானையை அவன் படைக்கிறான்.


ஒன்பது வாசல்களைக் கொண்ட உடல்

இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.  – (திருமந்திரம் – 467)

விளக்கம்:
எனது உடலினுள் நிற்கின்ற சிவபெருமான், எனது விதியை ஏற்கனவே ஓலையில் எழுதி என் தலையில் ஏற்றி விட்டான். அழியக்கூடிய ஐந்து புலன்கள், முப்பது கருவிகள், ஒன்பது வாசல்கள் ஆகியவிற்றின் நடுவே என் உயிரை அமைத்திருக்கிறான் அவன்.

துலை – அழியக்கூடிய