பிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்

கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
பொட்டிட்டு நின்றது பூரண மானத. – (திருமந்திரம் – 662)

விளக்கம்:
வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்பூததமனி, மனோன்மணி ஆகிய ஒன்பது சக்திகள் இப்பிரபஞ்சத்தின் இயக்கதிற்குக் காரணமானவர்கள். இவர்களின் சக்தியாலேயே நாம் பிறவிக்கு ஆளாகிறோம். இந்நவசக்திகள் நமது ஆதாரத் தாமரையின் தண்டைப் பற்றி இருக்கின்றன. நாம் அட்டாங்கயோகத்தில் நின்று குண்டலினியை மேல் எழுப்பி பல தளங்கள் மேலே சென்று புருவமத்தியில் நிறுத்தினால் அங்கே பராசக்தியுடன் பொருந்தி இருக்கலாம். பராசக்தியுடன் பொருந்தும் போது அந்த நவசக்திகளான் வாமை, சேட்டை முதலியவற்றின் செயல் மட்டுப்படும். அதனால் நாம் அடுத்து வரும் பிறவிகளைத் தவிர்க்கலாம்.