ஊர்வம்பில் தீம்பில்லை

“அந்த மொத வீட்டு கணேசன் பஸ்லேருந்து கீழ விழுந்துட்டானாம். ஆஸ்பத்திரில சீரியஸா இருக்கான்”

“அடப்பாவமே! தான் உண்டு பாட்டில் உண்டுன்னு இருப்பானே. எங்க  வச்சு விழுந்தான்?”

“மெட்ராஸ்லருந்து மதுர வர்ற வழில”

“அவ்ளோ தூரம் படியிலயா நின்னுக்கிட்டு வந்தான்?”

“பஸ்ஸோட டாப்புல படுத்தவன் அசந்து தூங்கிட்டான் போல”

“டாப்புலயா? அவன் ஏங்க அங்க போய் படுத்தான்?”

“கைல காசில்ல போல. யாருக்கும் தெரியாம மேல ஏறி படுத்துகிட்டான்”

“அடப்பாவி! இப்பிடி விழுந்தான்னா பொழைக்க முடியாத? எப்டி இருக்கான் இப்போ?”

“பொழச்சுக்கிட்டானாம். அவன் வீட்ல யாருக்கும் தெரியாது. நீ எதுவும் சொல்லிராத”

“யாரு? அந்த அழகி கிட்டயா? நான் ஏங்க அவகிட்ட பேசப்போறேன்!”

“அவ அழகியா? இந்த விஷயம் இவ்வளவு நாள் தெரியாம போச்சே”

“அப்பிடித்தான அலட்டிக்கிடுறா அவ”

“சரி இருக்கு அலட்றா. இங்க ஏன் தீயுற வாசம் வருது? ஆனா இதில ஒரு காமெடி என்னன்னா…  ஸாரிப்பா அது காமெடி இல்ல. விழுந்தவன் வலியே தெரிலன்றானாம்.”

“ஏன்? அவ்ளோ மப்பா?”

“அவன் சொல்றானாம், என் பொண்டாட்டி பண்றதெல்லாம் நெனச்சுப் பாத்தா இதெல்லாம் ஒரு வலியே இல்ல அப்படின்னு சொன்னானாம்”

“பாவங்க அவன். கல்யாணத்துக்கு முன்னால நல்லாருந்தான். ஒரு கெட்ட பழக்கம் கெடையாது. இந்த அழகி வந்தா, எல்லாம் போச்சு”

கொஞ்ச நேரம் அங்கே அப்பாடாங்கிற மாதிரி இருந்தது. ”இவ கூடத்தான் சண்டை போடுவா, ஆனா இப்படியா?  யோசிச்சுப் பார்த்தா இவள் சண்டையிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது.”

“இவரெல்லாம் என்னைக்காச்சும் குடிச்சிருக்கிறாரா? இல்ல வேற எதுவும் கெட்ட பழக்கம்தான் உண்டா? என்ன கொஞ்சம் தொண தொணம்பாரு”

ஒரு ஊர்வம்பின் முடிவு இது.

காதில் வந்து விழுந்த இன்னொரு ஊர்வம்பு  இது.

“ஏடி! உங்க அக்கா திருச்செந்தூர் கடல பாத்திட்டு இவ்ளோ தண்ணியா அப்படின்னுருக்கா. அடுத்த நாள் கடல் பத்தடி உள்ள போயிருச்சு. உன் பவிசையெல்லாம் அவகிட்ட காம்பிச்சிராத”


தலையெழுத்து – மாறுதலுக்கு உட்பட்டது

சில பேர் தெளிவாத்தான் இருப்பாங்க. ஆனால் ரொம்ப சோதனை வரும் போது ‘நம்ம நேரம் சரியில்லையோ’ அப்படிங்கிற நினைப்பு வரும். அது அந்த நெருக்கடி நேரம் மட்டும் தான், பிறகு அந்த நினைப்பை உதறிட்டு  களத்துல இறங்கிடுவாங்க.  இது நார்மலான விஷயம். இன்னொரு வகையானவர்கள் உண்டு, ’எல்லாமே விதிப்படி தான் நடக்குது. நாம என்ன தான் முட்டி மோதினாலும் நடக்குறது தான் நடக்கும்’ அப்படின்னுட்டு பெரிசா முயற்சி எதுவும் எடுக்க மாட்டாங்க. இப்படி தலைவிதியை மட்டுமே நம்பி நொந்து கொள்பவர்கள் இந்த பழமொழி நானூறு பாடலைப் படித்துப் பார்க்கலாம்.

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
இழுகினா னாகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது.

எல்லாம் ஏற்கனவே அவன் எழுதி வைத்த தலையெழுத்துப்படி தான் நடக்கும், அப்படின்னு முயற்சி எதுவும் இல்லாமல் அந்த சாமியை கும்பிட்டுகிட்டே இருந்தால் துன்பம் தீராது. “எதனாலேயோ தலையெழுத்தை தப்பா எழுதிட்டான், நாம செய்யுற முயற்சியைப் பார்த்து அந்த தவறைத்  திருத்தி கண்டிப்பாக மாற்றி எழுதுவான்” அப்படிங்கிறது தான் சரியான அணுகுமுறை.

இழுகினானாகக் காப்பதில்லையே, முன்னம் எழுதினான் ஓலை பழுது” என்பது பழமொழி.

சோம்பலை விரட்ட உதவும் இன்னும் சில பழமொழிகளைப் பார்க்கலாம்.

தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கல்லார்
பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல்
சென்னீர் அருவி மலைநாட! பாய்பவோ
வெந்நீரு மாடாதார் தீ.

 தானே செய்து முடிக்கக் கூடிய சிறிய காரியத்தை கூட, வேறு ஒருவரிடம் தள்ளி விட்டு முடிக்கச் செய்பவரிடம், முக்கியமான பெரிய பொறுப்பை கொடுத்தால், அது வேலைக்கு ஆகாது. “பாய்பவோ வெந்நீரு மாடாதார் தீ” என்பது பழமொழி. வெந்நீரில் குளிக்க முடியாதவரை தீயில் பாயச் சொன்னால் பாய்வாரோ!

ஒன்றால் சிறிதால் உதவுவதொன் றில்லையால்
என்றாங் கிருப்பின் இழுக்கம் பெரிதாகும்
அன்றைப் பகலேயும் வாழ்கலார் நின்றது
சென்றது பேரா தவர்.

ஒரு வியாபாரி விற்பனைக்கு வைத்திருக்கும் பொருள் ஒன்றெனினும் , அதுவும் சிறிதெனினும், அதை விற்க போதிய உதவி கிடைக்கவில்லை எனினும், முயற்சி இல்லாமல் சோம்பி இருந்தால் அதனால் கெடுதலே விளையும். ஒரு நாள் தன்னாலேயே அழிந்து விடுவர். விடா முயற்சியாய் சிறிய அளவிலாவது கொடுக்கல் வாங்கல் செய்து வர வேண்டும். “வாழ்கலார் நின்றது சென்றது பேராதவர்” என்பது பழமொழி. அதாவது கொடுக்கல் வாங்கல் செய்யாதவரின் வாழ்வு கடினம்.

வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டால் யாம் ஒன்றும்
பெற்றிலேம் என்பது பேதைமையே, மற்று அதனை
எவ்வம் இலராகிச் செய்க, அது அன்றோ
செய்க என்றான், உண்க என்னுமாறு

வெற்றிவேல் வேந்தன் ஏவல் செய்தால், நம்மால் முடியுமோ முடியாதோ என்று நினைப்பது அறியாமையே! வெறுப்பு எதுவும் இல்லாதவராக அந்த வேலையை சிறப்பாக செய்க. அது எப்படியென்றால் “செய்க என்றான் உண்க என்னுமாறு”.

வெற்றிவேல் வேந்தன்னு சொல்கிறார் முன்றுறையரையனார். அதாவது சக்ஸஸ்ஃபுல் பாஸ்.  அந்த பாஸுக்கு நம் வேலைத் திறன் என்ன, நம் வேலைக்கு என்ன சம்பளம் கொடுக்கணும் எல்லாமே தெரியும். அதெல்லாம் தெரிஞ்சதால தான் வெற்றி வேல் வேந்தன். அவர் நம் திறமையை நம்பி ஒரு அசைன்மண்ட் சொன்னா ஸ்பெசல் மீல்ஸ் ஆர்டர் பண்ணின மாதிரி. அள்ளி சாப்பிட வேண்டியது தான்.

புதிய வருடத்தில் கூர் அம்பு அடி இழுத்து, தடைகளைத் தகர்த்து எறிந்திட வாழ்த்துகள்!