தற்பரனின் கற்பனை இந்த உலகம்

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத முமளித் தானெங்கள் நந்தியே.  – (திருமந்திரம் – 89)

காளை, மான், மழு ஆகியவற்றை தன்னுடன் எப்போதும் கொண்டிருக்கும் சிவபெருமானின் கற்பனையாக அமைந்தது இந்த உலகம். அந்த சிவபெருமான் எனக்கு இந்த கற்பனையான உலகத்தின் மீதுள்ள பற்றினை நீக்கி, என் தலையின் மீது தன் திருவடியை வைத்து அருளினான்.

(பெற்றம் – காளை,  மழு – சிவனின் கையில் உள்ள ஆயுதம், தற்பரன் – பரம்பொருள், சராசரம் – பிரபஞ்சம், அற்றம் – நீக்கம்)

கையில் மானும் மழுவும் கொண்டுள்ள சிவன்.

மான்_மழு


பொய் சொன்ன பிரமன்

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.  – (திருமந்திரம் – 88)

பிரமனும் திருமாலும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முயன்றனர். சிவனின் தன்மையை அவர்களால் அறிய முடியவில்லை. வானுலகில் இருவரும் மீண்டும் சந்தித்தனர், திருமால் ‘என்னால் சிவபெருமானின் திருவடியைக் காண முடியவில்லை’ என்று சொன்னார்.  பிரமன் ‘நான் சிவபெருமானின் திருமுடியைக் கண்டேன்’ என்று பொய் சொன்னார்.

(படி – தன்மை,   பார் – பூமி,   மிசை – வானம்)


தமிழ்ச் சாத்திரம்

அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்
எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்
தங்கிமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. – (திருமந்திரம் – 87)

இறைவன் இந்த உடலில் அக்னியை அளவோடு வைத்தான். கடலினுள் அக்னியை வைத்து, கடல் நீர் பொங்கி உலகை அழித்து விடாமல் காத்தான். மூவாயிரம் பாடல்களுக்குள் இந்த திருமந்திரம் என்னும் தமிழ்ச் சாத்திரத்தை வைத்தான். எல்லா பொருளும் இந்த சாத்திரத்தில் அடங்கும்படிச் செய்தான்.


கண்ணாடி நாக்கு

வாவுறும் மனதுடன் வால்சுழற் றும்நாவும்
தாவுறும் வளைவுறும் தரம்குறைந் தும்பேசும்.
அடங்குமே வயங்கலால் ஆனதொரு செந்நாவும்
மடங்கினால் உடையுமே மதியுடன் பேசுமே!

(வாவுறும் – தாண்டிடும், வயங்கல் – கண்ணாடி)

இதன் original –
if only
our tongues
were made
of glass

how much
more careful
we would be
when we
speak – Shaun Shane


மந்திரமாலை!

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே. – (திருமந்திரம் – 86

இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்று உண்டு, பிறந்து விட்டால் இறப்பு என்பதும் ஒரு நாள் உறுதி. சிவபெருமான் இந்த பிறப்பு, இறப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.  நந்தி என்ற திருப்பெயர் கொண்ட அந்த சிவபெருமானை வானுலகில் உள்ள தேவர்களெல்லாம் வணங்கி, இந்த மந்திரமாலையை மனப்பாடமாகச் சொல்வார்கள். நீங்களும் கூடியிருந்து திருமந்திரம் என்று அழைக்கப்படும் இந்த மந்திரமாலையை அதன் சுவையறிந்து படித்துப் பயன் பெறுங்கள்.


காலாங்கி நாதருக்கு ஃபேஸ்புக் பிடிக்காது

சித்தர் காலாங்கி நாதர் எனக்கு அருளிய பிரத்தியேக உபதேசம் இது.

பேசவே தெரியா உனக்கிந்த
…… ஃபேஸ்புக் பக்கம் ஒருகேடா?
நாசமாய் போச்சே உனதுபணி
….. நேரம் முழுதும் வீணாச்சே!
காசதைப் பாரடா நீயென்ன
….. கருத்துகந் தசாமி பெற்றவனா?
நேசமாய் பாரடா வெளியுலகினை
….. நட்பென ஆகுமே உலகமெல்லாம்.!


யான் பெற்ற இன்பம்!

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. – (திருமந்திரம் – 85)

திருமூலர் சொல்கிறார் “ஆன்மிக அனுபவத்தில் நான் பெற்ற இன்பமெல்லாம் இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களும் பெறட்டும். விண்ணைத் தாங்கி நிற்கிற வேதப்பொருளான சிவபெருமானைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். அந்த சிவபெருமான் நம் உடலைத் தாங்கி நிற்கிறார், உணர்வுமிக்க மந்திர வடிவில். நாம் அதை உணர முயலும் போது அவர் வெளிப்பட்டு அருள்வார் ”.

விண்ணைத் தாங்கி நிற்பதும் சிவன்தான், இந்த உடலைத் தாங்கி நிற்பதும்சிவன் தான்.


வேதத்தின் சொல்லும் பொருளும்

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே. – (திருமந்திரம் – 84)

திருமூலர் சொல்கிறார் “நம் உள்ளத்தில் சிறந்து விளங்கும் நூல்களில் மிகச் சிறந்தது சிவபெருமான் அருளிய வேதமாகும். அந்த சிவபெருமான், வேதத்தின் உடலாக இருக்கும் சொற்களையும், அந்த சொற்களுக்குள் உற்பத்தியாகும் பொருளையும் எனக்கு உணர்த்தி அருள் செய்தான்”.


பொருள் கொடுத்து இருள் வாங்கலாமா?

பழமொழி நானூறு பற்றிய என்னுடைய பதிவுகளின் நோக்கம் பழம்பெருமை பேசுவதல்ல, இலக்கியம் பற்றி பேசுவதும் அல்ல. நான் இந்த நூலை சுய முன்னேற்றப் புத்தக வரிசையில், ஒரு சிறந்த நூலாகப் பார்க்கிறேன். நிறைய சுய முன்னேற்ற நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன, எவ்வளவு சிறப்பான நூலாக இருந்தாலும் அவற்றில் ஒரு அன்னியத் தன்மையை உணர முடியும். ஆனால் இவை நமது மொழியிலேயே எழுதப்பட்டவை, ஆயிரக்கணக்கான வருடங்களாக நமது மக்களின் பேச்சு வழக்கில் இருந்த பழமொழிகள் இவை.

பழமொழி நானூற்றில் உள்ள பொருட் செறிவைப் பற்றி ஆராயும் பொறுப்பை உங்களிடமே விடுகிறேன். பாடலுக்கு நான் எழுதியிருக்கும் விளக்கங்கள் ஒரு சின்ன வழிகாட்டி, அவ்வளவு தான். விளக்கத்தைப் படித்த பின் மறுபடியும் பாடலைப் படித்துப் பாருங்கள், உங்கள் வாழ்க்கை அனுபவத்திற்கு ஏற்ப இன்னும் பல நுணுக்கமான பொருள்கள் விளங்கும். இந்த நூலில் உள்ள நானூறு செய்யுள்களும், நம் முன்னோர்களின் பல ஆயிரம் வருட வாழ்க்கை அனுபவங்களின் சாரம், அதனால் இதன் பொருள் புரியும் போது பாடல்கள் எல்லாம் மனதிற்கு நெருக்கமாகி விடும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும், அவ்வளவு தான். பலாப்பழத்தை வெட்டி சுளை எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் சுளையின் ருசி?

இந்தக் கட்டுரையில், பழமொழி நானூற்றில் கல்வி என்னும் தலைப்பில் உள்ள பத்து பாடல்களைப் பற்றி பார்க்கிறோம். ‘Empty your cup’ என்று ஒரு ஜென் மொழி உண்டு. கிட்டத்தட்ட அதே பொருளில் ஒரு பழமொழியும் உண்டு – ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’. கற்றலின் போது ஏன் அப்படி தமக்கு எல்லாம் தெரியும் என்கிற மனநிலையை விலக்க வேண்டும் என்பதற்கும் பாடலில் விளக்கம் உண்டு. பாடல்களைப் பார்ப்போம் இப்போது.

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

1. ‘சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை.’ 2. ‘மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை.’ – இவை இந்தப் பாட்டில் வந்த பழமொழிகள். இளமையில் கல்வி கல்லாதவன் முதுமையில் கற்பது கடினம்! சுங்கச் சாவடியில் வரும் வண்டிகளை போக விட்ட பிறகு வரி வசூல் செய்ய முடியுமா? ஆற்றைக் கடக்க உதவும் ஓடக்காரன், ஆற்றைக் கடந்த பின் பயணிகளிடம் காசு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் காசு வந்து சேருமா? இளமை இருக்கும் போதே முடிந்த அளவு கல்வி கற்று விட வேண்டும்.

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.

கற்றறிந்த ஆசிரியர் முன்பு, கல்வி கற்கும் மாணவர்கள் நமக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையை தவிர்க்க வேண்டும். தன்னுடைய பாடத்தில் கவனத்தைக் குவித்துப் பொருள் அறிந்து கற்க வேண்டும். ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’ என்பது பழமொழி. நிறைய விஷயங்கள் தெரிந்த மாதிரி பெரியவர்களிடம் நாம் பேசினால், அவர்களும் நம்மிடம் அது பற்றி விரிவாக பேசுவார்கள். அப்போது எங்கே ஏதாவது ஏடாகூடமாக பதில் சொல்லி மாட்டிக் கொள்வோமோ என்ற பயமே நமக்கு சோர்வைக் கொடுக்கும். அந்த மனநிலையை தவிர்த்தால் பாடத்தில் கவனமும் குவியும்.

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளா ரிருள்.

விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை விலை கொடுத்து வாங்குவது, அந்த விளக்கு இருள் நீக்கி தெளிவான காட்சி காட்ட வேண்டும் என்பதற்காக. நாம் கற்கும் கல்வி, அறிவு வெளிச்சத்தைத் தருவதாக இருக்க வேண்டும். ‘பொருள் கொடுத்து கொள்ளார் இருள்’ என்பது பழமொழி.  கற்கும் கல்வி நேர்மையான நல்ல விஷயத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். யாராவது காசு கொடுத்து இருட்டை வாங்குவார்களா? எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், சாஃப்ட்வேர் எழுதுபவர்கள் புரோகிராமும் எழுதலாம், வைரஸும் எழுதலாம். படித்த படிப்பெல்லாம் வைரஸ் எழுதத்தானா?

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.

நன்கு கற்ற அறிவுடையவர்கள், உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அவர்களின் கல்வி அறிவுக்கு அங்கு நல்ல வரவேற்பிருக்கும். அவர்களுக்கு அங்கு உணவு பற்றிய கவலை தேவையில்லை. கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. ‘ஆற்று உணா வேண்டுவது இல்’ என்பது பழமொழி. நிறைந்த கல்வி கற்றவர்கள் பல நாடுகளுக்குச் சென்று வருவார்கள், அவர்களுக்கு அது வேறு நாடு என்ற தயக்கமெல்லாம் இருக்காது. தம் திறமையினால் நிறைய சம்பாதிக்கவும் செய்வார்கள், அதனால் அவர்களுக்கு உணவு பற்றிய கவலையெல்லாம் கிடையாது.

உணற்கினிய இன்னீர் பிறிதுழிஇல் லென்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா தினிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.

கிணற்றில் வாழும் தேரை, இந்தக் கிணறு தவிர வேறு எங்கும் நல்ல நீர் கிடைக்காது என்று நினைக்கும். கல்வி கற்கும் மாணவர்கள், அது போல் இல்லாது, தாம் கற்கும் நூல்களைத் தவிர பிற நூல்களைப் பற்றியும் கேட்டு அறிவதே நல்லது. ‘கற்றலிற் கேட்டலே நன்று’ என்பது பழமொழி. புத்தகங்களை  படிப்பதோடு நின்று விடாமல், விஷயம் தெரிந்தவர்களுடன் உரையாடுவதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது.

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

‘சிறுவனான இவனுக்கு வழக்கு முடிவு சொல்லத் தெரியாது’ என நினைத்தவர்களுக்கு மத்தியில் நரைமுடியுடன் வயதான வேடத்தில் வந்து வழக்கு தீர்த்தவன் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன். ‘குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்பது பழமொழி. ஒருவன் கற்கும் கல்வி, தன் குடும்பத்தினரின் தொழில் சம்பந்தப்பட்டதாக இருந்தால் அந்தக் கல்வி மிகவும் எளிதாக இருக்கும்.

புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புன லூர பொதுமக்கட் காகாதே.
பாம்பறியும் பாம்பின கால்.

சிறந்த கல்வி அறிவுடையவரின் திறனை, பிற அறிஞர்கள் எளிதாக  அடையாளம் கண்டு உணர்வார்கள். ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பது பழமொழி. கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கற்றவர்களுடைய அறிவின் தன்மை விளங்காது.

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற் றென்றும்
அயிலாலே போழ்ப அயில்.

ஒரு இரும்பை இன்னொரு கூர்மையான இரும்பைக் கொண்டுதான் பிளக்க முடியும். அது போல நன்கு கற்ற ஒருவரின் கண்ணோட்டத்தை, அவரை விட நன்கு கற்றவராலேயே உணர முடியும்.  ‘அயிலாலே போழ்ப அயில்’ என்பது பழமொழி. நல்லார் என்பதற்கு கற்றார் என்பது இங்கே பொருள். நலம் என்பதற்கு கண்ணோட்டம் என்றும் பொருள் உண்டு.

கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.

முழுமையான கல்வி கற்றவர்கள், தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ள மாட்டார்கள், அடக்கமாக இருப்பார்கள். முழுமையாகக் கற்காதவர்கள் தான் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள். ‘நிறைகுடம் நீர் தளும்பல் இல்’ என்பது பழமொழி. கற்றவவர்களின் அடக்கத்தின் பின்னால் இருக்கும் திறமைகள், அரைகுறைகளுக்குப் புரியாது.

விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு.

தரம் குறைந்த நூல்களை நாடாமல், நல்ல நெறிகளைப் படித்து உணர்ந்து அதன்படி நடப்பவர்கள் அதிகாரத்துடன் வாழ்வார்கள். அவர்கள் கொஞ்சம் கீழ்த்தரமாக நடந்தால் கூட நிலாவில் உள்ள கறை போலப் பெரிதாகத் தெரியும். ‘மதிப்புறத்துப் பட்ட மறு’ என்பது பழமொழி.


சிவமுனி!

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே. – (திருமந்திரம் – 83)

சிவமுனியாகிய நான் யோகவழியில் செல்கின்ற போது பார்த்த காட்சி இது –  மிகுதியான எண்ணிக்கையில்  தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் எல்லாம் காமனை வென்ற ஞானம் மிக்க முனிவர்களாக மாறினார்கள். அவர்களை எல்லாம் வானுலகம் நெருங்கி வருவதைப் பார்த்து வந்தேன். அதாவது அந்த யோகநிலையில் இருந்து மீண்டு வந்தேன்.

இவ்வாறு திருமூலர் சொல்கிறார்.