கூர்மன் என்னும் காற்று

கண்ணில் வியாதி உரோகந் தனஞ்சயன்
கண்ணில்  இவ்்வாணிகள் காசம் அவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே. – (திருமந்திரம் – 656)

விளக்கம்:
கண்ணில் ஏற்படும் வீக்கத்திற்கு தனஞ்சயன் என்னும் வாயு சரியாக இயங்காதது காரணம் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். கண் வீக்கத்திற்கு மட்டும் தான் தனஞ்சயன் காரணம் ஆனால் ஆராய்ந்து பார்த்தால் கண்ணில் ஏற்படும் ஆணிகளுக்கு தனஞ்சயன்  காரணம் இல்லை. கண்ணில் கூர்மன் என்னும் காற்று சரியாகப் பொருந்தாவிட்டால் கண்ணின் நரம்பு பாதிக்கப்படும். அதனால் கண்ணில் பார்வைக் குறைபாடு ஏற்படும்.


தனஞ்சயன் சரியாக இயங்கா விட்டால் …

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே. – (திருமந்திரம் – 655)

விளக்கம்:
தனஞ்சயன் என்னும் காற்று நீங்கினால் நம் உயிர் நீங்கி விடும் என்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம். தனஞ்சயன் சரியாக இயங்காவிட்டால் ஏற்படும் நோய்களை இந்தப் பாடல் சொல்கிறது. தனஞ்சயன் சரியாக இயங்காவிட்டால், உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் கட்டி, சிரங்கு, குட்டம், சோகை, வாதம், கூன், முடம், கண்ணில் ஏற்படும் வீக்கம் ஆகிய நோய்கள்  ஏற்படலாம்.


தனஞ்சயன் இல்லையென்றால் உயிர் இல்லை!

இருக்குந் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்கின்
இருக்கு முடலி லிருந்தில தாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே. – (திருமந்திரம் – 654)

விளக்கம்:
நமது உடலில் இருக்கும் ஒன்பது வாயுக்களோடும் தனஞ்சயன் என்னும் காற்று பொருந்தியிருக்கிறது. தனஞ்சயன் என்னும் காற்று இல்லாவிட்டால் இந்த உடலில் உயிர் இல்லை என்று அர்த்தம். தனஞ்சயன் நீங்கிய உடல் அழுகத் தொடங்கி விடும். இருநூற்று இருபத்து நான்கு உலகங்களிலும் இது தான் நடைமுறை.