விரிந்த சக்தி குவிந்து சிவனோடு கூடும்

விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே. – (திருமந்திரம் – 664)

விளக்கம்:
முந்தைய பாடலில் பார்த்தது போல் குண்டலினியாகிய சக்தி மேலெழும் போது பல கூறுகளாகப் பிரிகிறது. பிராணாயாமத்தின் போது சக்தி நம் மூச்சில் மறைந்து கலந்து எழுந்து  குவிகிறது. மேல் எழுந்து குவிந்து நம் உச்சியில் மறைந்திருக்கும், ஐம்பூதங்களுக்கும் காரணமான, சிவபெருமானைச் சென்று கூடும்.


பூரண சக்தியில் சிவன் கலந்திருப்பான்

பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே. – (திருமந்திரம் – 663)

விளக்கம்:
தியானத்தின் போது பூரண சக்தியானது இருபத்தோர் கூறுகளாகப் பெருகுகிறது. ஒவ்வொரு பங்கிலும் தங்கியிருக்கும் சக்தியானது எழுநூற்று அஞ்சு மடங்காகப் பெருகுகிறது. நாராயணன், பிரமன் முதலிய ஐவருக்கும் தலைவனான சிவபெருமான் சக்தியின் அனைத்துக் கூறுகளிலும் கலந்து விரிந்து இருக்கிறான்.