கரியை விலக்கி அக்கினியைக் காண்போம்

வெள்ளி யுருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே – 834

விளக்கம்:
விந்து எனும் நம் உயிர்சக்தி சகசிரதளத்தில் இருக்கும் நாதத்துடன் கலக்க விடாமல், உலக விஷயங்கள் என்னும் கரியைக் கொண்டு மூடி வைத்துள்ளார் நம்முடைய சிவபெருமான். அதாவது புறக்கலவியிலேயே நம்முடைய நாட்டம் எல்லாம் செல்கிறது.

பரியங்க யோகம் பயிலும் யோகியர், புறக்கலவியை விட்டு அகக்கலவியைக் காண, மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய அக்கினியை சுழுமுனை வழியாக மேலே ஏறச் செய்து, வலிமை உடையவராய், உள்நாக்கில் அடக்கி வைத்து சகசிரதளத்தில் இருக்கும் நாதத்துடன் சேரச் செய்வர்.

வெள்ளி – வெண்ணிற விந்து, பொன் – பொன் நிறமாகிய நாதம், கள்ளத் தட்டானார் – மறைந்திருக்கும் சிவபெருமான், கொள்ளி – குண்டலினியாகிய அக்கினி, பறிய – முன்னே செல்ல, குழல் – சுழுமுனை, உண்ணா – உள் நாக்கு, வள்ளி – வண்மை உடைய