செல்லமா அடிச்சா வலிக்குமா?

கிருத்தியைத் தேடி ராசு மாமா வந்தால் ஞாயிற்றுக்கிழமை விடிஞ்சாச்சுன்னு அர்த்தம். கிருத்தி இப்போது இரண்டாம் வகுப்பில் இருக்கிறாள். இருக்கிறாள்னு தான் சொல்லணும், படிக்கிறாள்னு சொன்னால் பிறகு நமக்கு படிப்பு வராமல் போய் விடும். இந்த ஞாயிறு எட்டு மணிக்கெல்லாம் வந்து கிருத்தியை எழுப்பி விட்டார்.

“Boring fuddy-duddy uncle” என்று திரும்பி படுத்துக்கொண்டாள்.

“நல்லா கண்ணத் தொறந்து பாரு கிருத்தி. ஜீன்ஸ், டி-ஷர்ட்ல வந்திருக்கேன். என்னைப் போய் ஓல்ட் ஃபேஷன்கிறியே”.

“மாமா. ஃபேஷன்லாம் ட்ரஸ்ல இல்லை. மனசுல இருக்கணும்”.

“சரி. இன்னைக்கு ஐஸ் க்ரீம் வாங்கலாமா?”

“You are moronic மாமா”.

“ஏடி! மாமாவை முட்டாள்னு சொல்லக் கூடாது” கிச்சனிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

“இதுலாம் மட்டும் இந்த அம்மாவுக்கு நல்லா காதுல கேட்கும்” கிருத்தி மெதுவாக மாமாவிடம் சொன்னாள். “மாமா! யாருகிட்டயும் ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் வேணுமான்னு கேட்கக் கூடாது. குடுக்கணும்னு நெனச்சா வாங்கி குடுத்துறணும். ஐஸ்கிரீம் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா?”

“கரெக்ட். சரி என்ன ஐஸ் கிரீம்? வெணிலா?”

“லைஃப்பே வெணிலாவா இருக்கு. ஐஸ்கிரீம்லயும் வெணிலாவா?” கிருத்தி கேட்டாள்.

“நீ என்ன சொல்ற?” மாமாவுக்கு ஒண்ணும் புரியலை.

”பின்ன? என்ன லைஃப் இது? ஒரே போர். இந்த அப்பாவாச்சும் இன்னொரு கல்யாணம் பண்ணலாம்” வேணும்னே அம்மாவுக்கு கேட்கிற மாதிரி சத்தம் போட்டு சொல்லி மாமாவிடம் ஒரு குட்டு வாங்கினாள்.

“சரி சொல்லு. என்ன ஃப்ளேவர் வேணும்?”

“அமெரிக்கன் டிலைட்”.

“அமெரிக்கன் டிலைட்டுக்கும் இட்டாலியன் டிலைட்டுக்கும் என்ன வித்தியாசம்?” மாமா வெணிலா தவிர வேறு ஐஸ் கிரீம் ருசித்ததில்லை.

“அமெரிக்கன் டிலைட்ல பாதாமும் பிஸ்தாவும் இருக்கும். இட்டாலியன்ல முந்திரிப் பருப்பும் செர்ரி பழமும் இருக்கும்” கிருத்தி விளக்கினாள்.

“அப்ப ப்ரபாவுக்கும் சேத்து வாங்கிடுறேன்” ப்ரபா கிருத்தியோட ஃப்ரெண்ட். ஞாயிற்றுக்கிழமை தோறும் விளையாட வந்திருவாள்.

“ரெண்டு வாரமா ப்ரபா வரல மாமா. அவங்க வீட்ல ஒரு நாய்க்குட்டி வந்ததுல இருந்து அவள கைல பிடிக்க முடில. எப்பப் பாத்தாலும் அது கூடவே வெளையாண்டுகிட்டு இருக்கா”.

“ண்ணா! ரெண்டும் வெளையாடுறதப் பாத்தா, நாய் எது பிள்ளை எதுன்னே தெரிய மாட்டேங்குது” அம்மாவின் குரல்.

மாமா ஐஸ்கிரீம் வாங்கப் போன கொஞ்ச நேரத்தில் ப்ரபா வந்தாள். எப்போதுமே இல்லாத ஒரு சோகம் அவள் முகத்தில் இருந்தது.

“ஏம் புள்ள ஒரு மாதிரியா இருக்க?” கிருத்தி கேட்டாள்.

“பஸ்டர வேற வீட்டுக்கு குடுத்துட்டாங்க” ப்ரபா அழுது விடுவாள் போலிருந்தாள்.

“ஏம்பா?”

ப்ரபா கையைக் காட்டினாள். உள்ளங்கையின் ஓரத்தில் கடிபட்ட காயம் இருந்தது.

“கடிச்சிருச்சா? கடிக்கிற நாய யாராவது வீட்ல வச்சிருப்பாங்களா? அதான் குடுத்திருப்பாங்க” ஆறுதல் சொன்ன கிருத்தியை தலையில் குட்டினாள் ப்ரபா.

“நான் குட்னது வலிக்குதா?” ப்ரபா கேட்டாள்.

“சேச்சே! நீ செல்லமாத் தானே குட்டினே?” வலித்தாலும் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள் கிருத்தி.

“பஸ்டரும் செல்லமாத் தான் கடிச்சான்”.

“புரியுதுடா! ஆனா நீ சொல்றது நம்ம பேரண்ட்ஸுக்குப் புரியாதே” கிருத்தி சமாதானம் சொன்னாள்.

ராசு மாமா ஐஸ்கிரீமோடு வந்தார். “இன்னொரு ஐஸ்கிரீமா? இத ப்ரபாவுக்கு குடுத்துருவோம்” கிருத்தி சொன்னதை மாமா புரிந்து கொண்டு அமெரிக்கன் டிலைட்டை ப்ரபாவிடம் கொடுத்தார்.

“I feel a good rapport here” என்றார் அப்போது தான் வீட்டுக்குள்ளே வந்த கிருத்தியின் அப்பா.


நெகிழ்ந்து போன வைகை எக்ஸ்பிரஸ்

வழி அனுப்ப வந்தவர்களின் கூச்சல் அடங்கி அப்போது தான் வைகை எக்ஸ்பிரஸ் கொஞ்சம் அமைதியாகி வேகம் பிடித்தது. பயணிகள் தங்களைச் சுற்றி உள்ள முகங்களை ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு நேரம் இருந்த புழுக்கம் போய் முகத்தில் பட்ட காற்றை உணர்ந்து கொஞ்சம் புன்சிரிப்பை செலவு செய்தார்கள். நாலாவது பெட்டியில் நாப்பத்து ஐந்தாம் இருக்கையில் இருந்த இளவயசுக்காரன் காலை நன்றாக அகட்டியவாறு சரிந்து உட்கார்ந்து இருந்தான். கழுத்தில் ஒரு இரும்புச் சங்கிலி, கொஞ்சம் அழுக்கான டி-சர்ட், கையில் நிறைய மோதிரங்கள் என்று அவனது தோற்றம் பார்ப்பவர்களை கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது. அவன் சுற்றி இருப்பவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் மேலேயே வெறித்துப் பார்த்தபடி இருந்தான். கையில் வைத்திருந்த ஃபோனில் ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே’ பாட்டு அலறியது. சத்தம் தாங்காமல் பக்கத்தில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், அவன் தோற்றத்தை பார்த்தால் எதுவும் சொல்ல பயமாக இருந்தது.

அந்தப் பாட்டு முடிந்தவுடன் ஃபோனை நோண்டி திரும்ப அதே பாடலை ஒலிக்க விட்டு திரும்ப வெறித்தபடி ஆனான். அவன் பக்கத்தில் இருந்த ஜன்னலோரப் பாட்டி அவனைச் சுரண்டினாள்.

“என்னா” என்றான் அவன் எரிச்சலாக.

“நான் ஹார்ட் பேஷண்ட்டுப்பா! பேஸ்மேக்கர் வச்சிருக்காங்க, இவ்வளவு சத்தமெல்லாம் என்னால தாங்க முடியாதுப்பா. கொஞ்சம் சவுண்ட கொறச்சுக்கோ” என்றாள்.

அவளை அலட்சியமாகப் பார்த்து விட்டு மறுபடியும் மேல் நோக்கி வெறிக்க ஆரம்பித்தான். அந்தப் பாட்டு நான்காவது முறையாக ஒலிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க, ஒரு நடுத்தர வயசு மீசைக்காரர் ‘நான் சொல்றேன்’ என்பது போல கை காட்டினார்.

“தம்பி! அத கொஞ்சம் நிப்பாட்டுப்பா, கொஞ்சம் உன்கிட்ட பேசணும்” என்று ஆரம்பித்தார்.

“என்ன பேசணும் என்கிட்ட?” வேண்டுமென்றே கொஞ்சம் எரிச்சல் காட்டி பேசினான்.

“எந்த ஊருப்பா நீ?”

“மதுர”

“இப்ப மெட்ராஸ் போறியா? என்ன படிச்சிருக்க?”

“பி.எஸ்சி”

“பாத்தா ரொம்ப சோர்ந்து போய் இருக்கியே! நேத்து சரியா சாப்பிடலயோ?”

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை, ஆனால் முகத்தில் இறுக்கம் தளர்ந்திருந்தது.

“இதப் பாருப்பா, என்ன கவல இருந்தாலும் சாப்பிடாம இருக்கக் கூடாது. பசி வயித்த மட்டுமில்ல, மனசையும் அரிச்சிரும்” மீசைக்காரர் அமைதியாகச் சொன்னார்.

அந்தப் பையனால பொங்கி வந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை.

“சாப்பிட்டியான்னு கேக்க எனக்கு யாருமில்லங்க, இப்படி யாரும் கேட்டதில்ல” குரல் உடைந்து அழ ஆரம்பித்தான். அந்தச் சூழ்நிலையே ரொம்ப நெகிழ்ந்து போய் இருந்தது.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த வரிசைப் பெண் வேகமாக வந்து அவன் ஃபோனை பிடுங்கினாள். வேகமாக சில நம்பரை அழுத்தி விட்டு திரும்ப தன் இருக்கைக்குப் போனாள். போன வேகத்தில் அந்தப் பையனின் ஃபோன் ஒலித்தது.

“ஒனக்கு யாரும் இல்லன்னு கவலப்படாத, நான் இருக்கேண்டா” என்றாள். ஃபோனே தேவையில்லாமல் அவள் குரல் அங்கே எல்லோருக்கும் கேட்டது.

அங்கே எல்லோருமே அழுது விடுவார்கள் போல இருந்தது. மீசைக்காரர் சண்டை போட்டிருந்த தன் மனைவிக்கு ஃபோன் செய்து பேச ஆரம்பித்தார், ‘உறவு ரீதியாக சவால் விடப்பட்ட ஒருவன்’ என்று ட்விட்டரில் ஒருவர் எழுத ஆரம்பித்தார்.

அந்த ஜன்னலோரத்தில் செத்துப் போயிருந்த கிழவியை யாரும் கவனிக்கவில்லை.


நுனிப்புல்

நுனிப்புல் மேய்வது ஒரு கலை
நுனியோடு நிறுத்திக் கொள்வது தவம்

(வயது வந்தவர்களுக்காக எழுதப்பட்டது)


நாமெல்லாம் உப்பு பொம்மைகள்

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. – (திருமந்திரம் – 136)

விளக்கம்:
கடல் நீரில் உள்ள உப்புத் தன்மை சூரியனின் வெப்பத்தினால் உப்பு என்கிற பெயருள்ள உருவம் பெறுகிறது. அந்த உப்பு மறுபடியும் நீரில் கலக்கும் போது நீரோடு நீராக மாறி விடும். அது போலவே நம்முடைய சீவனும் சிவத்தினில் இருந்து உருவம் பெற்று வந்துள்ளது. நமது ஆயுள் முடியும் போது, நாம் மறுபடியும் சிவத்தினுள் கலந்து விடுவோம் .


இரு வரிக் கதை – 09

”எல்லாரும் அமைதியா வரிசைல வாங்கப்பா!” சலிப்புடன் சொன்னார் சித்ரகுப்தர். “நீங்க என்ன எங்கள வரிசப்படியா கூட்டிட்டு வந்திருக்கீங்க?” வரிசையில் இருந்து ஒரு இளவயதுக் குரல் கேட்டது.


நமக்கு வேறு போக்கிடம் கிடையாது

சத்தமுதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடறிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.   – (திருமந்திரம் – 135)

விளக்கம்:
பஞ்ச பூதங்களால் ஆன நம்முடைய உடல், ஐந்து தன்மாத்திரைகளான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றைச்  சார்ந்திருக்கின்றன. ஆனால் நமது ஆன்மாவிற்கு பரமாத்மாவான சிவனை விட்டால் சேர்விடம் வேறு ஏது? சுத்தமான பரவெளியில் நம்முடைய ஆன்மா என்னும் சுடர், பேரொளியாகிய அந்த சிவனைச் சேரும். இதைப் புரிந்து கொண்டு, அந்த சிவனது அருட்கடலில் நாம் கலந்திருப்போம்.

நம்முடைய உடல் தன்னுடைய மூலமான ஐம்பூதங்களைச் சார்ந்திருக்கிறது. அது போல நம்முடைய ஆன்மா, தன்னுடைய மூலமான பரமாத்மாவை சார்கிறது.