திருவாவடுதுறை

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. – (திருமந்திரம் – 79)

சக்தியை தனதொரு பாகமாகக் கொண்டுள்ள சிவபெருமானைச் சேர்ந்து வழிபட்டிருந்தேன். சிவபெருமானை நான் சேர்ந்த இடம் திருவாவடுதுறை. அங்கே சிவ அறிவு எனும் நிழலில் தங்கியிருந்தேன், சிவ நாமங்கள் ஓதியபடியே!


திருமூலர் தென்னகத்துக்குக் வந்த காரணம்

மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. – (திருமந்திரம் – 77)

திருமூலர் தன் மாணவர்களில் ஒருவரான மாலங்கனைப் பார்த்து சொல்கிறார் – “மாலாங்கனே! நான் இந்த தென்திசைக்கு வந்த காரணம், நீல நிற மேனியும் சிறந்த அணிகளையும் உடைய உமையம்மைக்கு சிவபெருமான் முதன்முதலாக சொன்ன ஒழுக்கத்தை போதிக்கும் சிவாகமத்தை எடுத்து சொல்ல வந்தேன்”.


கற்கும் காலத்தில் அளவான உணவு நல்லது

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர்ந் தோமால். – (திருமந்திரம் – 76)

சதாசிவம் அருளிய தத்துவம், முத்தமிழ் மொழிகள், வேதங்கள் ஆகியவற்றை கற்கும் காலத்தில் அளவுடன் உணவு கொண்டிருந்தேன். சுகாசனத்தில் இருந்து மனம் தெளிவு பெற்றேன். அதனால் என் மனம் அந்த தத்துவங்களைப் புறக்கணிக்கவில்லை, அவற்றைக் கற்று நான் பொருள் உணர்ந்தேன்.


அருந்தவச் செல்வி

இருந்தவக் காரணம் கேளிந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. – (திருமந்திரம் – 75)

ஏழு ஆதாரங்களிலும் நான் பொருந்தியிருந்து தவம் செய்யக் காரணமாக இருந்தது என்ன தெரியுமா இந்திரனே? எல்லா உலகங்களுக்கும் தலைவியான அருந்தவச் செல்வியை அன்புடன் சேவித்து வந்தேன் பக்தியினாலே!


தனிக்கூத்து கண்ட திருமூலர்

செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே. – (திருமந்திரம் – 74)

திருமூலர் சொல்கிறார் – ”நான் சொல்லும் இந்த திருமந்திரம் சிவாகமம் என்னும் பேர் பெற்றது, அந்த ஆகமத்தை எனக்கு அருளிய நந்தி பெருமானின் திருவடியை நான் பெற்றதாலேயே! தில்லையம்பலத்தில் அந்த சிவபெருமானின் ஒப்பற்ற நடனத்தை கண்டபின் ஒப்பளவில் ஏழு கோடி யுகம் இருந்தேன்”.


திருமந்திரம் என்னும் ஆகமம்

நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. – (திருமந்திரம் – 73)

என் குருநாதரான நந்தி பெருமானின் திருவடிகளை என் தலை மேற்கொண்டு புத்தியில் நிறுத்தி வணங்குகிறேன். மாலைச் சந்திரனை தன் தலையில் சூடியுள்ள சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் நினைத்து தியானம் செய்து இந்த திருமந்திரம் என்னும் ஆகமத்தை சொல்லத் தொடங்குகிறேன் என திருமூலர் சொல்கிறார்.


மழை பெய்தாலும் கடமை தவறக்கூடாது

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே. – (திருமந்திரம் – 72)

தன் குளிர்ந்த சடையில் பவளம் சூடியுள்ள சிவபெருமான் நிறைந்த அருள் தருபவன். அந்த சிவபெருமான் தன்னிடம் மிகுந்த அன்பு வைத்திருக்கும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் செய்த உபதேசம் என்னவென்றால் எட்டுத் திசையிலும் பெரிய மழை பெய்தாலும் நியமங்களைத் தவறாமல் செய்ய வேண்டும் என்பதே!


இந்துவும் பானுவும்

இந்துவும் பானுவும் இருவரும் உயரமாய்
பந்தென ஆடுவார் பளிச்சிடும் ஒளியுடன்!
இந்துவந் தாடுவாள் இரவிலே குளிர்ச்சியாய்
முந்திடு பானுவை, முன்னெழு தினமே!

(இந்து – நிலா, பானு – சூரியன். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் எழ வேண்டும் என்பதே இந்த பாடலின் பொருள்)


சிவபெருமானிடன் உபதேசம் பெற்றவர்கள்

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. – (திருமந்திரம் – 71)

பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டுமே இல்லாத பெருமை உடையவன் சிவபெருமான். அவன் தனது கடந்த கால பெருமையை வெளியே காட்டிக் கொள்வதில்லை. சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று வடிவாகவும் உள்ள சிவபெருமான் சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய மூவர்க்கும், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் உபதேசம் அருளினான்.


மேன்மை பெற்ற குருநாதர்கள்

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. – (திருமந்திரம் – 70)

நந்தி பெருமானின் அருள் பெற்ற குருநாதர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் நான்கு திசைகளுக்கு ஒருவராக சென்று தாம் பெற்ற அனுபவங்களை எல்லாம் மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். தம்முடைய ஆன்மிக அனுபவங்களை பிறர்க்கு பகிர்ந்ததால் மேன்மையானவர் ஆனார்கள்.