இந்த கவிதைக்கு பெயர் இல்லை!

பெயர் வைத்தே பழகினோம்
எல்லாவற்றிற்கும்!
பெயரில்லா உயர்திணை இல்லை உலகினில்!
பெயரில்லா அஃறிணையும் இல்லை!

அணுவின் கருவிற்கும் பெயரிட்டோம்!
எல்லை இல்லா இப் படைப்பை
இயற்கை என்னும் சொல்லில் அடக்கி விட்டோம்!

பிரபஞ்ச இயக்கத்தின் சூட்சமத்திற்கும்
பெயர் வைத்தோம் மேதாவிகளாய்!

பெயர்களை கொண்டாடுகிறோம்.
பெயர்களை கண்டிக்கிறோம்.
பெயரை பிடித்தே தொங்குகிறோம் நாம்!

பெயர் இல்லாமலிருந்தால் ஒரு வேளை
அந்த சூட்சமத்தை உணர்ந்திருக்கலாம் நாம்!


கடவுள் எனப்படும் அனானி!

பிரியமான மனிதர்களுக்கு,

அனானி எழுதுவது. நான் பெயர் இல்லாதவன், உருவமற்றவன், காலத்திற்கு அப்பாற்பட்டவன் என்பதால் அனானி என்று சொல்லி கொள்கிறேன். அதையே எனது பெயராக்கி விடாதீர்கள். வரலாற்றில் இப்படித்தான் நிறைய நடந்திருக்கிறது. ஆன்மீக சிந்தனை என்ற பெயரில் உங்கள் மனதில் எழும் சந்தேகங்களும் குழப்பங்களும் எனது இன்பாக்ஸ்ஸில் வந்து சேர்ந்து அது பல டெட்ரா பைட்ஸ்ஸை தாண்டி விட்டது. உங்கள் கேள்விகள் என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றாலும், உங்கள் சந்தேகங்களுக்கு நான் பொறுப்பில்லை என்றாலும் FAQ எனப்படும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றிற்கு இங்கு பதில் தருகிறேன்.

1. இந்த உலகத்தை படைத்தது யார்?
டெக்னிக்கலாக தெரிய வேண்டும் என்றால் டார்வின் படிக்கலாம். வேதாந்தமாக வேண்டுமென்றால் அவரவர் உலகை அவர்களே படைக்கிறார்கள்.

2. விதி என்பது உண்மயா?
உண்மை. இதற்கு நியூட்டனின் மூன்றாம் விதி பொருந்தும்.

3. மதத்தின் பெயரால் நடக்கும் சண்டை, சச்சரவுகள் பற்றி?
அவை மதத்திற்காகவோ, அவர்களின் கடவுளுக்காகவோ இல்லை. தன்னுடய புரிதலும் நம்பிக்கையும் தான் சரியானது என்று வாதிடுகிறார்கள்.

4. இவற்றை எப்படி நிறுத்துவது?
அது என் வேலை இல்லை.

5. மரணத்திற்கு பிறகு?
செத்து பார். தெரியும்.

6. சமூக வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் ஏன்?
வலிமை உள்ளவன் வேண்டியதை அடைவான். அது இல்லாதவன் இப்படி கேள்விகள் கேட்பான்.

7. நாத்திகம் பற்றி?
அதுவும் ஒரு நம்பிக்கைதான்.

8. யோகா, தியானம் மூலம் கடவுள் தன்மை அடைய முடியுமா?
கடவுள் தன்மை என்று ஒன்று கிடையாது. முயன்றால் தன்னுடைய தன்மை உணரலாம்.

9. பேய், பிசாசுகள் உண்டா?
உண்டு. அவை எல்லோருடய எண்ணங்களிலும் உள்ளன.

10. பிரார்த்தனைகளால் பலன் உண்டா?
சந்தேகத்துடன் செய்தால் பலன் கிடையாது.

11. அரசியல் பற்றி?
சமூக வாழ்விற்கு அது மிகவும் அவசியம்.

12. அரசியலில் முறைகேடுகள் நிறைய உள்ளதே?
அவை service charges.

13. விபத்துக்கள் இப்போது நிறைய நடக்கிறதே?
விஞ்ஞான வள்ர்ச்சியின் ஒரு சிறிய பக்கவிளைவு.

14. பூஜைகள், யாகங்கள் செய்தால் பலன் உண்டா?
அவற்றை உருவாக்கியவர்களைத்தான் கேட்க வேண்டும்.

15. அவை கடவுளால் சொல்லப்பட்டதில்லையா?
நான் உருவாக்கியிருந்தால் இன்று உலகில் ஒரே வழிபாட்டு முறை தான் இருந்திருக்கும்.

16. அப்படியானால் நீங்களே ஒரு வழிபாட்டு முறை உருவாக்கி இருக்கலாமே?
என்னை வழி படச்சொல்லி நான் யாரையும் சொல்லவில்லை.