நம் பக்குவம் அறிந்து அருள்வான்

மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.  – (திருமந்திரம் – 118)

விளக்கம்:
ஐந்து தலங்களைக் கொண்ட நம் சதாசிவன், நம்முடைய ஐந்து விதமான அழுக்குகளையும் நீக்கி அருள்கிறான். சிற்றம்பலத்தில் ஆடும் அந்த நந்தி பெருமான், நம் மனம் வெளியே வேண்டாவதற்றை நோக்கிச் செல்லாதவாறு காக்கிறான். நம் உள்ளே உயிரின் உயிராய் எழுந்தருளி, நம் பக்குவம் அறிந்து அருள் செய்கிறான்.

ஐந்து மலங்கள் – ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி.  ஐந்து தலங்கள் – சிவசாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கருத்துரு சாதாக்கியம், கன்ம சாதாக்கியம்.


பெரியாழ்வார் எனக்காக எழுதிய பாடல்!

நெய்க் குடத்தைப் பற்றி ஏறும்
    எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்
    காலம் பெற உய்யப் போமின்.
மெய்க் கொண்டு வந்து புகுந்து
    வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பு - அணையோடும்
    பண்டு அன்று பட்டினம் காப்பே! - பெரியாழ்வார்.

நெய்க் குடத்தைப் பிடித்து ஏறும் எறும்புக் கூட்டத்தைப் போல, என் உடலெங்கும் பரவி நிற்கும் நோய்களே! தப்பித்து ஓடி விடுங்கள். வேதங்களின் தலைவனான எம்பிரான், தனது பாம்புப் படுக்கையுடன் வந்து என்னுள்ளே வசிக்கிறார். இந்த உடலாகிய ஊர் முன்பு போல் இல்லை, இப்போது பெருமாளின் பாதுகாவல் உள்ளது.

இந்தப் பாடலைப் படிக்கும் போது எனக்காகவே, அதுவும் இந்த சமயத்திற்காகவே எழுதப்பட்டது போல தோன்றுகிறது.


சிவன் பார்வை பட்டால் போதும்

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.   – (திருமந்திரம் – 117)

விளக்கம்:
நம்முடைய சீவனும், அதைச் சூழ்ந்துள்ள மும்மலமாகிய பற்றும், சூரிய காந்தக் கல்லும், அதைச் சுற்றியுள்ள பஞ்சும் போன்றவை ஆகும். சூரிய காந்தக் கல் தன்னை சூழ்ந்துள்ள பஞ்சைச் சுடாது. ஆனால் சூரிய ஒளி அந்தக் கல்லின் மேல் படும் போது, அந்தக் கல் தன்னைச் சூழ்ந்துள்ள பஞ்சைச் சுட்டு எரித்து விடும். அது போல சிவபெருமான் நம்முடைய குருவாகக்  காட்சி போது, நம்முடைய பற்று நம்மை விட்டு நீங்கி விடும்.


கடலில் இருந்து எழும் சூரியன்

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.   – (திருமந்திரம் – 116)

விளக்கம்:
மூங்கிலில் மறைந்திருக்கும் தீயைப் போன்று,  தலைவனான நந்தி பெருமான் நம் உடல் எனும் கோயிலில் குடி கொண்டுள்ளான். ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் அழுக்கு தீர குளிக்க வைப்பதைப் போல, அந்த சிவபெருமான்  நம்முடைய மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை நீக்கி அருளுகிறான்.  அவன் கடலில் இருந்து உதித்து எழும் சூரியன் போன்றவன் ஆவான்.

(வேய் – மூங்கில்,   தயா – அருள்,   தோயமதாய் – கடலிடமாய்)


பதி, பசு, பாசம்

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நில் லாவே. – (திருமந்திரம் – 115)

விளக்கம்:
சிவன், சீவன், தளை எனக் கூறப்படும் மூன்றில் சிவனைப் போலவே சீவனாகிய உயிரும், தளையாகிய பற்றும் மிகவும் தொன்மையானவை. சீவனும் தளையும் சிவனை அணுகாது. சிவன் நம் சீவனை அணுகி வரும் போது, பற்று எனப்படும் தளை நம்மை விட்டு நீங்கி விடும்.

(பதி – சிவன்,  பசு – சீவன், உயிர்,   பாசம் – தளை, பற்று,   அனாதி – தொன்மையானது)


பளிங்கிலே பவளம் பதித்தான்

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே. – (திருமந்திரம் – 114)

விளக்கம்:
நெற்றிகண்ணை உடைய எங்கள் நந்தி பெருமான், எம்முடைய ஆணவம், கன்மம், மாயை ஆகிய குற்றங்களை நீக்கி அருளினான். மேலும் மாசு வந்து படியா வண்ணம் எம்முள்ளே அருள் கண்ணை விழிக்கச் செய்து, மாசில்லாத ஆன்ம ஒளியைக் காட்டி அருளினான். எம் சிவபெருமானின் இந்தச் செயல், பளிங்கிலே பவளம் பதித்தது போன்றது ஆகும்.


சிவபெருமான் நம் குற்றங்களை நீக்குகிறார்

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. – (திருமந்திரம் – 113)

விளக்கம்:
சிவபெருமான் தன்னுடைய மேலான நிலையில் இருந்து இறங்கி வந்து, நம்முடைய வினைகளை எல்லாம் தீர்க்கும் விதமாக குளிர்ச்சியான தன் திருவடிகளை நமக்குச் சிறந்த பாதுகாவலாகத் தருகிறான். அவன் நம் உடலின் உள்ளேயும், உயிரின் உள்ளேயும் நின்று ஒப்பற்ற ஆனந்தத்தை நமக்குக் காட்டி, நம் குற்றங்களை எல்லாம் நீக்கி அருள் செய்தான்.

(விண்ணின்று – மேலான நிலையில்,  இழிந்து – இறங்கி வந்து,  தலைக்காவல் – சிறந்த காவல்,  உண்ணின்று – உள்+நின்று,  களிம்பு – மாசு)


என் ஒவ்வொரு அசைவிலும் சிவன் இருக்கிறான்

தானொரு கூறு சதாசிவன் எம்மிறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே. – (திருமந்திரம் – 112)

விளக்கம்:
எம் இறைவனான சதாசிவன் உலகில் உள்ள எல்லாப் பொருளிலும் தான் ஒரு அங்கமாக விளங்குகிறான். வானுலகிலும் தான் ஒரு அங்கமாக எல்லாவற்றிலும் கலந்திருக்கிறான். எம் தலைவனான அவன் என் உடலில் உயிராக கலந்திருந்து என் ஒவ்வொரு அசைவிலும் அவன் விளங்கிறான்.

(கூறு – பகுதி,  மருவி – கலந்து,  கோன் – தலைவன்,  சலம் – அசைவு)


அவரவர் தன்மைக்கு ஏற்ப காட்சி தருவான்

பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே. – (திருமந்திரம் – 111)

விளக்கம்:
சிவபெருமான் நம்முடைய உடலாகவும், உயிராகவும் விளங்குகிறான்.  நம்மிலே கலந்திருக்கும் மேலானவன் அவன் . அந்த சிவனே, வரம் தரும் திருமாலாகவும், பிரமனாகவும் விளங்குகிறான். பக்தர்கள் ஒவ்வொருவரின் தரத்திற்கேற்ப பல தன்மைகளில் காட்சி தருகிறான். யாருக்கும் விளங்காதவாறு மறைந்து நின்று அழித்தல் தொழில் செய்யும் உருத்திரனும் அவனே!

(பரம் – மேலான,   கரத்து – மறைவு,   கழிவு செய்தான் – அழிவுத் தொழில் செய்தான்)


நிர்வாகத்திற்கு உதவும் காலண்டர்

ஒரு நல்ல நிர்வாகத்திற்குத் தேவையான பாடங்கள் நமது பழந்தமிழ் இலக்கியமான பழமொழி நானூறு செய்யுள்களில் உள்ளன. அந்தப் பழமொழிகள் இப்போதும் ஒரு வெற்றிகரமான நிர்வாகத்திற்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளன. பழமொழி நானூறில் உள்ள சில பாடல்களை காலண்டராக வடிவமைத்திருக்கிறோம். எழுத்தாளர் என். சொக்கன் அவர்கள் பழமொழிச் செய்யுள்களுக்கு எளிமையாகவும் ரசிக்கும்படியாகவும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உரை எழுதியிருக்கிறார். இந்தக் காலண்டர்கள் 2014 புது வருட தினம் அன்று தங்கள் நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்றவையாகும். காலண்டர் தேவைப்படுபவர்கள் sales@scribblers.in க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தங்கள் நண்பர்களுக்கும் சிபாரிசு செய்யுங்கள். மேலும் விபரங்களுக்கு http://scribblers.in

Calendar_2014
January_2014
July_2014
Page_15