நாள் முழுவதும் மூச்சுப்பயிற்சி செய்தால் வாழ்நாளை நீட்டிக்கலாம்

பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகுந் திருத்திய பத்தே – 777

விளக்கம்:
சுழுமுனையில் ஒன்றி நின்று மூச்சுப்பயிற்சி செய்தால் ஆயுள் விருத்தி பெறலாம். ஒரு நாளின் பகல் பொழுது முழுவதும், அதாவது முப்பது நாழிகைக் காலம் தொடர்ந்து மூச்சுப்பயிற்சி செய்தால் நம்முடைய வாழ்நாளை நீடிக்கச் செய்யலாம். நம்முடைய உடல் திருத்திய வயலைப் போல ஒழுங்கு பெறுவதைக் காணலாம்.


ஆயுள் பரீட்சை

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே – 776

விளக்கம்:
முந்தைய பாடல்களில், மூச்சுக்காற்றைக் கவனித்தால் ஆயுளை அறியலாம் என்பதைப் பார்த்தோம். நம்மிடம் இருந்து வெளியேறும் மூச்சுக்காற்று, பத்து விரற்கடை அளவு நீண்டால் ஆயுள் இருபத்து எட்டு ஆண்டுகளாம். பதினைந்து விரற்கடை அளவு நீண்டால், ஆயுள் இருபத்து ஐந்து ஆண்டுகளாம்.