உயிர் ஊறும் இடம்!

மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே – 793

விளக்கம்:
நம்முடைய மூச்சுக்காற்று சந்திரகலை எனப்படும் இடைகலை வழியாகவும், சூரியகலை எனப்படும் பிங்கலை வழியாகவும் மாறி மாறி இயங்குகிறது. தியானத்தின் போது, மாறி மாறி இயங்கும் மூச்சுக்காற்றைக் கவனித்தால், சுழுமுனை எனப்படும் நடு நாடியில் உயிர் ஊறுவதைக் காணலாம். இன்னும் உற்று நோக்கினால், சுழுமுனையில் ஊறும் உயிரில் சிவபெருமானின் உக்கிரத்தை உணரலாம். இவ்வாறு மூச்சுக்காற்றைக் கவனித்து தியானித்து வந்தால், நம் உயிர் இயங்கும் முறையை தெளிந்து அறியலாம்.

மதி – சந்திரகலை எனப்படும் இடைகலை, இது இடது பக்க மூக்கில் ஓடும் மூச்சுக்காற்று, வெய்யவன் – சூரியகலை எனப்படும் பிங்கலை, இது வலது பக்க மூக்கில் ஓடும் மூச்சுக்காற்று, ஏறி இழியும் – ஏறி இறங்கும், தேறி அறிமின் – ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.