ரேகை இல்லாத உதடுகள்

ஆதி கால மனிதனுக்கும் மனிதிக்கும் உதடுகளில் ரேகை இல்லாமல் இருந்தது. இந்த மனிதிங்கிற வார்த்தை தான் மருவி இப்போ மதினின்னு ஆயிடுச்சு. ரேகை இல்லாத உதடுங்க எல்லாம் ஒரு வித மினுமினுப்போட ஈரத்தோட இருந்தது. இதனால ஆண் பெண் இடையே உள்ள அந்த தூண்டுதல் அப்போ கொஞ்சம் அதிகம். இதுல ப்ரச்சனை எங்கே ஆரம்பிச்சதுன்னா, தூண்டுதலின் வேகம் அதிகமா இருந்ததாலயும், உதடுங்க க்ரிப் இல்லாம வழுக்கலா இருந்ததாலயும் அடிபட்டு நிறைய பேருக்கு மூக்கு ஒடைஞ்சு போச்சு. இப்போ கூட பழைய கோவில்கள்ல பாருங்க, நிறைய சிலைகளுக்கு மூக்கு உடைஞ்சிருக்கும். பிறகு பரிணாம வளர்ச்சியில மனுஷனுக்கு உதட்டுல ரேகை வர ஆரம்பிச்சது, ஒரு க்ரிப்பும் கிடச்சது. அதனால தான் இப்போ நம்ம மூக்கு எல்லாம் முழுசா இருக்கு.

அப்ப எல்லாம் பசங்க யாருக்காவது மூக்கு ஒடஞ்சதுன்னா ஃப்ரண்ட்ஸ்ஸுக்கு பார்ட்டி வைக்கணும். மூக்கு சரியாகிற வரைக்கும் வீட்டு பக்கம் தலை காட்ட முடியாது. பொண்ணுங்க பாடு தான் கொஞ்சம் கஷ்டமா இருந்ததாம். ஆனாலும் இதெல்லாம் வயசுக் கோளாருன்னு கண்டுக்காம இருக்கிற மனப்பான்மையும் பெருசுங்ககிட்ட கொஞ்சம் இருந்திருக்கு. இந்த மாதிரி விஷயத்துக்குன்னே ஸ்பெசலிஸ்ட் வைத்தியர்களெல்லாம் இருந்திருக்காங்க. அந்த வைத்தியம் பத்தி அகத்தியர் எழுதின சில சுவடிங்க என்கிட்ட இருக்கு.

நம்ம நாட்டுல சத்தமில்லாம ரகசியமா ஒரு ஆராய்ச்சி நடந்துகிட்டு இருக்கு. செவ்வாய் கிரகத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஆளுங்கள கூட்டிட்டு போய் பாதி வழில கழட்டி விட்டா என்னங்கிறது தான் அந்த ஆராய்ச்சி. அங்கே வேலை பார்க்கிற ஒரு பெண் என் கூட படிச்சவ. அவள் சொன்ன தகவல் இது. முன்னெல்லாம் அங்கே உள்ள செக்யூரிட்டி சிஸ்டம் ரெட்டினா ஸ்கேன் பண்ணி தான் ஆளுங்கள உள்ளே விடுமாம். இப்போ ஆதார் அட்டைக்கே ரெட்டினா ஸ்கேன் உபயோகிக்கிறதுனால சிஸ்டத்த மாத்திட்டாங்களாம். டான் ப்ரௌன் கூட இந்த ரெட்டினா ஸ்கேன் பத்தி என்னமோ பெரிய டெக்னாலஜி மாதிரி எழுதி சாகடிச்சிருப்பார். இப்பெல்லாம் செக்யூரிட்டி சிஸ்டம் வேற மாதிரி. வேலைக்கு வர்றவங்க மூடியிருக்கிற கதவை கிஸ் பண்ணனும், சரியான ஆளா இருந்தா கதவு திறக்கும். இல்லேன்னா ஷாக் அடிச்சு அங்கயே சாக வேண்டியது தான். அங்கே உள்ள எல்லாருடைய உதட்டு ரேகைகளும் டேட்டா பேஸ்ல வச்சிருக்காங்க.

இது பத்தி டெக்னிக்கலா இன்னொரு சமயம் எழுதுறேன்.