கரிமா எனப்படும் சித்தி!

ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலா
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே. – (திருமந்திரம் – 680)

விளக்கம்:
பிராத்தி எனும் சித்தி பெற்று குண்டலினியின் தன்மையையும், ஐம்பூதங்களின் இயக்கத்தையும் தள்ளி நின்று கவனிக்கும் போது எல்லாவற்றையும் மேலிருந்து பார்க்கும் அனுபவம் கிடைக்கும். விண்ணின்று பார்க்கும் இத்தன்மையே கரிமா எனப்படும் சித்தியாகும். இப்படிப் பார்க்கும் போது இந்தப் பூமியின் பரப்பளவை ஒப்பிட்டு நாமெல்லாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உனரலாம். இந்த உலகத்தின் வயதை ஒப்பிடும் போது நமது வாழ்நாள் எல்லாம் மிக சொற்ப காலமே என்பதும் புரியும். இதனால் காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் வாழலாம்.


பிராத்தி எனப்படும் சித்தி பெறலாம்

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமே. – (திருமந்திரம் – 679)

விளக்கம்:
அட்டாங்கயோகம் பயிலும் காலத்தில் தத்துவ நாயகியான பராசக்தியை அறிந்து கொள்வதுடன், ஐம்பூதங்களின் இயக்கத்தையும் தள்ளி நின்று உணரலாம். இவ்வாறு ஐம்பூதங்களின் இயக்கத்தால் பாதிக்கப்படாமல் ஓராண்டு காலம் அவற்றை கவனித்து வந்தால், பிராத்தி எனப்படும் சித்தி பெறலாம்.